Thursday, February 28, 2013

மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள்



கலியுகத்தில் நாமசங்கீர்த்தனமும், வழிபாடும் மிகச் சுலபமாக இறைவனை அடையும்
வழியாகும். ஸ்ரீபோதேந்திர சுவாமிகள், ஸ்ரீதர ஐயர்வாள், மருதாநல்லூர் சுவாமிகள்
மூவரும் நாமசங்கீர்த்தனத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி மக்களிடையே
விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள் ஆவர்.

நாமபஜனையில் பாகவதர்களின் கீர்த்தனைகளை வரிசைப்படுத்தி, மிருதங்கம்
போன்ற வாத்தியங்களை இசைத்து மனதை ஒருமுகப்படுத்தி புனிதமான இறைவழிபாட்டு
முறையை மேம்படுத்தியவர் சத்குரு மருதாநல்லூர் சுவாமிகள்.

சீதாகல்யாணம், ராதாகல்யாணம், ருக்மணி கல்யாணம் போன்ற பஜனை
சம்பிரதாயங்களை உருவாக்கி, "மருதாநல்லூர் பாணி" என்று புகழ்பாடும் அளவிற்கு
அதை மக்களிடையே பரப்பியவர்.

1777 முதல் 1817வரை 40 ஆண்டுகள் வாழ்ந்தார். இளம்பிராயத்தில் "வெங்கட்ராமன்'
என்ற பெயர் பெற்ற சுவாமிகள், தெலுங்கு பிராமணர் வம்சத்தில் பிறந்தவர். இவரது
தந்தை காவியங்களில் பற்றுடையவர்.

பக்திமான் என்பதால், சுவாமிகளுக்கு வேதத்துடன் கூட, ராமகாவியத்தை திரும்பத்
திரும்ப சொல்லி மனதில் பதிய வைத்தார். இதனால், ராமஜபம் மட்டுமில்லாமல்,
உள்ளும் புறமும் தன்னை ஸ்ரீராமனாவே பார்த்துக் கொண்டார்.

பாகவதர்களின் இருப்பிடமாகிய திருவிசைநல்லூரில் வசித்த இவருக்கு, சிறுவயதிலேயே
இவரது தாயார் பல மகான்களின் கதைகளைச் சொன்னார். தன் தந்தை செய்த சிரார்த்தம்
முதலான வைதீக காரியங்களில் பிழைப்புக்காக ஈடுபட்டு வந்தார்.

ஒருநாள் பக்கத்து ஊருக்கு சிரார்த்தம் செய்ய சென்ற போது, ராமநாம ஜபம் செய்ய
ஆரம்பித்து விட்டார். காலையில் ஆரம்பித்த ஜபம் மாலையில் தான் முடிந்தது.
சிரார்த்தம் பற்றிய நினைப்பு வந்தவுடன், ஓடிச்சென்று அந்த வீட்டுக்காரரை
பார்த்து மன்னிப்பு கேட்க முயற்சி செய்த போது,  "நீங்கள் இன்று வெகுநன்றாக
சிரார்த்தம் செய்து வைத்தீர்கள்,'' என்று சொன்னதைக் கேட்டு, பகவத் அருளை
நினைத்து திகைத்து நின்று விட்டார்.

இவர் ஜானகி என்ற பெண்மணியை திருமணம் செய்து கொண்டார். தந்தையார் இறந்த பிறகு,
குடும்பத்தை நடத்த, பக்கத்து ஊருக்குச் சென்று குழந்தைகளுக்கு வேதம் சொல்லித்
தந்தார். இவரிடம் கற்றுக் கொண்ட மாணவர்களுக்கு படிப்பு நன்றாக வந்ததால், இவரது
புகழ் எங்கும் பரவியது. கூட்டம் பெருகியது. இது இவரது ஜப வாழ்க்கைக்கு
இடையூறாக அமைந்தது.

எனவே, தம் சொத்துக்களை உறவினர்களிடம் கொடுத்து விட்டு ராமஜபம் செய்யும்
ஆசையில் அயோத்திக்கு புறப்பட்டு விட்டார். உஞ்சவிருத்தி எடுத்து
நாமசங்கீர்த்தனம் செய்து கொண்டே ஆந்திரா வந்து விட்டார். திருப்பதி செல்லும்
பக்தர்கள் ஒரு குழுவாக அமர்ந்து ராமா ராமா என்று சொல்லி ஆடிப்பாடிக்
கொண்டிருப்பதை கண்டார்.

"தமிழகத்தில் கடவுள் பெயரைச் சொல்வதற்கே வெட்கப்படுகிறார்களே! ஆனால், இங்குள்ள
மக்கள் பக்தியுள்ளவர்களாக இருக்கிறார்களே,'' என எண்ணியவராய், வடக்கே இருந்த
சம்பிரதாயங்களையும், தெற்கே இருந்த கீர்த்தனைகளையும் ஒன்றாக இணைத்து ஒருநாம
சங்கீர்த்தன முறையை உருவாக்க எண்ணினார்.

