Tuesday, August 28, 2012

தினம் ஒரு திருமந்திரம்- 28/08/12


கொல்லான் பொய்கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்கம் உடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கள்காமம்
இல்லான் இயமத்து இடைநின்றானே.

பொருள் : ஓருயிரைக் கொல்லாதவனும், பொய் கூறாதவனும், திருடாதவனும், ஆராய்ச்சியுடையவனும், நல்லவனும், பணிவுடையவனும், நீதி வழுவாதவனும், பகிர்ந்து கொடுத்து உண்பவனும், குற்றமில்லாதவனும், கள்ளும் காமமும் இல்லாதவனுமாகிய தன்மை உடையவனே இயமஒழுக்கங்களில் நிற்பவன் ஆவான்.

Thursday, July 12, 2012

யோகாவும் தியானமும் நோய் குணப்படுத்துமா ?

யோகம் என்பதும் தியானம் என்பதும் பலர் குழப்பிக்கொள்ளும் விஷயமாக இருக்கிறது.

அஷ்டாங்க யோகம் என்ற ஒரு முறை உண்டு. அது யாமம், நியமம்,ஆசனம், ப்ராணாயாமம், ப்ரத்தியாஹாரம், தாரணை, தியானம், சமாதி என்ற எட்டு நிலைகள் இருப்பதால் அஷ்டாங்க யோகம் என்ற பெயர் பெறுகிறது.


பதஞ்சலி என்பவர் அஷ்டாங்க யோகத்தின் தந்தை என்ற அழைப்படுகிறார். அதற்கு முன் பலர் அஷ்டாங்க யோகத்தை பின்பற்றினாலும் புத்தக வடிவில் அஷ்டாங்க யோகத்தை வடித்தவர் பதஞ்சலி. இவர் 5000 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்.

இவரை பற்றி கூற பல விஷயங்கள் உண்டு. இருந்தாலும் இவர் கூறும் சில வார்த்தைகளை கொண்டு நம் கேள்விக்கு பதில் தேடுவோம். அவர் கூறும் சூத்திரங்களில் முதலில் எடுத்தவுடனேயே கூறுவது


“யோகா சித்த விருத்தி நிரோதனா”

இதன் பொருள் , யோகம் என்பது உன் சித்தத்தை மேம்படுத்தி பிரச்சனைகள் இன்றி நிர்வகிக்கிறது.

நம் மனநலத்தின் காரணமான சித்தம் மேம்படுகிறது. சித்தம் என்பது உணர்வதற்கு அரிய ஒரு உள் மன கட்டமைப்பு. பதஞ்சலி நம்முள் இருக்கும் மனம் என்ற உள்நிலையை மூன்று கட்டமைப்புகளாக பிரித்து பதஞ்சலி யோக சூத்திரத்தில் ஆய்வு செய்கிறார். அவை மனம், சித்தம், புத்தி என வகைப்படுத்துகிறார்.

பதஞ்சலியின் இந்த அலசல் அசாத்தியமானது. ஐயாயிரம் வருடங்களுக்கு முன் ஒரு மனிதன் மனோத்தத்துவத்தையும், ஆன்மீகத்தையும் இப்படி அலசமுடியுமா என யோசித்ததால் எனக்கு பல நாள் தூக்கம் கேட்டது உண்டு.

பதஞ்சலி யோக சூத்திரத்தில் மிக முக்கியமான ஒரு விஷயம் அவர் இறைவன் என ஒருவன் இருக்கிறான் என ஒரே ஒரு இடத்தில் மறைமுகமாக கூறுவதுடன் நிறுத்திவிடுகிறார். வேறு எங்கும் இறைவனையோ வழிபாட்டு முறையை பற்றியோ கூறுவதில்லை.

நீ இருக்கிறாய் உனக்கு கூறுகிறேன் என்ற கட்டமைப்பில் அமைந்தது பதஞ்சலி யோக சூத்திரம். மேற்கத்திய நாடுகளில் பரவியதற்கு இதுவும் ஒரு காரணம் என கூறலாம்.மேலை நாடுகளில் தத்துவ பள்ளிகளிலும், பல பல்கலைகழகத்திலும் ஆய்வு நூலாக இருக்கிறது.

நம் 
நாட்டில் பதஞ்சலி யோக சூத்திரம் என்பதை ஒரு படித்த மனிதனிடம் கேட்டால் பதஞ்சலியா? - பாஞ்சாலியின் தங்கச்சியா என கேட்கக் கூடும்.

நம் உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகியவை முழுமை அடையும் நோக்கத்தில் செய்யபடுவதே யோக முறைகள். யோக முறை என்பது முன்பு ஆன்மீக வாழ்க்கையில் இருப்பவர்களுக்கே பயன்பட்டு வந்து.

யோக முறை இருவகையாக தற்காலத்தில் இருவகையாக பயன்படுகிறது. ஒன்று யோக பயிற்சி மற்றொன்று யோக சிகிச்சை.

யோக பயிற்சி என்பது ஆன்மீக பாதையில் நம்மை செலுத்த உதவும் கல்வி. முன்காலத்தில் குருவுடன் இருந்து பயணித்து கற்றதை ஒருவாரம் அல்லது பத்து நாட்களில் கற்றுக்கொள்ளும் பாஸ்ட் புட் பயிற்சிகள்.

இதை தீவிரமாக முயற்சி செய்தால் ஆன்மீகத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்ல உதவும். இத்தகைய 
பயிற்சிகள் ஆன்மீக கிண்டர் கார்டன் என வேடிக்கையாக சொல்லலாம்.

யோக சிகிச்சை என்பது தனி நபரின் உடல் குறைபாடுகள், மனக்குறைபாடுகள் கண்டு அதற்கான பயிற்சியை அளிப்பது. எளிமையாக சொல்ல வேண்டுமானல் அஷ்டாங்க யோகத்தை மருந்தாக கொடுப்பது பலரும் யோக பயிற்சியையும், யோக சிகிச்சையையும் போட்டு குழப்பிகொள்கிறார்கள். யோக பயிற்சியால் நிச்சயமாக நோய் குணமாகாது. எதிர்காலத்தில் வரும் நோயை வேண்டுமானால் கட்டுப்படுத்தலாம். ஆனால் யோக சிகிச்சையால் குணமாக வாய்ப்பு உண்டு. நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும்.

யோக பயிற்சி மற்றும் யோக சிகிச்சை இரண்டுமே மிகவும் தேர்ச்சி பெற்ற நபர்களால் வழங்கப்பட வேண்டும். 

’தேர்ச்சி பெற்ற’ என்றவுடன் பல்கலைகழக பட்டயம் கேட்டாதீர்கள். பட்டயங்கள் எதுவும் யோகத்தில் வேலை செய்யாது. முழுமையாக உணர்ந்தது நீண்ட நாட்கள் செய்த பயிற்சி மற்றும் அனுபவமே அவர்களுக்கு பயன்படும். பட்டம் பெற்ற அனைத்து மருத்துவர்களும் சிறப்பானவர்கள் என கூற முடியாது அல்லவா? அது போன்றதே இது.

Yoga therapy research என இணையத்தில் தேடிப்பாருங்கள். பல கோடி மதிப்பில் உலகின் பல இடங்களில் ஆய்வுகள் நடந்துவருகிறது. இந்தியாவில் பூனாவிற்கு அருகில் கைவல்ய தாம் என்ற இடமும், முதல் யோக பல்கலைகழகமான பீஹார் ஸ்கூல் ஆப் யோகாவும் யோக சிகிச்சைக்கான தன் ஆய்வுக்கூடம் வைத்து ஆராய்ச்சி செய்கிறார்கள்.

ஹரித்துவாரில் ஒரு ’யோக மன்னன் புலிகேசி’ இருக்கிறார். அவர் தனக்கு மீடியா வெளிச்சம் வரவேண்டும் என்பதற்காக புற்று நோய் குணமாக்குவேன், எய்ட்ஸை குணமாக்குவேன் என பேட்டிகள் தருவார். கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பத்தாயிரம் பேருக்கு ஒரே நேரத்தில் பயிற்சி அளிப்பார். யோக பயிற்சி அவ்வாறு வழங்கக்கூடாது என்கிறது சாஸ்திரம். அவரிடம் முகபொலிவுக்காக வாங்கிய ஆயுர்வேத களிம்பை பயன்படுத்தி பலர் பழைய டெலிப்போன் நிறத்தில் திரிகிறார்கள்.

இந்த புலிகேசி மூன்று மாதத்திற்கு முன் ஹோமோ செக்ஸுவல் என்ற நோயை குணமாக்குகிறேன் என பேட்டிகொடுத்தது. இவர் நோயை யார் குணமாக்குவது? கொடுமையின் உச்சம் இவர் வைத்துள்ள யோக மருத்துவ மனைக்கு பதஞ்சலியின் பெயரை வைத்தது தான்.

எத்துறையிலும் கெட்டவர்களும் நல்லவர்களும் இணைந்தே இருக்கிறார்கள். நாம் பதஞ்சலியை போல ப்ரதிபக்‌ஷ பாவனையில் இருந்தால் நமக்கு மேன்மை மட்டுமே ஏற்படும். பதஞ்சலி, யோகமுறை என பல விஷயங்களை நீண்ட தொடராகவோ, கட்டுரையாகவோ அமைக்கலாம் என இருந்தேன். சூழல் கருதி முடிந்த வரை சுருக்கமாக இங்கே எழுதி இருக்கிறேன்.

