Wednesday, March 12, 2014

அம்மா உனக்கு நமஸ்காரம்!

ஆதிசங்கரருக்கு இளம் வயதிலேயே துறவு மனப்பான்மை ஓங்கி இருந்தது. தாய் ஆர்யாம்பாளிடம் துறவுக்கு அனுமதியைக் கேட்க, தன் ஒரே மகன் துறவியாவதைக் காண சகிக்க முடியாத அந்தத் தாய் மறுத்து விட்டார். இளம் வயதிலேயே விதவையான அந்தத் தாயிற்கு அந்த உத்தம மகனை விடப் பெரிய உறவோ, சொத்தோ இருக்கவில்லை. தாயின் அனுமதியில்லாமல் துறவியாகவோ ஆதிசங்கரருக்கு சம்மதமில்லை.

ஒருமுறை பூர்ணா நதியில் குளிப்பதற்காக தாயுடன் சென்றிருந்த ஆதிசங்கரரின் காலை ஒரு முதலை ஒரு பற்றிக் கொண்டது. ஆதிசங்கரர் உரத்த குரலில் தாயிடம் சொன்னார். “அம்மா என் காலை ஒரு முதலை பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறது. நான் சன்னியாசி ஆக நீ அனுமதி தந்தாயானால் அது என்னை விட்டு விடும்”.

ஒரு இக்கட்டான நிலைக்கு ஆளான ஆர்யாம்பாள் வேறு வழியில்லாமல் மகன் துறவியாவதற்கு ஒத்துக் கொண்டார். ஆதிசங்கரர் தகுந்த மந்திரங்களை எல்லாம் சொல்லி அந்த நதியிலேயே துறவறம் மேற்கொண்டார். முதலை அவர் காலை விட்டு விட்டது. (அந்த முதலை பிரம்மாவின் சாபம் பெற்ற ஒரு கந்தர்வன் என்றும் ஆதிசங்கரரின் கால் பட்டதும் அவன் சாப விமோசனம் பெற்றான் என்றும் சொல்லப்படுகிறது)

கரையேறிய ஆதிசங்கரர் தன் வீடு புகவில்லை. வீடு வந்த பின்னும் வாசலிலேயே “பிக்ஷாந்தேஹி” என்று மகன் நின்ற போது தான் ஆர்யாம்பாளுக்கு உண்மை முழுமையாக உறைத்திருக்க வேண்டும். முன்பே ஒரு முறை மகன் துறவியாவது போல் கனவு கண்டு அந்தக் கனவுக்கே துடித்துப் போன அந்தத் தாயின் நிலைமை அப்போது எப்படி இருந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. எல்லையில்லாத சோகத்தில் மூழ்கிய ஆர்யாம்பாள் மகன் இருந்தும் இல்லாதது போல் வாழ வேண்டி வரும் நிலைமையையும், ஈமக்கிரியை கூட மகன் இல்லாமல் போகும் அவலத்தையும் எண்ணி மிகவும் வருந்தினார்.

உறவுகளைத் துறக்கும் போது உறவுகளுடன் கூடிய அனைத்தையும் முடித்துக் கொள்வதால் துறவிகள் பெற்றவர்களுக்கு ஈமக்கிரியைகள் கூட செய்யக் கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் தாயின் சோகத்தால் நெகிழ்ந்த ஆதிசங்கரர் அந்த விதியை மீறித் தன் தாயிற்கு வாக்களிக்கிறார். ‘உன் அந்திம காலத்தில் உன் ஈமக்கிரியைகளைச் செய்ய நான் கண்டிப்பாக வருவேன்”

ஆண்டுகள் பல கழிந்த பின் ஆர்யாம்பாள் மரணப்படுக்கையில் கிடக்கையில் தன் ஞான திருஷ்டியால் அதை அறிந்த ஆதிசங்கரர் உடனடியாகத் தாயிடம் வந்தார். ஒரு துறவியான பின் தாயிற்கு ஈமக்கிரியை செய்வதா என்று சாஸ்திரம் படித்த உறவினர்கள் குமுறினார்கள். சிதைக்குத் தீ மூட்ட நெருப்பைக் கூடத் தர மறுக்க தன் சக்தியாலேயே தாயின் சிதைக்கு ஆதி சங்கரர் தீ மூட்டினார்.

