Thursday, February 27, 2014

மின்சாரம் பற்றி அகத்தியர் கண்டுபிடிப்பு

குட்டை உருவம் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் !!!!!!

குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
முதலில் யாரிந்த சாமியார் என்பதை தெரிவித்து விடுகிறோம். இவர் தாங்க "அகத்தியர்". ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும் யூகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம்.

தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவியல் தொழில் நுட்பத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளை நாம் தந்திருந்தோம். சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு.

"சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்"

புரியலை நா விட்டுடுங்க..., நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி.
இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்,

"ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்"

மித்ரவருனசக்தியா அப்படினா என்ன? சித்தர்கள் தவமிருந்து கிடைக்கிற சக்தியா?

Rao Saheb Krishnaji Vajhe (சுருக்கமாய் கிருஷ்ணாஜி) 1891 ஆம் ஆண்டு புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, தமது துறை சார்ந்த விடயங்களை பண்டைய கால படைப்புகளில் தேடலைத் தொடங்கினார். அப்போது உஜ்ஜெய்னி மாகாணத்தைச் சேர்ந்த Damodar Tryambak Joshi (சுருக்கமாய் ஜோஷி) ஜோஷியிடம் ஒரு சில பண்டைய ஆவனங்களைப் பெற்றுத் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அது சுமார் கி.மு 1550 ஆம் ஆண்டின் ஆவணம். நாம் மேலே பார்த்த அந்த வரிகளைப் படித்த உடன் அதைப் பற்றி தெரிந்து கொள்ள சமஸ்கிருத வல்லுனரான Dr.M.C.Sahastrabuddhe (சுருக்கமாய் புத்தே) அவர்களை அணுகினார். புத்தே அப்போது நாக்புர் பல்கலைக்கழக சம்ஸ்கிருதத் துறைத் தலைவர். அவர் இதைப் படித்துப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் அதிர்ந்து போய் இது ஏதோ ஒரு டேனியல் செல்லைப் போன்ற மின்கலத்தின் கட்டுமானத்தைப் போன்று இருக்கிறது என்றார். சரி இதை மேலும் ஆராய வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொள்ள புத்தே அதை நாக்பூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுனர் P.P. Hole (ஹோல்) அவர்களிடம் அதைக் கொடுத்து ஆராயச் சொன்னார். இதைக் கேட்டதும் நமது கிருஷ்ணாஜிக்கு உற்சாகம் பீறிட்டு வர அவரும் களத்தில் குதித்தார்.

ஒவ்வொன்றாய் படித்து படித்து அதில் கூறப்பட்டதைப் போன்றே தனது மின்கலத்தை வடிவமைக்கும் போது அவர் வந்து முட்டி மோதி நின்ற இடம் சிகிக்ரிவம் என்ற சொல். நாமும் கூட அதை படிக்கையில் என்ன அது என்று சற்று யோசித்திருப்போம். அவர்களும் இது என்னவாய் இருக்கும் எனத் திணரும் போது ஒரு சமஸ்கிருத அகராதியில் "மயிலின் கழுத்துப் பகுதி" என்று இருந்ததைப் பார்த்தார்கள். உடனே அவர்கள் இருவரும் பக்ஹ் என்ற ஒரு மயில் சரணாலயத்தில் தலைமைப் பொருப்பாளராய் இருந்தவரிடம் போய் ஏதாவது இறந்த மயில்கள் உள்ளதா அல்லது இங்கிருக்கும் மயில்கள் எப்போது சாகும் என கேட்க அவருக்கு கோபமே வந்துவிட்டது. பிறகு இவ்விருவரும் நிலைமையை விளக்கிக் கூற உடனே பக்ஹ் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். இருவரும் திகைப்புடன் அவரை நோக்க பக்ஹ் சொன்னார் "அது மயிலின் கழுத்து அல்ல மயிலின் கழுத்தைப் போன்ற நிறம் உள்ள பொருள்". இதைக் கேட்டதும் அவர்களுக்கு சிந்தனை முளைத்தது. ஆஹா! ஆம்! அது தான் அது!, மயிலின் கழுத்து நிறம்! அதே தான். காப்பர் சல்ஃபேட்! கண்டுபிடித்தாகிவிட்டது.

அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரானது. அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit Current. கிடைக்கப்பெற்றது. ஆமாம்! வெள்ளைக்காரன் Electric current என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம் பாட்டன் இட்ட பெயர் மித்ரவருண சக்தி.

இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு. வருணன் என்றால் தண்ணீர் என்பது நாம் அறிந்ததே, மிதரன் என்றால் சூரியன் என்று பொருள். ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்.