வலையுலகம் என்பது நாம் நினைத்ததை எழுதும் இடமல்ல. பலர் பார்க்கும் சந்தையில் நடந்து செல்லுவதை போன்றது. நாம் நினைத்த செயலை இங்கே செய்தோமானால் பிறர் நம் மேல் வைத்திருக்கும் பிம்பம் உடைய வாய்ப்புண்டு. அதுவும் ஊரில் ஒரு நல்லவராக காட்சி அளிப்பவர் திடிரென சந்தை மைதானத்தில் பல்டி அடித்தால் என்னை போன்ற பிச்சைக்காரர்கள் எல்லாம் கருத்து சொல்ல வேண்டி வரும்.

தியானம் என்பது மனம் மூடி அமர்ந்திருப்பது!




பசுமையான மரங்கள் நிறைந்த மலைப்பகுதி....

விலங்குகள் அற்ற வனப்பிரதேசமான அங்கே அடிவாரத்தில் 
ஒரு குகை..

தியானத்திற்காக அங்கே மூன்று ஞானிகள் உட்கார்ந்திருந்தனர்.
மூவரும் குகையின் வாயிலை நோக்கி அமர்ந்திருந்தார்கள்.

குகையின் வெளிப்பகுதியில் குதிரையின் குளம்படி ஓசை கெட்டது...

சராலென... ஒரு குதிரையில் பயணித்த மனிதன் குகையைக் 
கடந்தான்...

மூன்று ஞானிகளும் எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தனர்..

பன்னிரெண்டு வருடங்கள் கழித்து...

மூன்று ஞானியரில் ஒருவர் கூறினார்...”அந்த குதிரை வெள்ளை
என நினைக்கிறேன்...”

அங்கே பூரண அமைதி...

பன்னிரெண்டு வருடங்கள் கழித்து...

இரண்டாவதாக இருந்த ஞானி கூறினார் .. “இல்லை இல்லை..
அந்த குதிரை கருப்பு நிறம் தான்.. ”

அங்கே பூரண அமைதி...

பன்னிரெண்டு வருடங்கள் கழித்து...

மூன்றாம் ஞானி கூறினார்... “ இப்படி இடைவிடாமல் பேசினீர்கள்
என்றால் எப்படி தியானம் செய்வது ? நான் இருக்க வா போகவா?” 
என்றார்..

தியானம் என்பது கண்கள் மூடி அமர்ந்திருப்பதில்லை;
மனம் மூடி அமர்ந்திருப்பது என பலருக்கு தெரிவதில்லை.

மெளனம் எனும் பெருவெளியில் உன்னதமான சக்தியின் மேல்
பயணிப்பது தியானம் என கூறி ஒரு மொழியின் சிதறுண்ட 
எழுத்துக்களால் தியானத்தின் தன்மையை சிதைக்க முயல 
விரும்பவில்லை.

தினமும் பல மணி நேரம் தியானம் செய்கிறேன்.... தியானத்தில் 
இருக்கும் பொழுது எனக்கு ஒரு காட்சி புலப்பட்டது என பலர் 
சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். நீங்களும் கேள்விப்படலாம்.

தியானம் செய்யும் ஒருவன் நேரத்தை நோக்கியும், ஒரு
காட்சியாலும் கவனிக்கப்பட்டால் அங்கே அவனுக்கு விழிப்பு
நிலை உண்டு என அர்த்தம். அது தியானம் ஆகுமா?

தியானத்தில் மன எண்ணங்களே இல்லை என கூறுபவர்கள்
உண்டு. மன எண்ணமே இல்லை என்பதை பார்த்தவர் யார்?
மன எண்ணம் இல்லை என்பதே ஒரு எண்ணம் தானே?

தியானம் என்றால் தியானம் + தியானிக்கபடுவது+தியானி
இவர்கள் அனைவரும் ஒன்றாக இருப்பது என்றார்கள் ஞானிகள்.

தியானம் எப்பொழுது செய்யவேண்டும்? அந்த
வார்த்தையிலேயே இருக்கிறது விடை. “யாஎனும்
எழுத்தை எடுத்து விடுங்கள்

தினம் ஒரு திருமந்திரம் 12/7


இயமம் (தீது அகற்றல்)
(அஃதாவது அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்பு என்பதாம்)

போதுஉகந் தேறும் புரிசடை யான்அடி
யாதுஉகந் தார்அம ராபதிக் கேசெல்வர்
ஏதுஉகந் தான்இவன் என்றருள் செய்திடும்
மாது உகந்து ஆடிடும் மால்விடை யோனே.

பொருள் : சகஸ்ரதளத்தை விரும்பி எழுந்தருளியிருக்கும் சிவபெருமானது திருவடியை, எல்லாவற்றாலும் விரும்பியவர் விண்ணுலகை அடைவர். உமை காண நடனம் புரியும் இடப வாகன மூர்த்தி இச் சாதகன் எதை விரும்பி வந்தான் என்று அதனை அருள் புரியும்.

Thursday, June 21, 2012

சக்ரா தியானம் செய் முறை






(குறிப்பு: கூடுமான அளவு எளிமையாக இந்த தியான செய் முறை விளக்கப்பட்டு இருந்தாலும் தகுந்த பயிற்சியாளர்களிடம் இருந்து இந்த தியானத்தைக் கற்றுக் கொள்வது சிறந்தது)

சக்ராக்கள் அமைந்துள்ள இடங்கள், அவைகளுக்குத் தரப்பட்டிருந்த சின்னங்கள், மந்திர பீஜ ஒலிகள் ஆகியவற்றை நாம் முன்பு பார்த்தோம். இனி சக்ரா தியானம் செய்வது எப்படி என்று பார்ப்போம். ஆரம்பத்தில் இந்த தியானம் கஷ்டமாகத் தோன்றினாலும் செய்யச் செய்ய நாளடைவில் இது மிக சுலபமானதாக மாறி விடும். இதில் அந்தந்த சக்ராக்களின் பெயரைச் சொல்வதும், மந்திரங்களைச் சொல்வதும் சத்தமாகவோ, மனதினுள்ளோ உங்கள் வசதிப்படி சொல்லலாம். அந்தந்த சக்ராவின் சின்னங்களை உருவகப்படுத்திக் கொள்ள சிரமம் இருந்தால் அந்தந்த சக்ராவின் நிறமுள்ள சக்கரங்களாகவும் உருவகப்படுத்திக் கொள்ளலாம்.


1) மற்ற தியானங்களைப் போலவே அமைதியான ஓரிடத்தில் உங்களுக்கு வசதியானபடி சம்மணமிட்டோ, பத்மாசனத்திலோ, நாற்காலியிலோ நிமிர்ந்து நேராக அமருங்கள். உங்கள் உள்ளங்கை மேலே பார்த்த வண்ணம் திறந்திருக்கும் படி தொடைகளில் கைகளை வைத்துக் கொள்ளுங்கள். கைகளின் கட்டை விரலின் அடிப்பாக நுனியில் சுட்டு விரல் நுனியை வைத்து ஒரு முத்திரையை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சு சீராகும் வரை மூச்சில் கவனம் வையுங்கள்.

2) உங்கள் மூலாதாரச் சக்ராவை மனதில் அந்தச் சின்னமாகவோ அல்லது சிவப்பு நிறச் சக்கரமாகவோ உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். அப்படி உருவகப்படுத்திக் கொள்ள ஆரம்பத்தில் சிறிது நேரம் தேவைப்படலாம். அவசரமில்லாமல் அமைதியாக உருவகப்படுத்திக் கொண்டு உங்கள் கவனத்தை அந்த சக்ராவிற்கு கொண்டு செல்லுங்கள். மனதில் இந்த சக்ரா சின்னமாகவோ, சிவப்பு நிற சக்கரமாகவோ பதிந்த பின்னர் “ஓம் மூலாதார” என்று சத்தமாகவோ, மனதிற்குள்ளோ சொல்லுங்கள். பின் மூச்சை உள்ளிழுக்கையில் இந்தச் சக்ரா நல்ல ஒளி பெறுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளி விடும் போது இந்த சக்ரா திறப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளியே விடும் போது லா........ம்/ங் என்ற மந்திரத்தை சத்தமாகவோ, மனதிற்குள்ளோ நிதானமாக உச்சரித்த படியே வெளியே விடுங்கள். இந்த மந்திர ஒலியால் அந்த திறக்கப்படும் சக்ரா சக்தி பெறுவதாக உணருங்கள். இப்படி லா........ம்/ங் மந்திரத்தை ஒரு முறையிலிருந்து ஏழு முறை வரை வெளிமூச்சு விடும் போது உச்சரிக்கலாம். இதைச் செய்யும் போது உங்கள் முழுக்கவனமும் இந்த சக்ராவிலேயே இருக்கட்டும். (நீங்கள் இந்த மந்திரத்தை எத்தனை முறை இந்த சக்ராவிற்குச் சொல்கிறீர்கிறீர்களோ அத்தனையே முறை தான் மற்ற ஆறு சக்ராக்களுக்கும் உரிய மந்திரத்தை நீங்கள் சொல்ல வேண்டும்.) முடிக்கையில் அந்த சக்ரா குறைபாடுகள் ஏதாவது இருந்திருக்குமானால் நீங்கி வலிமையடைந்து ஜொலிப்பதாக உணருங்கள்