அரும் பெரும் தத்துவங்களையும், உபநிடத சாரங்களையும் உலகத்திற்குத் தந்த ஆதிசங்கரர் தாயின் அந்திம காலத்தில் மடியில் கிடத்திக் கொண்டு பாடிய “மாத்ரு பஞ்சகம்” மிகவும் நெகிழ்ச்சியானது. அறிவால், ஞானத்தால், பக்தியால் எத்தனையோ பொக்கிஷங்களைத் தந்த ஆதிசங்கரர் உணர்ச்சி பூர்வமாக எழுதியது அந்த ஐந்து சுலோகங்களை மட்டுமே. ஒரு ஜகத்குரு ஒரு மகனாக அன்னையின் பாசத்தையும், தியாகத்தையும் எண்ணிப் பாடிய மாத்ரு பஞ்சகம் இது தான் -

“அம்மா, என்னைக் கருவில் தாங்கி நான் பிறக்கும் வரை உடல் மெலிந்து நீ பட்ட கஷ்டங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்? குழந்தையான என் மலம் மூத்திரம் எல்லாம் சுத்தம் செய்து, எனக்காகப் பத்தியம் இருந்து என்னைக் காப்பாற்றி வளர்த்த உனக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்? அன்று முதல் இன்று வரை நீ எனக்கு செய்ததற்கு கைம்மாறு செய்ய எனக்குப் பல ஜென்மங்கள் போதாதே!

நான் குருகுலத்தில் இருந்த ஒரு சமயம் நான் துறவு பூண்டதாக நீ கனவு கண்டாய். உடனே நீ அங்கு ஓடி வந்து கதறினாய். அதைக் கண்டு எல்லோரும் என்ன விஷயம் என்று கேட்க உன் கனவைச் சொல்லிக் கதற அதைக் கேட்ட குருகுலம் முழுவதும் கதறியதே! அத்தகைய உனது காலில் வீழ்ந்து நான் இன்று கதறுகிறேன்.

எல்லா சக்திகளும் அற்றுப் போன கடைசி காலத்தில் கொஞ்சம் தண்ணீர் தந்தால் ஆறுதல் உண்டாகும். அந்தப் பாக்கியமும் எனக்குக் கிடைக்கவில்லையே. பின்பு ஒவ்வொரு முறையும் திதியில் சிரார்த்தம் செய்யும் பாக்கியமும் இல்லாத சன்னியாசியாக நான் இருக்கிறேனே.

அம்மா! என்னைக் கூப்பிடும் போதெல்லாம் முத்தே, மணியே, கண்ணே, ராஜாவே, குழந்தாய் நீ வெகு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்திய வாய்க்கு வாய்க்கரிசி போடுகிறேனே.

தாயே பிரசவ வேதனை தாளாமல் அம்மா, அப்பா, சிவா, கிருஷ்ணா, கோவிந்தா, முகுந்தா என்றெல்லாம் கதறிய ஒரு கதறலுக்கு என்னால் பதில் கூற முடியுமா? அம்மா உனக்கு நமஸ்காரம்.”

காரடையான் நோம்பு


இந்த நோம்பு மாசியும் -பங்குனியும் சேரும் நேரத்தில் கொண்டாடபடுகின்றது.

காரடையான் நோம்பு எதற்கு கொண்டாடுகின்றோம் என்பதை அறிவோமா?

காதல் அந்தக்காலத்திலும் இருந்திருக்கிறது ,ஆனால் அது மிகப்புனிதமான ஒன்றாகவும் சுயநலமில்லாததாகவும் இருந்தது அது இதயத்தினில் கலந்துவிட்ட ஒன்று சாவித்திரி ஒரு ராஜகுமாரி தந்தை அசுவபதி ,,, ஒருநாள் தன் தோழிகளுடன் வனத்திற்குச் சென்றாள்.