என்னப்பா இது அந்த காலத்துல மின்சாரமா என்று கேட்கிறீர்களா? தேடுங்கள் கூகுள் தளத்தில், பாக்தாத் பேட்டரி என்று ஆங்கிலத்தில். அது மட்டும் அல்ல ஹிஸ்டரி சேனலின் "தி ஏன்ஸியண்ட் ஏலியன்ஸ்' தொட்ரைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கக் கூடும்.

இருங்க இருங்க.., நம்ம பாட்டன் இதோட நிருத்திடல.. இன்னும் கொஞ்சம் தகவல் மட்டும் சுருக்கமாய் சொல்லி முடித்து விடுகிறோம்..

அவர் மேலும் கூறுவது, இது போல 100 கலன்களை செய்து தண்ணீரைப் பயன்படுத்தினால் அது பிராண வாயுவாகவும் ஹைட்ரஜனாகவும் பிரியும் என்கிறார். இந்த ஹைட்ரஜன் மிதக்கும் தன்மையுடையது எனவும் இதை ஒரு பையில் அடைத்தால் பறக்கப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கிறார். அது மட்டுமல்லாமல் இதே அகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால "electroplating" என்று சொல்லக் கூடிய அதே முறையை தெள்ளத் தெளிவாக விவரித்து செயற்கையாக தங்கத்திற்கு சாயம் பூசுவது எப்படி என்றும் குறிப்பிட்டுள்ளார்.


குறிப்பு : அகத்தியர் வாழ்ந்த காலகட்டம் குறித்த தெளிவான புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை. சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இருந்து 3500 ஆண்டுகளுக்கு முன் வரை வெவ்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அதனால் இந்த அறிவியல் பொக்கிடம் நிச்சயம் குறைந்தது 3500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழனால் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறலாம்.

“இங்கிலீஷ் எழுத்துக் கணக்குப்படி பேர் மாற்றம் செய்வது சரியல்ல!


பரீட்சையில் நிறைய மார்க் வாங்கினால்தான் மேலே படிக்க முடியும். இல்லையென்றால்வெறும் போஸ்ட் கிராஜூவேட் படிப்புடன் நின்றுவிட வேண்டியதுதான்.
நான் எவ்வளவு முயன்றும் எண்பதுக்கு மேல் வாங்க முடியவில்லை. தொண்ணூறாவது வேணும் ந்யூமராலஜி பிரகாரம் பெயரை மாற்றி வைத்துக்
கொண்டால் மார்க் நிறைய கிடைக்கும் என்றார்கள். எண் கணித ஜோதிடர் ஒருவரிடம் போனேன். நாராயணசாமி (Narayanaswami) என்ற பெயரை ‘Narain’ என்று வைத்துக்கொள்ளச்சொல்கிறார். பெரியவா உத்திரவு கொடுத்தால்
‘நாரெய்ன்’ என்று வைத்துக்கொள்வேன்.
பெரியவா சந்நிதியில் பதினைந்து பேர் நின்றுகொண்டிருந்த போது தன் விண்ணப்பத்தைச் சொல்லி முடித்தான், கல்லூரி மாணவன் ஒருவன்.
இதை சாக்காக வைத்துக்கொண்டு பெரியவாள் ஒரு சிறு சொற்பொழிவே நிகழ்த்திவிட்டார்கள்!
“நாற்பது சமஸ்காரங்களில் ஒன்று நாமகரணம். பலபேர்கள் முன்னிலையில், வேத மந்திரங்களைக் கூறி நிகழ்த்தப்படும் சடங்கு, நாமகரணம் செய்வதற்கு (பெயர் வைப்பதற்கு)த்தான் வேத மந்திரங்கள் இருக்கின்றன.
நாமவிகரணத்துக்கு (பெயரை சிதைத்து, மாற்றுவதற்கு) இல்லவே இல்லை.
ஸ்வாமி பெயரைத்தான் வைக்கச் சொல்லியிருக்கு ‘நம்பி,பிம்பி’ என்று பெயர் வைத்தால் அதெல்லாம் பின்னால் காப்பாற்றாது; ‘கண்ணன் பெயரை
வையுங்கள்’ என்று ஓர் ஆழ்வார் பாடியிருக்கிறார்.
நாராயணசுவாமியை, அவ்வளவு நீளமாகக் கூப்பிடாவிட்டாலும் , நாராயணா, நாராயணா என்று அழைப்பார்கள்.சுலபமா புண்ணியம் கிடைச்சிடும்.
ந்யூமராலஜி என்று சமீப காலத்தில் பிரசித்தமாக இருக்கு. ஒவ்வோர் இங்கிலீஷ் எழுத்துக்கும் நம்பர் கொடுத்து, அதைக் கூட்டி ,’நல்லது கெட்டது’ என்கிறார்கள். இது, சுதேசிச் சரக்கு இல்லை என்பது தெரிகிறது. எண் கணிதப்படி பெயர் மாற்றம் செய்து கொண்டவர்களில் பலர், நல்ல பலன் கிடைத்தது என்கிறார்கள்….
அது போகட்டும், ந்யூமராலஜியைப் பற்றி இப்போ தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை.
பையனுக்கு நிறைய மார்க் வாங்கணும் என்று கவலை, அதனால் பெயரைக் கொஞ்சம் மாற்றி வைத்துக்கொண்டால், ஆதாயம் கிடைக்காதா என்று பார்க்கிறான். அந்த ஆசை சரிதான்; வழி அவ்வளவு சரியில்லையோ? என்று சிந்திக்க வைக்கிறது.
கல்வி அறிவை சரஸ்வதி கடாக்ஷம் என்பார்கள். சரஸ்வதியின் அருள் இருந்தால் படிப்பு வரும்; மார்க் வரும். அதற்கு என்ன செய்யணும்.
சரஸ்வதி ஸ்தோத்திரம் இருக்கு. சௌந்தர்யலஹரியிலே மூணு சுலோகம்,
ஸாரஸ்வத ப்ரயோகம்,மேதா ஸூக்தம் என்று வேத மந்திரமே இருக்கு.
குமரகுருபரரின் சகலகலாவல்லிமால, கம்பநாட்டாழ்வாரின் சரஸ்வதி ஸ்தோத்திரம் எல்லாம் பாராயணம் செய்யலாம்.
ஹயக்ரீவர் என்று விஷ்ணு அவதாரம். அவர்தான் சகல கலைகளுக்கும்,
ட்ரெஷர் ஹௌஸ் என்பார்கள். ஹயக்ரீவ ஸ்தோத்திரம், மந்திரம் இருக்கு.
மேதா தக்ஷிணாமூர்த்தி மந்திரம் இருக்கு.
இவைகளையெல்லாம் லட்சியம் செய்யாமல் இங்கிலீஷ் எழுத்துக் கணக்குப்படி பேர் மாற்றம் செய்து கொள்வது, சாஸ்திர சம்மதமாகப் படவில்லை.”
இத்தனை விஷயங்களையும் பொதுவாகச்சொல்லிவிட்டு, பின்னர் மாணவனைப் பார்த்தார்கள் பெரியவாள்.
அவன் கண்கள் கெஞ்சிக் கொண்டிருந்தன.
தொண்டர் மூலமாகப் பிரசாதம் கொடுக்கச்சொன்னபோது, மாணவன் பெயரைக்
கேட்கச் சொன்னார்கள் பெரியவாள்.
“நாராயணஸ்வாமி” என்று கம்பீரமாகப் பதில் வந்தது!