3) அடுத்ததாக உங்கள் கவனத்தை சுவாதிஷ்டானா சக்ரா அமைந்துள்ள இடத்திற்குக் கொண்டு செல்லுங்கள். அந்த சின்னமாகவோ, ஆரஞ்சு நிற சக்கரமாகவோ அந்த சக்ராவை அந்த இடத்தில் மனக்கண்ணில் காணுங்கள். உங்கள் உருவகம் தெளிவான பின் “ஓம் ஸ்வாதிஸ்தான” என்று சொல்லுங்கள். பின் மூச்சை உள்ளிழுக்கையில் இந்தச் சக்ரா நல்ல ஒளி பெறுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளி விடும் போது இந்த சக்ரா திறப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளியே விடும் போது வா........ம்/ங் என்ற மந்திரத்தை நிதானமாக உச்சரித்த படியே வெளியே விடுங்கள். இந்த மந்திர ஒலியால் அந்த திறக்கப்படும் சக்ரா சக்தி பெறுவதாக உணருங்கள். இந்த மந்திரத்தையும் நீங்கள் மூலாதார மந்திரத்தை எத்தனை முறை சொன்னீர்களோ அத்தனை முறை சொல்ல வேண்டும். முடிக்கையில் அந்த சக்ரா குறைபாடுகள் ஏதாவது இருந்திருக்குமானால் நீங்கி வலிமையடைந்து ஜொலிப்பதாக உணருங்கள்.

4) இதே போல் மற்ற சக்ராக்களுக்கும் செய்தல் வேண்டும். மணிப்புரா சக்ராவுக்கு அந்த சின்னம் அல்லது மஞ்சள் நிற சக்கரம் நினைத்து “ஓம் ஸ்ரீ மணிபத்மே ஹம்” என்று சொல்லி ரா........ம்/ங் என்ற மந்திரத்தைச் சொல்ல வேண்டும். மற்ற சக்ராக்களுக்கு ஓம் அனாஹத, ஓம் விஷுத்தி, ஓம் ஆஜ்னேய, ஓம் சஹஸ்ரார என்று சொல்லி, அந்தந்த சின்னங்கள் அல்லது அந்தந்த நிறச் சக்கரங்களை எண்ணி, முறையே யா........ம்/ங், ஹா.......ம்/ங், ஓ.......ம் (a…u….m), ஓ...கூம்...சத்யம்....ஓ...ம்” என்ற மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.

5) சக்ராக்களின் பெயர்களைச் சொல்வதில் மணிபுரா சக்ராவிற்கு மட்டும் “ஓம் ஸ்ரீ மணிபத்மே ஹம்” என்று சொல்ல வேண்டும். மற்ற சக்ராக்களுக்கு ஓம் என்று சொல்லி அந்தந்த சக்ராவின் பெயரையே சொல்ல வேண்டும். அதே போல் மந்திர ஒலிகள் உச்சரிப்பதில் சஹஸ்ராரா சக்ராவுக்கு மட்டும் ’ஓகூம் சத்யம் ஓம்’ என்ற மந்திரத்தைச் சொல்ல் வேண்டும். மற்ற சக்ராக்களுக்கு முன்பு நாம் சொன்ன மந்திரங்கள் தான். இந்த இரு வித்தியாசங்களைத் தவிர எல்லா சக்ராக்களையும் எண்ணி சக்ரா தியானம் செய்வது ஒரே மாதிரி தான். இதை நினைவில் கொள்ளவும்.

இந்த சக்ரா தியானம் மிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதில் ஒவ்வொரு சக்ராவுக்கும் சமமான முக்கியத்துவத்தைத் தருவது முக்கியம். ஒரு சங்கிலியின் உண்மையான வலிமை அதன் மிக பலவீனமான பகுதியைப் பொறுத்தே இருக்கிறது என்று சொல்வார்கள். ஒரு பகுதி மிக வலிமையாக இருந்து இன்னொரு இணைப்பு மிக பலவீனமாக இருந்தால் அந்த இடத்தில் அது சுலபமாகத் துண்டிக்கப்படும் அல்லவா? அது போலத் தான் சக்ராக்களும். எல்லா சக்ராக்களையும் சமமாக பாவித்து ஒரே மாதிரியான முக்கியத்துவம் அளியுங்கள். 


(குண்டலினி சக்தியை மேலுக்குக் கொண்டு வருவதும் இந்த சக்ராக்கள் மூலமாகத் தான். மூலாதார சக்ராவில் உறங்கிக் கிடக்கும் குண்டலினியை சஹஸ்ரார சக்ராவிற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அதற்கு முறையான பயிற்சியும், கடுமையான கட்டுப்பாடும், தகுந்த சுத்தமான சூட்சுமமான மனநிலையும் இருப்பது மிக அவசியம். அதில் ஏதாவது சிறு குறைகள் ஏற்பட்டால் கூட பெரிய ஆபத்தை அவை ஏற்படுத்த வாய்ப்புண்டு. எனவே முறையாக சரியாக தயார்ப்படுத்திக் கொள்ளாமல், உண்மையான நிபுணரின் கண்காணிப்பில் அல்லாது முயற்சி செய்வதும் ஆபத்தே. குண்டலினியை நான் எழுப்பிக் காட்டுகிறேன் என்று பலரும் இணையத்திலும், பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்வதை உடனே நம்பி ஏமாந்து விடாமல் இருப்பது நல்லது. மிகச் சிலரே உண்மையில் அதில் தேர்ச்சி பெற முடியும் என்பதையும் அதிலும் வெகுசிலரே பொது வாழ்வில் காணக் கிடைப்பார்கள் என்பதையும், அவர்களும் கூட தகுதிகளை பரிசோதித்து தெளிவடையாமல் கற்றுக் கொடுக்க முனைய மாட்டார்கள் என்பதையும் நினைவில் வைக்கவும்.) 

இந்த சக்ரா தியானம் உடலின் எல்லா சக்ராக்களையும் சூட்சுமமாகவும், வலிமையாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆரோக்கியம், வலிமை, அறிவு, ஞானம் ஆகிய அனைத்துமே சக்ரா தியானம் செய்யச் செய்ய மேம்படும் என்பது உறுதி. 

Wednesday, June 20, 2012

சுகர ப்ரம்ம மஹரிஷி


suka brhamam
சுகப் ப்ரம்ம மஹரிஷியைப் பற்றி பலரும் அறிந்திருக்கக் கூடும். கிளி போன்ற முகம் உடைய இம்மகரிஷி சதா ப்ரம்மத்தோடு ஒன்றிய நிலையில் இருந்ததால் சுக ப்ரம்ம மஹரிஷி என்று அழைக்கப்பட்டார். இவர் மஹாபாரதத்தை உலகுக்குத் தந்த வேத வியாசரின் புதல்வர். ”சுக முனிவர்” என்ற பெயரும் இவருக்கு உண்டு. இவர் அருளியதுதான் ”ஸ்ரீமத் பாகவதம்.” என்றும் பதினாறு வரம் பெற்ற மார்க்கண்டேயன் இவரது சீடன். இவரது மற்றொரு சீடர் கௌடபாதர். அவரது சீடர் கோவிந்த பகவத் பாதர். அவரது நேர் சீடர்தான் ஆதி சங்கரர். இதிலிருந்து சுக முனிவரின் பெருமையை உணர்ந்து கொள்ளலாம்.
இவரது காயத்ரி மந்திரம்
ஓம் வேதாத்மஹாய வித்மஹே
வியாச புத்ராய தீமஹி;
தந்நோ சுகர் ப்ரசோதயாத்!