அழகான நீர்வீழ்ச்சியைக்கண்டு மனம் பரவசம் அடைந்தாள் கூடவே ஒரு சுந்தரமுகமும் தெரிய ஆவலுடன் அந்தத்திசையில் நோக்கினாள் ஒரு அழகான வாலிபன் அவள் மனதைக்கொள்ளைக்கொண்டான்.

அந்த நிமிடமே அவனே தன் புருஷன் என்று தீர்மானமும் கொண்டாள், மாளிகைக்குத்திரும்பி வந்து தன் தந்தையிடம் தன் விருப்பத்தைத்தெரிவித்தாள்,அந்தச்சம்யம் "நாராயணா
நாராயணா " என்றபடியே நாரதர் நுழைந்து பின் விவரம் அறிந்து அந்த வாலிபன் "சத்தியவான்" எனவும் அவன் இன்னும் ஒருவருடத்தில் மரணம் அடைவான் என்றும் குறிப்பிட்டு பின் எச்சரிக்கிறார் சாவித்திரி.

இதில் மிக உறுதியாக இருந்ததால் அரசர் தன் மகளைச் சத்த்ய்வானுக்குத் திருமணம் செய்துக்கொடுத்தார்
அரண்மனை வாசம் போய் காட்டின் அருகில் ஒரு சின்ன வீடு ,, மாளிகைவிட்டு வந்த சாவித்திரி அதிலும் இன்பத்தைக்கண்டாள் தன் புருஷனின் உயிரைக்காக்க பார்வதி செய்த விரத்ததை மேற்கொண்டாள். அங்குக்கிடைத்த நெல்லிருந்து அரிசியைப் பொடியாக்கி அதில் காராமணியும் சேர்த்து அடைப்போல் தட்டி வெண்ணெயுடன் நைவேத்தியம் செய்தாள் , பின் மஞ்சள் சரடை சுமங்கலியாக இருக்கப்பிரார்த்தித்து கட்டிக்கொண்டாள் .

அந்த நாளும் வந்தது சத்தியவான் விற்கு வெட்டும் போது பாம்பின் ரூபமாக யமன் வந்தான் , அவனைக்கொட்டினான் தள்ளாடியபடியே அவன் கீழே சாய சாவித்திரி அவனைத்தாங்கிக்பிடித்தாள்.

கற்பின் சக்தியால் யமனும் அவள் கண்ணில் பட்டான் அவன் உயிரைக்கொடுக்கும்படி வாதித்தாள் கதறி அழுதாள் பின் தொடர்ந்தாள் அவள் கண்ணீர் அவன் மனதை நெகிழ வைத்தது
'சாவித்திரி நான் என் கடமையைத்தான் செய்கிறேன் அவன் உயிரைத்தவிர வேறு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன் " என்றான்

" யமராஜனே என் வம்சம் வாழையடியாகத்தழைத்து வளர வேண்டும் "

" சரி அப்படியே ஆகட்டும் தந்தோம் " என்று சற்றும் யோசிக்காமல் வரம் வழங்கினான்

" உங்கள் வரம்படி சத்தியவான் இல்லாமல் குலம் எப்படித்தழைத்து ஒங்க முடியும் "என்று பதிலுக்கு சாவித்திரி கேட்க வேறு வழியில்லாமல் யமதர்மராஜன் சத்தியவானின்
உயிரைத்திரும்பிக்கொடுத்தான்

சாவித்திரியின் பக்தியும் அன்பும் கற்பும் யமனையும் வென்று தன் புருஷனை மீள வைத்தன ,

இந்தக்கதை சாதாரணமாக எல்லோருக்கும் தெரியும் இது போல ஒன்றை வடநாட்டில் கரவாசௌத் என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள் காலையிலிருந்து தண்ணீர் கூடக்குடிக்காமல்
இரவில் சந்திரனைப்பார்த்தப்பின்னர் தான் சாப்பிட்டு விரதத்தை முடிக்கிறார்கள் ,என் மருமகள் வடநாட்டில் இருந்து பழக்கப்பட்டதால் அந்த நோம்பும் செய்ய என் மகனும் அன்று முழுவதும்
பட்டினி கிடப்பான் , பெண்களுக்குத்தானா புருஷன் முக்கியம் ஆண்களுக்கும் இதே உணர்வு உண்டே "என்று சொல்லும்போது இது போல் ஆண்களுக்கும் எதாவது விரதம் இருந்திருக்கலாமோ என்று
தோன்றுகிறது ,ஆனால் அந்த நோன்பு தீபாவளிக்குப்பின் வரும் என்ற ஞாபகம்.