வீட்டில் ஐஸ்வர்யமும், தனமும் என்றும் பெருக

வீட்டில் ஐஸ்வர்யமும், தனமும் என்றும் பெருக - சில அடிப்படை தகவல்களை தெரிந்துகொள்வோம்.....!

1. அதிகாலை 5 மணிக்கு கொல்லைப்புற வாசலைத் திறந்து வைத்து அதன் பின்னரே தலைவாசலைத் திறக்க வேண்டும்.

2. அதிகாலை விழித்தவுடன் பசுவையாவது, தன்முகத்தையாவது, தன் வலது உள்ளங்கையாவது முதலில் பார்த்துவிட வேண்டும்.

3. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 5 முகம் கொண்ட குத்துவிளக்கு ஏற்றி திருமகளை வழிபட வேண்டும்.

4. வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.

5. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும், மாலை குளித்து சத்ய நாராயணரை துளசி, செண்பக மலர் இவைகளால் அர்ச்சித்து, பால் பாயாசம், கற்கண்டு கனி வகை வைத்து வணங்கிய பின்னரே இரவு உணவு உண்ண வேண்டும்.

6. வைரம், வெள்ளி பாத்திரங்கள் லட்சுமி கடாட்சம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். ஒருவர் தனக்குச் சீராக அளிக்கப்பட்ட மேற்கூறியவற்றைத் தனது ஜீவித காலத்தில் விற்கவோ, தன் பிள்ளைகளுக்கோ கூட அன்பளிப்பாகவும் கொடுக்கக் கூடாது. தன் காலத்திற்குப் பின்னரே அவர்களுக்கு சேர வேண்டும். முடிந்தால் அவர்களுக்கு புதியதாக வாங்கிக் கொடுக்கலாம்.

7. ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்.

8. வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

9. இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்க கூடாது.

10. வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது, வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.

11. சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது.

12. குத்து விளக்கை தானாக அணைய விடக்கூடாது, ஊதியும் அணைக்க கூடாது. புஷ்பத்தினாலும் அணைக்க கூடாது.

13. வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. இழவு என்றும் கூறக்கூடாது.

14. அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது

15. துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது.

16. உப்பைத் தரையில் சிந்தக் கூடாது. அரிசியைக் கழுவும் போது தரையில் சிந்தக் கூடாது.

Wednesday, February 12, 2014

அகங்காரம் வெந்து சாம்பலாகும்


ஒரு வீட்டை வாடகைக்கு விடவேண்டுமென்றால் உடைசல். விரிசல்களைப் பூசி வெள்ளையடித்து அதன் பிறகு தான் மனிதர்களை குடி அமர்த்துகிறோம். சாதாரண மனிதர்களை குடிவைப்பதற்கே இத்தனை பிரயத்தனமென்றால் சர்வ வல்லமை படைத்த இறைவனை நம் உள்ளத்தில் குடிவைக்க நமக்குள் இருக்கும் எத்தனை மாசுகளை நாம் துடைத்தெறிய வேண்டும்? அதற்கு நாம் எவ்வளவு அரும்பாடுபட்டு உழைக்க வேண்டும் என்பதை உணரும்போது பெரும்மலைப்பாக இருக்கிறது.

நம் அனைத்து தீய செயல்களுக்கும், நம் தவறான நடவடிக்கைகள் எல்லாவற்றிற்கும் நம் மனமே மூல காரணமாக இருக்கிறது, ஒரு மீன் வியாபாரி இருந்தான், வியாபாரத்தை முடித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பும் போது பெரும்மழை பிடித்துக் கொண்டதால் வழியில் இருந்த அவன் பூக்கார நண்பன் வீட்டில் இரவு தங்கினான், அன்று இரவு முழுக்க அவனுக்கு உறக்கம் வரவில்லை ஏன்? மீன் நாற்றத்திலேயே உறங்கிப்பழக்கப்பட்டவனுக்கு பூவாசம் பெரும் தொல்லையாக இருந்தது,அதேபோன்றுதான் நம் மனம் முடைநாற்றம் வீசும் எண்ணங்களுக்குஉள்ளேயே முடங்கிக் கிடப்பதனால் பக்திப் படியேறி ஞானரதத்தில் பயணம் செய்ய முடியாமல் தட்டுத் தடுமாறி தரங்கெட்டுக் கிடக்கிறோம்,

இல்லையே? நான் அப்படி இல்லையே? நான் தினசரி பூஜை செய்கிறேன், தியானம் செய்கிறேன் அனைத்து விரதங்களையும் தவறாமல் கடைபிடிக்கிறேன், ஆனாலும் ஞானரதப் பயணம் எனக்குக் கிடைக்கவில்லையே? துன்பத்திலே அல்லவா துவண்டு கிடக்கிறேன்? தோல்வியில்அல்லவா துடிதுடித்து சாகின்றேன்? என்று சிலர் முணுமுணுப்பது நமக்குக் கேட்கிறது,

அவர்களைப் பார்த்து ஒன்று கேட்கிறேன், உங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் உங்கள் விரதமும். பூஜையும்பகவானை நோக்கியா? பகட்டான வாழ்வை நோக்கியா? நிச்சயமாக நாம் வெளிப் பொருள் வேண்டியே வேள்விகள் செய்கிறோம், ஒரு விவசாயி இரவு முழுவதும் கரும்புத் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சினான்,விடிந்தபின் தோட்டத்தைப் பார்த்த விவசாயி பதைத்து போனான்,காரணம் இரவு முழுவதும் கஷ்டப்பட்டு இரைத்து பாய்ச்சிய தண்ணீர் தோட்டத்திற்குள் துளிகூட இல்லை, எலி ஒன்று தோண்டிய வளையால் வாய்க்கால் வழி உடைந்து வெற்று நிலத்திற்கு நீரெல்லாம் போய்விட்டது, புகழ். வெற்றி. பொருள் ஆகியவற்றில் கருத்தூன்றி பக்தன் செய்யும் அனைத்து விதமான ஈஸ்வர ஆராதனை ஒரு பலனும் இல்லாமல் எலி வளைத் தண்ணீராகத் தான் முடியும்,