கீதையின் உள்பொருள் சுருக்கம்



போர்களத்திற்கு வெகு உற்சாகத்துடன் போர் புரிய வந்த அர்ச்சுனனன் போர் படைகளின் ஆர்பாட்டன்களையும் அவர்களின் உற்சாகத்தையும்  கண்டு இவர்கள் எல்லாம் எந்த நிலைக்கு ஆளாகப்போகிறார்களோ என்று எண்ணி மனோதிடம் இல்லாமல் கோளையைப் போல வருத்தப் பட்டுகொண்டான். அவன் கண்களில் நீர் முட்டி வழியத் தொடங்கியது.மதுசூதனன் அர்ச்சுனா! தகாத வேளையில் எப்படி இந்தக் கோழைத்தனம் ஏற்பட்டது? இப் பயங்கொள்ளித்தனம் சிறந்த ஆண்மகனான  வீர புருசனுக்கு அழகல்ல,நிம்மதியையோ மேல் நிலையையோ, அளிக்காது. ஆகையால் பார்த்தா! இந்த பேடித்தனத்தை அருகில் நெருங்க விடாதே. உன் போன்ற வீரர்களுக்கு இப்பலவீன்ம் முறையற்றது.வீரப்பெருமகனே! இதயத்தை வழுவிழக்கஷ் செய்யும் இந்த அற்ப பலவீனத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு காண்டீபத்தை கையிலெடு. போபுரிய எழுந்திரு. போரைத் தொடங்கு என்றார்                  ( 1- 3)
அர்ச்சுனன்: கண்ணா! நான் சாவதற்குப் பயப்படவில்லை. பிறரைச் சாகடிகத்தான் தயங்குகிறேன். அஞ்சுகிறேன். என் எதிரே தோன்றும் பீஷ்மர், துரோணர் முதலானவர்களென் பெருமதிபிற்குரியவர்கள் நான் பூசிக்கத் தகுந்தவர்கள். இத்தகைய சான்றோர்களை கடிந்து பேசவே கூடாதென்று என் இளமைப் பருவமுதல் கருதிய நான் இவர்களுடன் எப்படி பகைமை உணர்வுடன் போர்புரிய முடியும். எப்படி தாக்கி அழிக்க முடியும்           (4)
கண்ணன்: அர்ச்சுனா! கடமையைச் செய்வதற்கு எதிராக வேறு எதையும் கருத்தில் கொள்ளலாமா?
அர்ச்சுனன்: கண்ணபிரானே! மதிப்பிற்குரிய பெரியவர்களை கொல்வதைவிட இந்த பூமியில் பிச்சையெடுத்து வயிறு வளர்ப்பதை மேலாகக் கருதுகிறேன். உங்கள் போதனைப்படி நான் போரிட்டால் எனக்கு என்ன கிட்டும்? பெரியவர்களையும் குருமார்களையும் கொன்ற பின் அவர்களது குருதி தோய்ந்த செல்வங்களையும் மற்றும் சுகபோகங்களையும் தானே அனுபவிக்கப் போகிறேன்? அந்நிலையில் என்னால் நிம்மதியாக வாழமுடியுமா?                           (5)
கண்ணன்: அர்ச்சுனா! அப்படியானால் நீ என்ன செய்வதாக உத்தேசம்? எதை நியாயம் என்று கருதுகிறாய்
அர்ச்சுனன்: பரந்தாமனே! இந்தப் போர்புரிவது சரியா தவறா என்பது எங்களுக்குத் தெரியாது. இந்தப் போரில் நாங்கள் ஜெயிப்போமா தோற்போமா என்பதும் தெரியாது. எல்லாவற்றையும் விட மிகவும் முகியமானது எவர்களைக் கொன்றுவிட்டு நாங்கள் வாழ விரும்பவிலையோ, அவர்கள் தான் எங்களுக்கு எதிரே அணிவகுத்து நிற்கிறார்கள்.இந்தச்சொந்த ப்ந்தமுள்ள குடும்பத்தாரை நாங்கள் எப்படி  கொல்வோம்  ( 6)
கண்ணன்: இப்போது நீ எதையும் தீர்மானிக்க முடியவில்லையோ இதற்கு மாற்று வழியாக எந்த உபாயத்தை யோசித்துள்ளாய்?
அர்ச்சுனன்: மாதவா! கோழைத்தனம் என்னும் குறைபாட்டால் என் சஷத்திரிய வீர இயல்பு தாழ்ந்து போயிருக்கிறது. எது தர்மம்? என்று தீர்மானிக்க இயலாத மதி மயக்கம் . ஆகையால் எது நலந்தருமோ,எது என் கடமையோ எனக்கு எடுத்து சொல்லுங்கள் நான் உங்கள் சீடன் உங்களை சரணடைந்திருக்கிறேன்.எனக்கு அறிவுரை வ்ழங்குங்கள்.வழிகாட்டுங்கள்.க்ண்ணபிரானே முதலில் சொல்வதைப்போல் யுத்தம் புரிய மட்டும் சொல்லாதீர்கள்.ஏனென்றால் போரில் வெற்றி பரிசாகக்கிடைக்கும் செல்வங்களும் அரசும்,அரச சுகபோகங்களும் அல்லது தேவலோக தலமைப்பதவியானாலும் கூட அவற்றால் என் சோகத்தைப் போக்க முடியாது இந்த துயரம் என் புலன்களையே செயலிழக்க வைக்கிறது.                                       (7 -8)
எனவே நான் போர் புரியமாட்டேன் என்று தெளிவாக கூறிவிடேன்.                                       (9)
கண்ணன்: புன்சிரிப்புடன் நீ வருத்தப்பட வேண்டாததிற்கு வீணாக வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாய். புலமைமிக்க சான்றோர் போல்பெரிய தத்துவம் பேசுகின்றாய்! விவேகம் மிக்க சான்றோர்கள் இறந்து போனவர்களுக்காகவும் இறக்கப் போகிறவர்களுக்காகவும் ஒருபோதும் வருத்தப்படமாட்டார்கள். இத்தத்துவத்தை முதலில் நன்றே புரிந்துகொள்.   ( 10,11)
அர்ச்சுனன்: கண்ணா! ஏன் அவர்கள் வருத்தப்பட மாட்டார்கள்?
கண்ணன்: அர்ச்சுனா! நானோ நீயோ இந்த அரசர்களோ முன்பும் இருந்ததில்லை.பின்பும் இருக்கப்போவதில்லை என்று நினைக்கலாகாது.நாம் எல்லோருமே முன்பும் இருந்தோம்.பின்பும் இருக்கப்போகிறோம்.இந்த உண்மையை உணர்ந்த சன்றோர்கள் பிறப்பு இறப்புக் குறித்துச் சோகப்படமாட்டார்கள்.     ( 12)
அர்ச்சுனன்: வாசுதேவா! இதை எப்படி நான் அறிவு  பூர்வமமாக உணரமுடியும்?
கண்ணன்: தம்பி அர்ச்சுனா! உயிருள்ள இந்த உடலுக்கு பிள்ளைப் பருவம் , வாலிபம், வயோதிபம், முதுமை எப்படி ஏற்படுகின்றனவோ இதே போலத்தான் மற்றச் சரீரங்களிலும் குடிபுகுகிறது இந்த ஜீவன் இதனாலிந்த விசயத்தில் விவேகிகள் வருத்தம் கொள்வதில்லை.                 ( 13)
அர்ச்சுனன்: பராத்தமாவே! குழந்தைப் பருவம் முதலிய பலநிலைகள் உடலுக்கு ஏற்படுகின்றன,உண்மைதான், ஆனால் ஏற்புடையது,ஏற்கமுடியாதது,சுகமளிப்பது, துன்பம் தருவது ஆகியவை எதிர்படும்போது என்ன செய்வது?
கண்ணன்குந்திதேவியின் மைந்தனே! புலன்களுக்கு உட்பட்ட பௌதீகப் பொருட்கள் யாவும் உகந்தது.அல்லாதது என்னும் நிலைகளில் சுகத்தையும் துக்கத்தையும் தரகூடியவைகள் .ஆனால் அவை வந்து போககூடியவைகள். ஆகையால் அர்ச்சுனா!அவைகளை நீ ஏற்றுகொள். சகித்துகொள், அவைகளீடம் விருப்பு வெருப்பு இல்லாமல் இரு.  (14)
அர்ச்சுனன்: கண்ணா அப்படி இருப்பதால் என்ன பயன்?
கண்ணன்: ஆண்களில் சிறந்தவனே! சுகதுக்கங்களில் சமநிலையோடு இருந்துவரும் தீர புருசனைப் புலன்களுக்கு ஆட்பட்ட பெளதீகப் பொருட்கள் மகிழ்ச்சியோ, துன்பமோ கொள்ள வைப்பதில்லை. அத்தகைய நடுநிலைப் பேராண்மைக்குரியவன் பாராத்மாவை தன்னுள் உணர்கிறான்.இதன் மூலம் அமரத்துவ நிலயையும் அறிகிறான்.  ( 15)
அர்ச்சுனன்: அது எப்படிச் சாத்தியமாகும் கண்ணா?
கண்ணன்: ” ஸத்” என்பது சேதன தத்துவம் – உயிர் கொண்டது ” அஸத்” என்பது சடப்பொருள் -உயில்லாப் பொருள் “ஸத்” எப்போதுமே இருந்து வருகிறது “அஸத்” பொருளுக்கு நிலையில்லை. இந்த உண்மையை தத்துவஞானிகள் அறிந்திருப்பதால் அவர்கள் அமரத்துவ நிலையில் இருக்கிறார்கள் (16).
அர்ச்சுனன்: அந்த ஸத் என்னும் அழியாப் பொருள் எது கண்ணா?
கண்ணண்:எப்பொருள் உலகம் முழுவதிலும் பரவி நிலையாய் இருக்கிறதோ, அது அழியாத “ஸத்” அதை யாராலும்அழித்துவிடமுடியாது
அர்ச்சுனன்: அஸத் எனும் அழியும் பொருள் எது?
கண்ணன்: நம்மிடமிருந்து ஜீவன் எனும் சேதனம் அமரத்துவம் கொண்டது. இதை ஊகித்து அறிய முடியாது. இதனுடைய உடல் உறுப்ப்புகள்.சாதன்ங்கள் யாவும் “அஸத்” எனும் அழியும் பொருட்கள்.இதனால் தான் சொல்கிரேன் அர்ச்சுனா! நீஉன் கடமைளைச் செய். யுத்தம் புரிய வேண்டியதுதான் இப்போதைக்குரிய உன் கடமை.
போரில் இறப்பதும் கொல்லுவதும் தவிர்க்க முடியாதவை ஆகையால் உடலில் இருக்கும் ஜீவனும் அந்நிலைக்கு ஆளாகும் என்றெண்னாதே.அதாவது தானும் மடிந்து பிறரையும்மடிய வைக்கும் என்றெண்ணாதே.இந்த ஜீவன் உடலுப்புகளைக் கொண்டிருந்தாலும் அழிவற்றது.மேலும் சேதனன் என்னும் இந்த ஜீவன் எவரையும் அழிப்பதுமில்லை. தானும் அழிவதில்லை.
அர்ச்சுனன்: மாதவா! ஏன் அப்படி அமைந்திருக்கிறது?
கண்ணன் : ஜீவனை சரீரி ( உடல் பெற்றது) என்பர்.இது பிறப்பு இறப்புகளைக் கடந்தது.அதாவது பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை.நித்தியமாக நிரந்தரமாக இருப்பது.சரீரம் அழிந்த பிறகும் அதில் குடிகொண்டிருக்கும் ஜீவன் நிலைபெற்றது.
அர்ச்சுனன்: இதை எப்படி உணர்வது? உணர்வதால் என்ன பயன்?
கண்ணன்: பார்த்தனே! எந்த மனிதன் இந்தப் பெளதீக உடலை கடந்த ஜீவனை அழிவில்லாதது. நித்தையமானது.பிறப்பும் இறப்பும் இல்லாதது என்பதை நன்கு உணர்கிறானேர் அவன் ப்றரைக் கொல்வதாகவோ பிறரை கொல்லச் செய்வதாகவோ எப்படி நினைப்பான்?