நம் நோன்பு மாசிமாதம் பங்குனி மாதம் கூடும் நேரத்தில் வரும் "மாசிக்கயிறு பாசிப்படியும்" என்று சொல்வார்கள் ஆகையால் மாசி முடியும் தருவாயிலேயே இதை அனுஷ்டித்துவிடுவது வழக்கம்.

அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நிவேதனம் செய்வார்கள். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள் “மாசிக்கயிறு பாசி படியும்” என்று, பங்குனி முதல்நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக் கொள்வது விசேடமானதாகக் கருதப்படுகிறது.

இந்த நோம்பு செய்யும் போது கீழ் வரும் ஸ்லோகத்தை சொல்லவும்.

'உருக்காத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன் .அதாவது " உருகாத வெண்ணையுக் ஓரடையும் நான் வைக்க என் கணவன் என்னைவிட்டு என்றும் பிரியாமல் இருக்கவேணும் "

( 'நூற்றேன்' என்பதற்கு 'தருவேன்' என்று சொல்வதும் உண்டு)

என்று சொல்லியபடியே சரடை அணிந்துக்கொள்வார்கள் , 

எல்லாமே உலகத்தில் அன்பும் பாசத்திற்கும் கட்டுப்பட்டு உறவுகள்
பின்னப்ப்டுகின்றன ,,,,,,, இந்தக்கால்த்தில் தாலிக்கு இத்தனை மதிப்பு
கொடுக்கபடுகிறதா ? அல்லது இருமனம் ஒருமனம் ஆனாலே போதும் என்று நினைக்கப்ப்டுகிறதா ? விஜய் டிவியில் "நீயா நானா "வில் இதுவும் அலசப்பட்டுவிட்டது.

மிகவும் அழகான விரதம் இது. கடைக்கண் பார்வையில் காதலும். உள்ளத்தில் பக்தியும், புத்தியில் சிரத்தையும் கூடி செய்யும் விரதம். அன்று மட்டுமல்லாது, வாழ்க்கை முழுவதும் இந்த சுலபமான ஸ்லோகத்தை சொல்லலாம் - ஆண்களும் தான்.

மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ப்ரதே
மங்களார்த்தம் ம்ங்களேசி மாங்கல்யம் தேஹி மே ஸதா!!


Monday, March 10, 2014

தினம் ஒரு திருமந்திரம் 10-03-2014

காரணி மந்திரம் ஓதுங் கமலத்துப்
பூரண கும்ப விரேசம் பொருந்திய
நாரணி நந்தி நடுஅங்கு உரைசெய்த
ஆரண வேதநூல் அந்தமும் ஆமே.

பொருள்

ஆதிமந்திரம் அஞ்செழுத்து என்னும் உண்மையால் அக்காரண மந்திரத்தை இடையறாது ஓதும் மெய்யடியார்களது நெஞ்சத் தாமரையின்கண் உட்கொளல், நிறுத்தல், விடுதல் என்னும் உயிர்ப்புப் பயிற்சிக்குத் துணையாக திருவருள் அம்மை எழுந்தருள்வள். அங்ஙனம் எழுந்தருளும்போது நாரணி என்னும் பெயர் பெறுவள் சிவபெருமான் அருளிச் செய்த மறைநூலின் முதலும் முடிவுமாய் விளங்குவதும் திருவருள்அம்மையேயாம். (பூரகம் - மூச்சை உட்கொளல்; கும்பதும் - நிறுத்தல்; இரேசகம் - வெளிவிடுதல் நந்தி - சிவபெருமான்)