இப்படிப்பட்ட பூஜையும்.பிரார்த்தனையும் ஆயுள் முழுக்க செய்தாலும் புறப்பட்ட இடத்திலேயே நகரவே நகராமல் நடந்து கொண்டிருப்போம், குழந்தை தாயிடம் ஆடை கேட்கிறதா? அணிகலன்கள் கேட்கிறதா? ஆனாலும் தாய் அவைகளை குழந்தைக்குத் தராமலா இருக்கிறாள், தாய்க்குத் தெரியும் தன் குழந்தைக்கு எதை எப்போது கொடுக்க வேண்டுமென்று, நாம் விவரம் புரியாமல் வெய்யில் காலத்தில் கம்பளியும். பனிக்காலத்தில்ஜஸ்கிரிமும் கேட்டால் எந்தத் தாய்தான் தருவாள்? தாயை விட சாலப்பரிவு உடையவன் இறைவன், அவனிடம் உன்னை முழுவதுமாகஒப்படைத்து விடு, உன் குறைகளை நிறையாக்குவது அவன் வேலை,அவனை மட்டுமே அடைய அழுவதும். தொழுவதும் தான் உன்வேலை, அவனை நீ அடைய வேண்டுமென்றால் உன்னை அவன் முதலில் அடையவேண்டும், அதற்கு நீ ஆமைபோல் ஐம்புலன் களையும் அடக்க பிரயத்தனம் எடுக்க வேண்டும், மந்திரித்த கடுகை பேய் பிடித்தவன் மீது அள்ளி வீசினால் பேய் அகன்று விடும்,

ஆனால் பேய் கடுகுக்குள்யே புகுந்து விட்டால் அந்தக் கடுகு எப்படிப் பேயை விரட்டும், அதேபோன்றுதான் பகவானை மனதால் தியானிக்க வேண்டும், தியானிக்க வேண்டிய மனதிலேயே காமகுரோதங்கள் நிறைந்து விட்டால் அதைக் கொண்டு எப்படி தியானிப்பது,படகைக்கொண்டு தான் ஆற்றைக் கடக்க வேண்டும், படகே பாம்பானால்அக்கரையுமில்லாமல். இக்கரையுமில்லாமல் நடு ஆற்றிலே நிற்கதியாகப்போகவேண்டியதுதான்.

மன மாசுக்களை அகற்றும் எண்ணம் ஞானத்தால் மட்டுமே உருவாகும், அந்த ஞானத்தைத் தருவது சூரியனாகும், சூரியன் என்பது வானத்தில் உள்ள வட்டப் பொட்டு அல்ல! உன் புருவங்களுக்கு மத்தியில்உள்ள மூளையின் வாசல் . ஓடுகின்ற மனத பிடித்து இழுத்து வந்து அந்த மையத்தில் கட்டு மனதிற்குள் மண்டிக் கிடக்கும் அஞ்ஞானக் குப்பைகள் பற்றி எரியும் அகங்கார கோபங்கள் வெந்து சாம்பலாகும்.

நன்றி 

http://keyemdharmalingam.blogspot.in

Thursday, February 6, 2014

தினம் ஒரு திருமந்திரம் 06-02-2014

எண்ணாக் கருடனை ஏட்டில் உகாரமிட்டு
எண்ணாப் பொன்னாளில் எழுவெள்ளி பூசிடா
வெண்ணாவல் பலகையில் இட்டுமேற் கேநோக்கி
எண்ணா எழுத்தோடுஎண் ணாயிரம் வேண்டிலே.

பொருள் : எண்ணப்படுகின்ற ஆகர்ஷண முறையாவது ஏட்டில் உகாரத்தையிட்டு, எண்ணுதற்கு அருமையான வியாழக் கிழமைகளில் வெள்ளிப் பொடிப் பூசி, வெண்ணாவல் பலகையில் வைத்து மேற்கு நோக்கி பிரணவத் தியானம் எண்ணாயிரம் செய்க. (கருடணை - என்றும் பாடம். ஒப்பாம் நிலைமை - என்று பொருள்.)

Wednesday, February 5, 2014

அருள்மிகு ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில்


தலமும் இருப்பிடமும்:
கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கே தஞ்சை செல்லும் சாலையில் 2.கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

தலப்பெயர்கள்:
அருள்மிகு ஸ்ரீஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில்

தலவிருட்சம் : வில்வம்

மூர்த்திகள்:
இறைவன்:அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர்
இறைவி:மந்திர பீடேஷ்வரி அருள்மிகு மங்கள நாயகி