அர்ச்சுனன்: பரமனே! அப்படியானால் இறப்பது யார்?
கண்ணன்: அர்ச்சுனா சரீரம் தான் அழிகிறது “சரீரி” அழிவதில்லை . மனிதன் எவ்வாரு  பழைய ஆடைகளை களைந்து விட்டு புதிய ஆடைகளை உடுத்துகிறானோ அதேபோல் ” சரீரி” என்னும் ஜீவன் பழைய உடல்களைத் துறந்துவிட்டு புதிய உடல்களுக்குள் புகுந்து குடியிருக்கச் செல்கின்றது.
அர்ச்சுனன்: புதுப்புது உடல்களில் குடி புகுவதால் உயிருக்குக் எதாவது மாறுதல்கள் ஏற்படுமல்லவா
கண்ணன்: எந்த மாறுதல்களும் ஏற்படாது. ஏனெனில் இந்த சரீரியை ( உயிரை) எந்த ஆயுதத்தாலும் அழிக்க முடியாது.தீயாலிது எரிக்க முடியாது.தண்ணீரால் இது கரைந்துவிடாது.காற்றால் இதை காய வைக்கவோ சிதறடிக்கவோ முடியாது.
அர்ச்சுனன்: கண்ணா! இந்த உயிர் ஏன் யூகப் பொருட்களால் பாதிக்கப்படுவதில்லை?
கண்ணன்: இந்த சரீரி என்னும் ஜீவனை தகர்க்கவோ, எரிக்கவோ, நனைக்கவோ, வற்றச் செய்யவோ எதனாலும் இயலாது.காரணம் இது நித்தியமாக- சாசுவதமாக இருப்பது.எல்லா வகையிலும் பரிபூரணமானது-நிலையான இயல்பு கொண்டது- சஞ்சமில்லாதது -தொன்றுதொட்டு இருந்து வருவது .இந்த ஜீவன் புலன்களுக்கு அடங்காதது.அதனால் நேரிடையாக காணவும் முடியாதது.இதை உள்ளுணர்வாலும் அறிய முடியாது இதில் எவ்வித மாறுதலும் ஏற்படுவதில்லை. இந்த உண்மைகளை உணர்ந்து கொண்டு இந்த ஜீவனைக் குறித்து நீ வருத்தபடவேண்டாம்.
அர்ச்சுனன்: அர்ச்சுதா! இந்த சரீரியை ( உயிரை) மாறுதலற்றது, அழிவற்றது என்பதை உணர்ந்து கொண்டபின் வருத்தமோ கவலையோ ஏற்படலாகாது உண்மை. ஆனால் அந்த உணர்வு ஏற்படாத வரையிலும் வருத்தம் ஏற்படத்தானே செய்யும்?
கண்ணன்: வலிமை மிக்க வில்லாளியே! நீ இந்த உயிரை பிறப்புக்கும் இறப்புக்கும் இலக்கானதாக கருதினாலும் அதையிட்டு வருத்தப்படக்கூடாது.காரணம் பிறந்தது இறக்கத்தான் செய்யும்.இறந்தது பிறகு பிறக்கத்தான் போகிறது.இந்த நியதியை எவராலும் ஒதுக்கிவிட முடியாது.ஆகையால் அழிந்து,பிறகு பிறக்கும் உடல்களைக் குறித்து நீ சோகம் கொள்ளலாகது.
அர்ச்சுனன்: சரீரி என்னும் உயிருக்காக சோகப்படலாகாது என்பது சரி தான்.ஆனால் சரீரத்துக்காக வருத்தப்பட வேண்டித்தானே இருக்கிறது?
கண்ணன்: இல்லை அர்ச்சுனா! எந்தச் சரீரத்துகாகவும் வருத்தப்படக்கூடாது. எல்லாப் பிராணிகளும் பிறப்பதற்கு முன்பு புலப்படாதவை. நடுவில்மட்டும் தான் புலபப்டுகின்றன இதற்காக வருத்தபடுவான் ஏன்?
அர்ச்சுனன்: கண்ணா! எப்படியும் கவலை எற்படுகிறது ஏன்? எப்படி அறிவது?
கண்ணன்: அறியாமைதான் காரணம்.ஜீவ தத்துவத்தை ஜம்புலன்களால் ( மெய்,வாய்,கண்,மூக்கு,செவி) மனத்தாலும் அறிவாலும் புரிந்துகொள்ளவோ, உணரவோ இயலாது.ஆகையால் ” சரீரியை” பார்ப்பது,பேசுவது,கேட்பது,எல்லாமே வியப்பாகத்தான் இருக்கும்.பிரமை பிடித்த வியப்பு இதை பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் முடியாது.நமக்குள் நாமே சிந்தித்து உணர வேண்டும் இதற்கும் ஆழ்ந்த சிந்தனை தேவை.
அர்ச்சுனன்: அந்த உணர்வு எத்தகையது கண்ணா?
கண்ணன்: பரதவம்சத்துச் செல்வனே! எல்லா உடல்களிலும் உள்ள இந்த உயிர் என்னும் உள்ளது.அழிவற்றது. அழிக்க இயலாதது.இந்தத் தத்துவத்தை திடமாக உணர்ந்து கொண்டபின் எந்தப் பிராணிக்காகவும் ஏன் வருத்தப்பட வேண்டும்.
அர்ச்சுனன்: கண்ணா! வருத்தத்தை விலக்கிகொள்ள பல அறிவுரைகளைச் சொன்னீர்கள். ஆனால் எனக்கு இப்போது எற்பட்டிருக்கும் அச்சத்தையும் பாவச் செயல்களினால் ஏற்படும் பயத்தையும் எப்படிப் போக்குவது?
கண்ணன்: அர்ச்சுனா! உன் ஷத்திரிய தர்மத்தை( கடமையை) ச் சர்ந்தாவது நீ பயப்படாமல் இருக்க வேண்டும்.காரணம் வீரர் குலத்தவர்களான சஷ்த்திரியர்களுக்கு போரிடுவதுதான் தர்மம் இதைவிட நலம்தரும் வேறுசெயல்கள் ஒன்றுமில்லை.
அர்ச்சுனன்: அப்படியானால் சஷத்திரியர்கள் போர் புரிந்துகொண்டே இருக்கவெண்டுமா?
கண்ணன்: இல்லைத் தம்பி போர் எற்படும்போது போரிட வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது சஷத்திரய தர்மம் போரிடுவதுதான் அதுவே சுவர்க்கம் புகும் தலைவாசல் .பார்த்தா! போரிடும் வாய்ப்பைப் பெறும் சஷத்திரியர்கள் பாக்கியசாலிகள்.உண்மையில் அவர்கள் உத்தமமான சுகம் பெறுகிறார்கள்.சுவர்க்கம் புகுகிறார்கள்.
அர்ச்சுனன்: கண்ணா! வலுவில் வந்த போரை நாம் தவிர்த்துவிட்டு நான் ஒதுங்கி போனால் என்ன ஆகும்?
கண்ணன்: இது அறப்போர் .இதை நீ செய்யாவிட்டால் உன் சஷ்த்திரிய தர்மமும் இதுவரை நீ ஈட்டிய புகழும் அழியும் நீ உன் கடமையைச் செய்யாததால் உனக்குப் பாவமும் வந்து சேரும்.
அர்ச்சுனன்: புகழ் அழிந்து அபகீர்த்தி ஏற்பட்டால் என்ன ஆகும்?
கண்ணன்: அன்புள்ள் தம்பி! நீ போர் புரியாவிட்டால் தேவதைகள்,மனிதர்கள் எல்லோரும் உன்னை இகழ்வார்கள்.வெகு காலம்வரையும் நீ கடமை தவறிய குற்றத்தை சொல்லிக் காட்டுவார்கள்.இந்த அவப்பெயர் மதிக்கத்தக்க பெருமை கொண்ட உன் போன்ற மனிதனுக்கு மரணத்தைவிட கொடிய துன்பம் தரும்.
அர்ச்சுனன்: மாதவா! மேலும் என்ன ஆகும்?
கண்ணன்: உன்னை பீஷ்மர்,துரோணர் முதலான மாவீரர்கள் வீரபுருசனாக மதிக்கிறார்கள்.அந்த மதிப்பும் போய்விடும்.நீ சாவிற்கு பயந்து கோழையாகி போரிடாமல் ஓடிவிட்டதாக கருதுவார்கள்.
அர்ச்சுனன்: பகவானே! இந்த அவமதிப்பை என்னால் சகித்துக் கொள்ளமுடியாதா?
கண்ணன்: உன்னால் முடியவே முடியாது. மிகப்பெரிய பயங்கரமான மோசமான விளைவுகள் ஏற்படும். உன் எதிரிகளுக்கு பழிவாங்க சந்தர்ப்பம் கிடைத்துவிடும்.அவர்கள் உன் வீரதீர பிரதாபத்தை எள்ளி நகையாடுவார்கள்.இழி சொற்களால் உன்னை ஏசுவார்கள். தூற்றுவார்கள்.இதைவிட துன்பம் வேறு இருக்கமுடியுமா?
அர்ச்சுனன்: சரி நான் போர் புரிந்தால்?
கண்ணன்: போரிட்டவாறு நீ இறந்தாலும் உனக்கு பெருமை சுவர்க்க லோகமும் கிடைக்கும். வென்று விட்டாயானால் இவ்வுலகை அரசாளும் மகிமை மாட்சி கிட்டும். ஆகையால் குந்திதேவியின் மைந்தனே! போர் புரியும் தீர்மானத்துடன் ஆயத்தமாகு. காண்டீபத்தை கையிலெடு.
அர்ச்சுனன்: கேசவா! போர்புரிவதால் பாவம் எற்படாதா?
கண்ணன்: நீ நடுநிலையான மனப்பாங்குடன் கடமையைச் செய். வெற்றி தோல்வி,லாபம்,நட்டம்,இன்பம்,துன்பம் இவைகளில் சமபுத்தியை ஏற்படுத்திக்கொள்.இந்நிலையில் நீ போர்புரிந்து பகைவர்களைஅழிப்பதால் உனக்கு பாவம் ஏற்பட்டது.
அர்ச்சுனன்: கண்ணா! பாவம் ஏற்படுத்தாத சமபுத்திக்கு மேலும் என்ன சிறப்புள்ளது?
கண்ணன்: இந்த சமநிலை அறிவு ( சமபுத்தி) பற்றி முன்பே உனக்கு சாங்கியயோகம் பகுதியில் கூறியிருக்கிறேன்.இப்போது “கர்மயோகம்” (செயல்பாடு) சார்ந்த கருத்திலும் சமபுத்தியின் சிறப்பை சொல்கிறேன்.
1. நடுநிலை மன்ப்பாங்கு ( சமபுத்தி) கொண்டுள்ள நீ எல்லாக் கருமபந்தங்களிலும் இருந்து விடுபடுவாய்
2.சமபுத்திக்கு துளியும் அழிவு ஏற்படாது.
3.இதை மேற்கொண்டால் எதிரிடையானவிளைவும் ஏற்படாது.
4.இதைச் சிறிதளவு சார்ந்த அச்சத்திலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.
அர்ச்சுனன்: கண்ணா! நீங்கள் புகழ்ந்துபேசும் சமபுத்தி நிலையை எட்ட என்ன வழிகள்?
கண்ணன்: இந்நிலையை எட்ட முதலில் உன் அறிவை ஒரே இலட்சிய முனைப்பிற்கு ஆயுதப்படுத்திக் கொள்ள வேண்டும். பரம்பொருள் தத்துவம் ஒன்று அதை எட்டவேண்டும் என்ற திடமான நிச்சயம் ஏற்பட வேண்டும்.
திடநிச்சயமுள்ள புத்தியை செயலாற்றல் மிக்க ஒருமுனைப்புள்ள் அறிவு என்பர்..இந்த நிச்சயமில்லாத புத்தி மனிதனை பல வழிகளிலும் இட்டுச் சென்று அல்லல்ப்படுத்தும். பல பிரிவுகளைக் கொண்டதாக அது பிரிந்து சிதைந்து செயல்படுத்தும்.
அர்ச்சுனன்: ஒரே முனைப்புள்ள நிச்சயம் மனித புத்திக்கு ஏன் எளிதாக ஏற்படுவதில்லை?
கண்ணன்: அறியாமைதான் காரணம். இந்த அறியாமை எப்படி ஏற்படுகிறது? ஆசாபாசங்களுக்கு அடிமையானவர்கள் .சுவர்ககலோக சுகபோகத்தை மேலாக கருதுபவர்கள். வேதத்தின் கர்ம காண்ட பகுதிகளில் கூறப்பட்டுள்ள விருப்பங்களுக்கு ஏற்ற கர்மாக்களில் பற்றுதல்ல் கொண்டவர்கள். பெளதீக சுகபோகம் வாழ்க்கையின் பயன் என்று நம்பி வாழ்பவர்கள். இத்தைகைய மனிதர்கள் மலர்ந்து மனம் வீசும் மலர்களைப்போல் கவர்ச்சிமிக்க வாக்குக்ளைத் தம் கருத்துகளைச் சாதகமாக பேசி வருவார்கள்.அவர்களுடைய கவர்ச்சிப் பேச்சுக்கள் மாறி மாறிப் பிரவிகளைத் தரும் சுயநலச் செயல்களை சிலாகிப்பவை,சுகபோகம்,செல்வம்,செல்வாக்கு ஆகியவைகளைப் பெற உதவும் அற்பச்செயல்களை விபரிப்பவை.நறுமண மலர்களில் உள்ள கவர்ச்சி இந்த ஜனகரஞ்சகப் பேச்சுகளிலும் இருக்கும். ஆனால் இம்மலர்களைப் போலவே அவை விரைவில் வாடி உருகுலைத்துவிடும்.அப்பேச்சுகளில் மயங்கி உழல்பவைகளின் கதியும் அப்படித்தான் சுயநலம் சுகபோகம் என்று உழலும் மனிதர்கள் பரமாத்மாவிடம் ஈடுபடும் என்றும் உறுதியான் அறிவை பெற முடியாது.
அர்ச்சுனன்: சுகபோகம், செல்வம்,செல்வாக்கு அகியவைகளில் ஏற்படு, பற்றுதலிலிருந்து விடுபட நான் என்ன செய்ய வேண்டும் பரமாத்மாவே வழி காட்டுங்கள்.
கண்ணன்: வேதங்கள் சத்துவம் ரஜஸ் தமஸ்(அடக்கம்,மிடுக்கு,வெறி) எனும் முக்குணங்களைக் கொண்ட உலகியல் வாழ்வை விவரிக்கின்றன.
அர்ச்சுனா! வேதங்கள் விவரிக்கும் ஆசாபாசங்கள் நிரம்பிய செயல்களில் நீ பற்றுதல் கொள்ளாதே ,விருப்பு,வெறுப்பு எனும் தளைகளிலிருந்து நீ தவித்திரு.சாசுவதமான பரமாத்துவத்தில் (உடல் அழிவற்றது.உடல் அழிவும் மாற்றமும் கொண்டது)எனும் திடலுணர்வுடன் நிலை பெற்று இரு.கிடைக்காத பொருளைப் பெறவும்.கிடைத்த பொருளைப் பாதுகாக்கவும் கவலைப்படாதே முயற்சிக்காதே.பரம்பொருளைப் பெறும் ஒரே இலட்சியத்தில் உறுதியுடன் நிலைத்திரு.!
அர்ச்சுனன்: அப்படி ஒரு இலட்சிய நிலைப்பாட்டில் திடமாக இருப்பவர்களுக்கு என்ன ஏற்படும் கண்ணா?
கண்ணன்: அர்ச்சுனா! பெரிய அழகில் குளம் ஒன்று உருவானபின் அதற்கு முன் பயன்படுத்திவந்த சிறியகுட்டை தேவையில்லாமல் போகிறது.அதன் மதிப்பும் மறைந்து விடுகிறது.அதெபோலத்தான் வேதங்களின் பரந்த தத்துவங்களையும் ,சாஸ்திரங்களின் போதனைகளிஅயும் நன்கு அறிந்த ஞானிகள் வாழ்ந்தும் துறந்தும் நிற்கும் மகாபுருஷர்கள்.இவர்களை ஜீவன் முத்தர் ( வாழ்ந்த நிலையிலேயே பற்றுதலின்றி இருக்கும் பெருமை பெற்றவர்கள்) என்பர்.இந்த மகான்கள் உலகியல் சுகபோகங்களுக்கும் செல்வம்,செல்வாக்கு போன்ற வைபவங்களுக்கும் மதிப்பு அளிப்பதில்லை.அவைகளை விரும்பவும் மாட்டார்கள்.
அர்ச்சுனன்: கண்ணபிரானே! நான் அந்த ஜீவன் முக்த நிலையைப் பெற என்ன செய்ய வேண்டும்?
கண்ணன்: கர்ம யோகத்தைக் கடைப்பிடி.செயலில் முனைப்புதான் கர்மயோகம் செயலின் விளைவைப் பற்றிச் சிந்திக்காமல் செயல்திறன் பற்றியே சிந்தித்து முனைவது யோகம் .செயல்புரிவது உன் கடைமை பலனை எதிர் நோக்குவது அல்ல.செயல் முனைப்புதான் உனக்கு உரியது.மேலும் கர்மபலன்களுக்கு நீ காரணமாகதே அதாதவது நீ செயலாற்றுவதற்கு உறுதுணையாக இருக்கும்.உன் உடல்,உள்ளம் அறிவு முதலியவற்றில் பற்றுதல் வைக்காதே.