தீர்த்தங்கள் : மகாமகம், காவிரி,அரிசெல்லாறு

திருமுறை : ஸ்ரீசம்பந்தர், ஸ்ரீஅப்பர்
தலப்பெருமை:
பிரளய காலத்தில் இறைவன் அருளிய வண்ணம் பிரம்ம தேவர் அமுதத்தையும் மண்ணையும் சேர்த்துப் பிசைந்து மாயா மயமாகிய குடத்தைச் செய்து அதனுள் அமுதத்தையும், சிருஷ்டி பீஜத்தை வைத்து குடத்தின் மேல் மாவிலை வில்வம், தேங்காய் பூணூல் முதலியவைகளைச் சேர்த்து ஓர் உறியில் குடத்தை வைத்து மேருமலையில் ஓர் இடத்தில் சேர்க்க, பிரளய வெள்ளத்தில் அக்குடம் மிதந்து தென்திசை நோக்கி வந்தது. ஓர் இடத்தில் தங்கியது. குடத்தின் மேல் அணியிருந்த மாவிலை, தேங்காய், வில்வம், பூணூல் முதலியவை பிரளயத்தின் பெருங்காற்றால் சிதறுண்டு பல் வேறிடங்களில் விழுந்தன. அவை விழுந்த இடங்களில் எல்லாம் தனித்தனி இலிங்கங்கான் ஏற்பட்டுப் பற்பல கோயில்களாக விளங்குகின்றன. மாவிலை வன்னி மரமாயிற்று. அப்போது சிவபெருமான் வேட வடிவங்கொண்டு அமுத கும்பம் தாங்கிய இடத்துக்கு வந்து தூரத்தில் இருந்தபடியே கும்பத்தின் மீது ஓர் அம்பை (பாணத்தை) எய்தார். பாணம் எய்த இடம் பாணபுரி என்னும் தலமாகும். அந்த அம்பு அமுத கும்பத்தின் மூக்கைச் சிதைத்தது. அதன் மூலம் அமுதம் நாலாபக்கங்களிலும் பரவியது. இக்காரணத்தால் இத்தலம் குடமுழுக்கு என்ற பெயரை அடைந்தது. பின்பு சிவபெருமான் கும்பத்தை அணுகி அமுதத்தால் நனைந்த வெண்மணலை வாரிக்கும்பத்தில் சேர்த்து இலிங்க வடிவமாகித் தாமும் அதனுள் புகுந்து மறைந்தார். இவ்விதம் கும்பத்தில் தோன்றியதால் கும்பேஸ்வரர் ஆனார்.
அருள் மிகு கும்பேஸ்வரர் சிவலிங்கத் திருமேனியில் சற்று புதுமையுடன் காணப்படுகிறார். பாணம் கீழே பருத்தும் முடி சற்று சிறுத்தும் சாய்ந்தி ருப்பதும் போல் தோன்றுகிறது. அமுத வெண்மணல் லிங்கமாதலால் தங்கக் கவசம் சார்த்தியே அபிஷேகம் செய்கிறார்கள் சந்நிதியின் அமைப்பு கண் கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.
இக்கோயிலில் அடுத்து ஓர் மணங்கவர் சந்நிதி அம்பாளுடைய கோயிலாகும். அம்பாள் தம்மை அன்போடு தொழுவோர்க்குத் திவ்விய மங்கள்நாயகி என்னும் பெயரைப் பெற்றிருக்கிறார். மந்திர பீடத்தில் எழுந்தருளியிருந்து மங்கள பீடேசுவரியாக நின்று அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.
இக்கோயிலில் நவராத்திரி மண்டபத்தின் மேல் இடத்தில் இருபத்தேழு நட்சத்திரங்களுடன் பன்னிரண்டு இராசிகளும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள சிற்ப மாட்சி குறிப்பிடதக்கது. இதேபோல் சில தெய்வ மாட்சிகளையும் குறிப்பிடலாம்.
தலச்சிறப்பு:
இக்கோயிற் கருவறை சதுர வடிவுடையது. கருவறையில் உள்ள மூல லிங்கம் ஆதிகும்பேஸ்வரர் என்ற பெயரில் வழிபாட்டில் உள்ளது.இக்கோயில் காமிகாகம் முறைப்படி நித்தம் ஆறு காலப்பூசை நடைபெறுகிறது.
அர்த்த மண்டபம்:
கருவறை முன் உள்ள அர்த்த மண்டபம் தூண்கள் இன்றி எளிமையான அமைப்புடையது. தென் திசைகளிலும் வடதிசையிலுமாக இரு துவார பாலகர் சிலைகள் வாயிலைக் காத்து நிற்கின்றன. 123 செ.மீ. உயரமுடைய இவை பிற்காலச் சோழர் காலக் கலையை வெளிப்படுத்துகின்றன.
மகாமண்டபம்