அர்ச்சுனன்: அப்படியானால் நான் ஏன் செயலாற்ற வேண்டும்?
கண்ணன்: செயலாற்றாமல் இருப்பதிலும் நீ ஈடுபாடு கொள்ளக்கூடாது.பற்றுதல் எதிலும் இருக்கலாகாது.
அர்ச்சுனன்: அப்படியானால் நான் செயல் புரியமுடியும்?
கண்ணன்: செயலில் நிறை குறை வெற்றி தோல்வி ஆகியவற்றில் நடுநிலையுடன் இருத்தல் “யோகம்” ஆகையால் தனஞ்சயா! நீ பற்றுதல்,விருப்பு வெறுப்பு இவைகளைப் புறக்கணித்து விட்டு சமநிலையில் நிலைத்திருந்து கர்மத்தை செய்!
அர்ச்சுனன்: சமநிலையில் நிற்காமல் நான் செயல் புரிந்தால் என்ன ஆகும்?
கண்ணன்: விருப்பு -வெறுப்பற்ற சமநிலையுடன் செய்யாத செயல் இழிவையே தரும். தனஞ்சயா ! நீ சமநிலை, சமபுத்தியை மேற்கொள். செயலின் விளைவை ( பயனை) விரும்புவன் அற்பன்.அவனது சுயநலபுத்தி செயலைவிட்டு பயனில் ஈடுபடுகிறது.பயனுக்கு அடிமையாகிறது.
அர்ச்சுனன்: கர்மபலனை விரும்புவன் அற்பன் என்றால் சிறந்தவன்( மேலானவன்) எவன்?
கண்ணன்: சமபுத்தி கொண்டவன் சிறந்த மனிதன். அவன் இந்த மானிட வாழ்கையிலேயே பாவ -புண்ணியயங்களுக்கு அப்பாட்பட்டவனாகிரான்.ஆகையால் அர்ச்சுனா! நீ சமநிலை, சமபுத்தியில் திடமாக நிலைத்திரு.இதுதான் செயல்த்திறன்.
அர்ச்சுனன்: சமபுத்தியின் விளைவு என்ன?
கண்ணன்: “யோகம்” எனப்படும் சமபுத்தி,சமநிலை, சமநிலை கொண்டமனீஷி( மெய்ஞானி) செயலின் பயனில் பற்றில்லாதவர்.அவர் பிறவித் தளையிலிருந்து விடுபட்டு , உன்னதமான் அழியாப் பெரும் பதவியைப் பெறுவார்.
அர்ச்சுனன்: செயலின் பயனைத் துறந்த சமநிலையை நான் எப்படிப் பெறுவேன்,எப்போது உணர்வேன்?
கண்ணன்: அர்ச்சுனா! எப்போது உன் அறிவு மோகம் எனும் சக்தியைக் கடக்கிறதோ , அப்பொதே உனக்குள் நீ உணர்ந்த கேள்விப்பட்ட யோகங்களிருந்து பற்றின்மை ஏற்பட்டுவிடும்.
அர்ச்சுனன்: வைராக்கியம் ஏற்பட்டபின் யோகம் எனும் சமநிலை எப்போது ஏற்படும்?
கண்ணன்: பலவையான் சாஷ்திரங்களின் சித்தந்தங்கள் கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றால் சஞ்சலப்பட்டிருக்கும் உன் புத்தி உலகியல் வாழ்விலிருந்து விடுபட்டு பரம்பொருளான் பரமாத்மாவிடம் திடமாக ஈடுபடும்போது உனக்கு யோகநிலை சித்திக்கும்.
அர்ச்சுனன்: யோகநிலை சித்திபெற்ற திடமதி கொண்ட மனிதனுக்கு என்ன் அடையாளங்கள்?
கண்ணன்:  பார்த்தா! சமநிலை பெற்றவர் மனத்திலுள்ள விருப்பங்களையெல்லாம் ஒதுக்கி விடுவார் .தன்நிலையிலிருந்து தமக்குள்ளேயே மகிழிச்சி அடைகிறார்.அவர் “ஸ்திதப்ராக்ம்ஜர்”(நிலையான் சமபுத்தி பெற்றவர்.)
அர்ச்சுனன்: ஸ்திதபிரக்ஞன் எப்படிச் கருத்தை வெளியிடுவான்?
கண்ணன்: தம்பி! சாதரண மனிதர்களைப் போல் பேசுவதில்லை.சமபுத்தி-  சமநிலை கொண்டஞானி.அவருடைய செயலும் குறிப்பும் சீரிய கருத்துகளை வெளிப்படுத்தும்.அந்த ஸ்திதபிராக்ஞர் நிகழ்காலத்தில்வாழ்ந்து கொண்டிருந்தாலும் துன்பம், துயரம், சோதனை, விபத்து எனும் கேடுகள் ஏற்படும் போது வருந்துவதில்லை.சுகம், செளக்கியம், புக்ழ், செல்வம்முதலிய நலன்கள் கிட்டும்போது மகிழ்ச்சி கொள்ளுவதில்லை அந்த ஞானி  ஆசை,பயம்,பாசம்,குரோதம்,பகை ஆகிய இயல்புகளைக் கடந்தவராக இருப்பார்.
திடசிந்தனௌம் சீரீய கர்ய்த்துகளையும் கொண்ட அந்த சமபுத்திஸமநிலைச் சாதகரைத்தான் “ஸ்திதபிரக்ஞர்”என்று அழைப்பார்கள்.அவர் எல்லா நிலைகளிலும் செயல்களிலும் பற்றுதல் இல்லாதவர்.முன்வினைப் பயனாக அநுகூலமான் வாய்ப்பு வரும்போது மகிழ்சியடைய மாட்டார்.பிதிதிகூலமான சந்தர்ப்பம் ஏற்படும்போது வெறுப்படைய மாட்டார்.அவருடைய அற்வு திடமாக நிலைபெற்றிருக்கிறது.பரமாத்மாவோடு இணைய வேண்டுமென்கிற தீர்மானத்துடன் வாழும் அவர் சித்த புருஷ்ர்.
அர்ச்சுனன்: அந்த சித்த புருஷ்ர் எப்படி அமர்கிறார்?
கண்ணன்: அர்ச்சுனா! எப்படி ஆமை தனது நான்கு கால்களையும் கழுத்தையும் வாலையும் முதுகு ஓட்டுக்குள் ஒடுங்குமாறு உள்ளடக்கிக் கொண்டு கிடக்கிறதோ,அதே  போல கர்மயோகியான “ஸ்திதபிரக்ஞர்” தம் ஜம்புலன்களையும் மனத்தையும் பெளதீக விஷயங்களிலிருந்து விலக்கி ,தம் உள்ளுணர்வில் அடக்கிக் கொள்ளுகிறார். அந்நிலையில் அவருடைய அறிவு சமநிலையில் திடமாக இருக்கிறது.
அர்ச்சுனன்: ஜம்புலன்களையும் ஒடுக்கி ஒருமுகப்படுத்துதலுக்கு நேரிய அடையாளம் எது?
கண்ணன்: ஜம்புலன்களையும் தம் இலக்கான விஷயங்களிலிருந்து ( அநுபவங்களிலிருந்து) ஒதுக்கி வைக்கும் தேகாபிமனியான மனிதனிடமிருந்து அந்த விஷயங்கள் விலகிவிடுகின்றன.ஆனால் சுவை உணர்வு கொண்ட போகரஸபத்தி ( சுவை உணர்வு) விலகுவதில்லை.ஆனால் பரமாத்மாவை அடையும் சித்த புருஷனின் சுகபோக புத்தி கூட விலகிவிடுகிறது.
அர்ச்சுனன்: ரஸபுத்தி எனப்படும் சுவையை நாடும் அறிவு இருப்பதால் என்ன கேடு?
கண்ணன்: ரஸபுத்தி இருப்பதால் விஷய சாதனங்களில் பற்றுக் கொண்ட மனிதன் எவ்வளவுதான் விவேக ஞானம் உள்ளவனாக இருந்தாலும் ,குழப்பம் விளைவிக்கும் புலன்கள் அவனது மனத்தை வலுக் கட்டாயமாக விஸய அநுபவங்களில் ( உலகியல் இன்பத்தில்) ஈடுபட இழுத்துச் செல்லுகின்றன.
அர்ச்சுனன்: ரஸபுத்தியை விலக்குவதற்கு என்ன செய்யவேண்டும்?
கண்ணன்: கர்மயோகி சாதகர் எல்லாப் புலன்களையும் அடக்கித் தம் வசத்தில் இருத்தி பரமாத்மாவாகிய என்னை தியானித்து சரணடைய வேண்டும்.என் மீது நம்பிக்கை வைத்து,வேறு சிந்தனை கவலை இல்லாமல் இருக்க வேண்டும்.இவ்வாறு தம் புலன்களை அடக்கி வசப்படுத்தியவரின் புத்திநிலை பெற்று விளங்கும்.
அர்ச்சுனன்: பரமாத்மாவே! உங்களைச் சணடையாமல் இருந்தால் என்ன ஆகும்?
கண்ணன்: என்னை சரணடையாமல் இருந்தால் புலன்கள் விரும்பும் விஷய அநுபவங்களில் சிந்தனை செல்லும். மனிதனுக்கு அவைகளில் ஈடுபாடு ஏற்படும் .அவைகளை அநுபவிக்க வேண்டுமென்ற ஆசை ஏற்படும்.
அர்ச்சுனன்: ஆசை ஏற்பட்டபின் என்ன ஆகும்?
கண்ணன்: ஆசை வளரும். ஆசை நிறைவேறத் தடையோ தடங்கலோ ஏற்படும்போது வெறுப்பு மிகுந்த கோபம் ஏற்படும் பிறகு மதிமயக்கம், மூடத்தனமெல்லாம் வளரும்.
அர்ச்சுனன்: அதன் பிறகு என்ன ஆகும்?
கண்ணன்: நல்ல சிந்தனை ,மனப்பக்குவம்,பகுத்தறியும் விவேகம் எல்லாம் விலகிவிடும்.பழைய பரிபக்குவ நினைவே இல்லாமல் போகும்.இதன்னல் புத்தி சக்தி குலையும் தொடர்ந்து மனிதன் அழிவைத்தான் எட்டுவான்.
அர்ச்சுனன்: ஸ்தித பிரக்ஞரின் நிலையை உணர்த்தினீர்கள் கேசவா! அவர் எப்பட்ய் நடந்து கொள்வார் என்பதைச் சொல்லுங்கள்?
கண்ணன்: தம்பி! நிலைபெற்ற பிரக்ஞையுள்ள சாதகரின்நடவடிக்கை செயல் வடிவில் இராது.கருத்து வெளிப்பாடாக இருக்கும். புலனடக்கம்,மனவடக்கம் கொண்டசாதனையாளர் அவர்,விருப்பு -வெறுப்புகளைக் கடந்தவர்.தம் வசமுள்ள புலன்கள் மூலம் உலகியல் அனுபவங்களில் ஈடுபட்டிருந்தாலும், உள்மனத்தின் திருப்தியுடன் வாழ்கிறார்.
அர்ச்சுனன்: உள்மனம் எனும் அந்தக்கரணத்தின் திருப்தியைப் பெற்றபின் என்ன ஆகும்?
கண்ணன்: அத்தகைய திருப்தி கொண்ட மனிதரின் எல்லாத் துயர்களும் நசித்து விடுகின்றன.அந்த சாதகரின் சமபுத்தி விரைவிலேயே பரமாத்மாவோடு நிலையாக இணைந்து விடுகிறது.
அர்ச்சுனன்: எவருக்கு புத்தி நிலைபெறுவதில்லை?
கண்ணன்: எந்த மனிதனின் மனமும் இந்திரியங்களும் அடங்கி இருக்கவில்லையோ .அவனிடம் நிலைபெற்றிருக்கும் சம புத்தி ஈராது.அவனுக்குத் தன் கடமை உனர்வில் பிடிப்பு இராது.கடமையில் திட்மான ஈடுபடு இல்லையேல் ,அமைதி கிட்டாது.அமைதியை இழந்த மனிதனுக்கு மகிழ்ச்சி ஏது?
அர்ச்சுனன்: உலகியல் உழல்பவனிடம் புலன்கள் அடங்கி இராது.ஆனால் சாதகராக இருப்பவருக்கும் நிலையான் சமபுத்தி ஏற்படாமல் போவதற்கு என்ன காரணம்?
கண்ணன்: காரண்ம் புலனடக்கமும் மனவடக்கமும் இணைந்து வசப்பட்டு இராததுதான். நீரில் செல்லும் ஓடத்தை காற்று தன் திசையில் இழுத்துச் செல்வதைப் போலே ,சாதகரின் புலன்கள் தம் விஷயங்களில் ஈடுபட்டிருக்கும்போது ஏதாவது ஒரு புலன் சஞ்சலமான் மனத்துடன் இணைந்து விட்டால் போதும்.அந்த மனமே சாதகரின் புத்தியைக்குலைத்துவிடும்.சமநிலைகெட்டுவிடும்.
அர்ச்சுனன்: பின் எவருக்கு த்தான் புத்தி நிலைபெறுகிறது?
கண்ணன்: வீரத்திருமகனே! ஜம்புலன்களும் எவருக்கு முழுவதும் கட்டுபப்ட்டு இருக்கின்றனவோ, எவருடைய உள்ளம் பெளதீக விஷய அநுபவங்களில் பற்றுதலின்றி இருக்கிறதோ, அத்தகைய சாதகரின் பிரக்ஞை( பகுத்தறிவு) ஒரே குறிக்கோளில் நிலைபெற்று இருக்கிறது.
அர்ச்சுனன்: எவருக்கும் புலனடக்கம் இல்லையோ அத்தைகைய சாமானிய மனிதருக்கும், புலனடக்கம் உள்ள சாதகருக்கும் உள்ள வெளிப்படையான வித்தியாசம் என்ன?
கண்ணன்: புலன் அநுபவங்களுக்கு இலக்காகி உழலும் சாமனிய மனிதர் பரமாத்தாவுடன் இணையும் சாதனையில் ஈடுபடாமல் மதிமயங்கி மோக நித்திரையில் ஆழ்ந்திருப்பார்.அக்காலம் அவர்களுக்கு இருள் சூழ்ந்த இரவு ,அத்தகைய இராக்காலத்தில் அடக்கம் மிக்க ஞானிகள் விழித்திருப்பார்.பரமத்ம தத்துவதத்தில் இலயிருத்திருப்பார்கள். சாமானிய மனிதர்கள் விழிப்புணர்வுடன் சுகபோகங்களை அநுபவித்தும் பொருள் சம்பாத்தித்தும் பொழுது போக்கும் காலத்தில், ஞானிகள் ஆத்மலயிப்பில் அமைதியுடன் மூழ்கியிருப்பார்கள்,இதைதான், சாமானியயர்கள் மதிமயங்கி உறங்கும் இரவு ஞானிகளுக்குப் பகல் என்றும் சாமனியர்கள் அமைதி காணும் இரவு என்றும் சொல்வார்கள்.
அர்ச்சுனன்: அப்படியானால் அடக்கம் உள்ள சாதகர்களுக்கு எதிரில் பெளதீக சுகபோகப் பொருள்கள் வருவதில்லையா?
கண்ணன்: வருவதுன்டு இதனால் அடக்கமுள்ள சாதகர் சஞ்சலம் அடைவதில்லை.எப்படிக் கம்பீரமான் கடல் தம்மிடம் வந்து சங்கமிக்கும் நதிகளால் எந்த மாற்றத்தையும் பெறுவதில்லையோ,அதே போலத்தான் அடக்கமுடையோர் எதிரில் உலகியல் சுகபோகப் பொருள்கள் எதிர்ப்படுகின்றன.இதனால் அவர்களூடைய மனம் பேதலிப்பதில்லை.இத்தகைய மாமனிதர்கள் தான் பரமாத்ம தத்துவமான பரம சாந்தியைப் பெறுகிறார்கள்.போக விசயங்களில் ஈடுபாடு கொண்ட சம்சாரிகளுக்கு இந்தப் பேரமைதி கிட்டாது.
அர்ச்சுனன்: ஆசாபாசம் உள்ள சம்சாரிகளுக்கு ( சாந்தி) எப்படிக் கிட்டும்?
கண்ணன்: சுகபோகங்களில் ஏற்படும் ஆசாபாசங்களை முற்றிலும் துறந்து விட்டால் அமைதி பெறலாம்.எந்த மனிதன் எல்லா ஆசைகளையும் பாசங்களையும் விடுவதோடு தான் தனது எனும் செருக்ககையும் துறந்து வாழ்கிறனோ,அவனுக்கு சாந்தி கிடைக்கும்.
அர்ச்சுனன்: புருஷோத்மரே!செருக்கைத் துறந்த சாதகரின் நிலைப்பாடு எப்படி இருக்கும்?
கண்ணன்: செருகொழிந்த சாதகரின் நிலைப்பாடு பிரும்பத்தில் ஈடுபட்டிருக்கும் பார்த்தா! இதைத்தான் பிரும்ம நிலை என்பர்.இந்நிலையை எட்டியதும் அந்த சாதக மனிதர் எக்காலத்திலும் மோக பாசத்தில் சிக்கமாட்டார்.தம் இறுதிக் காலத்திலும் பிரும்ம நிலையில் இருப்பவர்.நிர்வாண பிரும்மம் எனும் பரம சாந்தி நிலையில் முக்தி பெறுகிறார்.