அர்த்த மண்டபத்தின் முன்புறம் உள்ள மகாமண்டபம் நீள் சதுர வடிவில் காணப்படுகிறது. இம்மண்டபத்தை வரிசைக்கு மூன்று தூண்கள் வீதம் இரண்டு வரிசைகளில் ஆறு தூண்கள் தாங்கி நிற்கின்றன. இத்தூண்களின் மேல் இருதலைப் போதிகையும் முத்திலைப் போதிகையும் அலங்கரிக்கின்றன. போதிகையின் பக்கங்களிலும் மத்தளத்தின் இசைகேற்ப சதுர நாட்டியமாடும் பெண்களும் பாயும் சிம்மமும், சுற்றிலும் குழந்தைக்கு விளையாட்டு காட்டும் இரு பணிப்பெண்களுக்காகச் சில சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இத்தூண்கள் பிந்திய சோழர் காலப் பாணியில் அமைக்கப்பட்டு உள்ளன. மகாமண்டபத்தின் தென்மேற்கு மூலையில் உள்ள மேடை மீது ஆறு கால கணபதி என வழங்கப் பெறும் இடம்புரி விநாயகரின் நின்ற கோலச்சிற்பம் காணப்படுகிறது. இந்த உருவம் கி.பி.16ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது.
சோமஸ்கந்தர் சந்நதி
மகாமண்டபத்தின் தென்புறம் சோமாஸ்கந்தருக்கொன்று தனிச் சந்நிதியும், அர்த்த முகமண்டபங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சோமாஸ்கந்தர் சந்நதியில் அம்மை அப்பராகத் தோன்றும் சிவனும் உமையும் இருவருக்கும் நடுவே தாமரை மலரேந்தி நிற்கும் குகனும் அருகில் தனித்து நிற்கும் தனி அம்மனும் அழகிய செப்புச் சிலைகளாக அமைந்து வழிப்பாட்டில் உள்ளன. இச்செப்பு படிமங்கள் பிற்காலச் சோழர் காலத்தவை. சோமஸ்கந்தரின் படிமம் கி.பி 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. இச்சந்நிதியில் முன்புறம் சிறிய அர்த்தமண்டபம் அதன் முன்புறம் சிறிய அர்த்தமண்டபம் அதன் முன்புறம் நான்கு தூண்களை கொண்ட முகமண்டப மேடையும் அலங்கரிக்கின்றன.
சுவாமி சந்நிதி முகமண்டபம்
முகமண்டபத்தின் முன்புறமுள்ள சதுர வடிவுடைய முகமண்டபத்தின் தென்மேற்கு மூலையில் ஸ்ரீ சபை விநாயகருக்கும் வடமேற்கு மூலையிலுள்ள ஸ்ரீ காசிவிசுவநாதருக்கும் தனியாக சிறு மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
God Adhi Kumbeswarar and Mangalambigai
ஆடல்வல்லாண் -சிவகாமி
இம்மண்டபத்தின் வடதிசையில் ஆடல்வல்லானுக்குத் தனிச்சபை உள்ளது.இங்குள்ள மேடைமீது ஆடல்வல்லானும்,அருகில் அன்னை சிவகாமியும் செப்பு வடிவில் தென்திசை நோக்கிக் காட்சி தருகின்றனர். இங்குள்ள ஆடல்வல்லானும் உருவம் கி.பி.10ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. முந்திய சோழர் கலைக்குச் சிறந்த எடுத்து காட்டாகத் திகழ்வது. ஆடல் வல்லானின் கூத்தை அமைதியோடு கண்டு களிக்கும் சிவகாமியின் உருவம் இடப்புறத்தில் தாமரை இருக்கை மீது நின்ற கோலத்தில் காட்டப்பட்டுள்ளது. அன்னை தன் வலக்கை கடக முத்திரையிலும், இடக்கை தொங்கும் கரகமாகவுமிருக்க இடையை வலப்புறமாக ஒடித்துத் திரிபங்கியாக நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றாள். இச்சந்நிதி தென்திசை நோக்கி அமைந்து உள்ளது. முற்காலச் சோழர் காலத்திய ஆடல்வல்லானுக்கு நாயக்கர் காலத்தில் முகமண்டபத்தின் எழுப்பித்துள்ளனர்.
மங்களாம்பிகை சந்நிதி
சுவாமி சந்நிதிக்கு வடபுறம் முதல் திருச்சுற்றில் இத்தலத்துக் காமகோட்ட நாச்சியாரயான ஸ்ரீ மங்களாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது.சிறு கருவறை அர்த்த மண்டபம் விமானம் சிகரம் முகமண்டபம் ஆகிய பகுதியுடன் கீழ்த்திசை நோக்கி அமைந்துள்ளது. கருவறையின் நடுவே தாமரை பீடத்தின் மீது நான்கு கைகளுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கின்ற இவ்வம்மை மந்திர பீடேஸ்வரி மங்களாம்பிகை என்ற பெயர்களால் அழைக்கப்பெறுகிறார். திங்கள் தோறும் பெளர்ணமி நாளிலும்,புரட்டாசித் திங்களில் நவராத்திரிப் பெருவிழாவின் போதும் மாசி மகத்தின் போதும். ஆடி, தை வெள்ளிக் கிழமைகளிலும் அம்மைக்குச் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
முகமண்டபம்
முகமண்டபத்தின் முன்புறம் நந்தியும் பலிபீடமும் மேடை மீது அமைக்கப்பட்டு உள்ளன. முகமண்டபத்தை வரிசைக்கு 7 தூண்கள் வீதம் இரு வரிசைகளில்14 தூண்கள் அலங்கரிக்கின்றன.இவற்றில் 8 தூண்கள் துதி யாளிகள் பாயும் நிலையில் காட்டப்பட்டுள்ளன. சீற்றத்தோடு தோன்றும் யாளிகள் வாயிலிருந்து வளைந்து செல்லும் கொடிக் கருக்குகள் வேலைப்பாடு மிக்கவை. ஏனைய 6 தூண்கள் யாளி இன்றி வேறுபட்ட சிற்ப வேலைப்பாடுகள் கொண்டவை. அடுத்து உள்ள தூண்களில் ஒன்றில் யாளி மீது வலக்காலை ஊன்றி, கால்களில் பாதரட்சையணிந்து இரு கைகளுடன் ஒய்யிலாக நிற்கும் கொடிப்பெண்களின் உருவத்தைக் காணலாம். இப்பெண்ணின் எதிரே உள்ள மற்றொரு தூணில் இரு கைகளுடன் கூடிய எழில் வாந்த நங்கையின் தோற்றத்தைக் காணலாம்.
எழில் வாய்ந்த இச்சிற்ப தூண்கள் அனைத்தும் தஞ்சை நாயக்கர் காலத்தவை. ஒவ்வொன்றும் 3.5 மீட்டர் உயரமுடயவை. இத்தூண்கள் மீது குந்துசிம்மங்களும், பூமுறைகளும், கல்வளையங்களும் அலங்கரிக்கக் காண்கிறோம்.
முதல் திருச்சுற்று
முதல் திருச்சுற்றில் மகாமண்டபத்தின் வடதிசையில் சண்டி கேசுவரின் சிற்றாலயம் அமைந்துள்ளது.திருச்சுற்று மாளிகையின் கீழ்த்திசையில் 63 நாயன்மார்களுக்கும் தொகையாடியார் ஒன்பதிமருக்குமாக 72 செப்புச் சிலைகள் வார்த்து வைக்கப்பட்டுள்ளன.இவை அனைத்தும் பணிந்து நின்று வணங்கும் கோலத்தில் காணப்படுகிறது. இம்மண்டபம் அறுபத்து மூவர் மண்டபம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. இம்மண்டபத்தில் அதிகார நந்தியின் செப்பு வடிவம் ஒன்றும், திருச்சுற்றில் தென்மேற்கு மூலையில் வலஞ்சுழி விநாயகர் உருவம் நான்கு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் காணப்படுகின்றன.இவ்வுருவம் பிற்காலச் சோழர் காலமான கி.பி.12, 13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. வலஞ்சுழி விநாயகரை அடுத்து,பிட்சாடன மூர்த்தி சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை, ஆறுமுகப்பெருமான் ஆகியோர் செப்புப் படிமங்களும் ஸ்ரீ ஜோதிலிங்கம் அட்சயலிங்கம் கோடிலிங்கம் ஆகிய இலிங்க வடிவங்களும் மகாலட்சுமி, சேட்டை ஆகியோர் சிலைகளும் உள்ளன.
பள்ளியறை
வடதிசையில் பள்ளியறையில் உள்ள கண்ணாடி பதிந்த வேலைப்பாடு கொண்ட மண்டபத்தில் ஊஞ்சலில் அம்மையின் திருமேணி உள்ளது. பக்கச் சுவர்களில் கற்பகத்தரு, காமதேனு இவற்றின் ஓவியங்களும், பார்வதி, சிவலிங்கம் ஆகியனவும் ஊஞ்சலில் அமர்ந்துள்ள சிவனுக்குத் தேவி பழம் ஊட்டும் காட்சியும் சிவனைத் தன் மடியில் கிடத்தியிருக்கும் கோலமும், சிவனும் உவமையும் தழுவி நிற்கும் காட்சியும் ஓவியமாக உள்ளன. இதன் முன்புள்ள கண்ணாடி மண்டபத்தில், எட்டுத் தேவியரின் உருவங்களும், நாட்டியமாடும் பெண்ணுருவமும், ஆறு கலைஞர்கள் தஞ்சாவூர் பெண் இசைக்கும் காட்சியும் சமயக்குரவர் பாட பெண்கள் நாட்டுயமாடும் காட்சியும் ஓவியமாக்கப்பட்டுள்ளன.விதானம், கண்ணடிகளாலும் வண்ணக் கற்களாலும் அணி செய்யப்பட்டுள்ளது. இராமருக்குத் தனிச் சன்னதியும், பைரவர், ஜீரகரேசுவர், யோகமூர்த்தி, கோவிந்த தீட்சதர், அவர் மனைவி ஆகியோர் சிலைகளும் உள்ளன. இக்கோயில் உற்சவ மண்டபம் ஒன்றும், அலங்கார மண்டபமொன்றும் உள்ளன.