அன்று இரவில் போதேந்திரர் கனவில் தோன்றி, "" உன் பிறப்பின் நோக்கத்தை அறிந்த
பிறகும் அயோத்திக்கு ஏன் செல்கிறாய். உன் ஊருக்குச் சென்று நாமசங்கீர்த்தனத்தை
பரப்ப ஏற்பாடு செய்,'' என்றார். உடனே, சுவாமிகள் மருதாநல்லூர் திரும்பி
விட்டார்.

ஜெயதேவரின் கீதகோவிந்தம், போதேந்திர சுவாமிகள், ஐயர்வாள், பத்ராசலம் ராமதாசர்
போன்ற மகான்களின் பாடல்களை ஒன்றிணைத்து ஒரு அழகான நாமசங்கீர்த்தன முறையை
உருவாக்கினார். அதை அந்த ஊரில் உள்ள எல்லா பெரியவர்களுக்கும்,
குழந்தைகளுக்கும் கற்றுத் தந்தார். மருதாநல்லூரில் ஒரு மடத்தை ஸ்தாபித்தார்.
இதன்பிறகு, சத்குரு மருதாநல்லூர் சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார்.

போதேந்திர சுவாமிகளின் சமாதியை பார்க்க, இவர் கோவிந்தபுரம் சென்றபோது, சமாதி
எங்கிருக்கிறது எனத் தெரியவில்லை. அவரது சமாதியைக் கண்டுபிடிக்கவேண்டும் என்ற
தீர்மானத்துடன் 9 நாட்கள் உண்ணாமல்,உறங்காமல், அசையாமல் ராமநாம ஜபம் செய்தார்.

10வது நாள் உத்வேகம் வந்தவராய், காவிரியாற்று மணலில் பல இடங்களில் காது வைத்து
கேட்க, ஓரிடத்தில் சிம்ம கர்ஜனையாக "ராம் ராம்' என்ற நாமம் காதில் கேட்டது.
அந்த இடமே மகானின் ஜீவசமாதி என்பதை அறிந்த சுவாமிகள்

தஞ்சை மன்னர் சரபோஜியின் உதவியுடன் சமாதி அமைக்க ஏற்பாடு செய்தார். சுவாமிகள்
சரபோஜி மன்னரைத் தேடிச் செல்வதற்கு முன்னதாக ஒருநாள், மன்னரின் கனவில்
ஆஞ்சநேயர் தோன்றி, ""உன்னைத் தேடி ராமச்சந்திரமூர்த்தி வந்துள்ளார்,'' என்று
சொன்னார். இதனால் சரபோஜி மன்னர், சுவாமிகளின் பாதங்களில் விழுந்து
ஆசிபெற்றார்.

மருதாநல்லூர் சுவாமிகள் பல அற்புதங்களை நிகழ்த்தினார். ஒருமுறை அவர்
உஞ்சவிருத்தி எடுத்துவரும்போது, பாலகலோசன் என்பவர் அவரை அவமரியாதை செய்தார்.
இதனால் அவருக்கு வயிற்றுவலி வந்து அவஸ்தை அதிகமானது. அவரது மனைவி சுவாமிகளிடம்
மன்னிப்பு கேட்டு தீர்த்தம் பெற்றார். அதை கணவருக்கு அளித்தாள். வயிற்றுவலி
நீங்கிய பாலகலோசன் அவரது சீடரானார். அந்த சீடர் எழுதிய, "அதடே பரபிரும்மம்' என்ற பாடல் குருவணக்கமாக பாடப்படுகிறது.

1817ல், ராமநவமிக்கு முதல்நாள், ஆடுதுறை பெருமாள் கோயிலில் ஜெகத்ரட்சக சுவாமி
சந்நிதியில் இறைவனுடன் ஐக்கியமானார்.

பகவந்நாமா:
வாயால் பகவந்நாமாவைச் சொல்லிப் புண்ணியம் செய்யவேண்டும்.
“சம்பாதிப்பதிலேயே பொழுதெல்லாம் போய் விடுகிறது. இதற்கு அவகாசம்
இல்லையே” என்பீர்கள்.
சம்பாதிப்பது க்ருஹஸ்தர்களுக்கு அவசியம்தான். ஆனால்
யோசித்துப்பார்த்தால் அதற்கே முழு நேரமும் போய்விடவில்லை என்று தெரியும்.

வீண் பேச்சு, பரிஹாசம், வேடிக்கை பார்ப்பது, நியூஸ்பேப்பர் விமரிசனம் இவற்றில்
எவ்வளவு பொழுது வீணாகிறது!

அதையெல்லாம் பகவந்நாம ஸ்மரணயில் செலவிடலாமே. இதற்கென்று தனியே
பொழுது ஏற்படுத்திக் கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை.

ஆபீஸ்க்கு பஸ்சிலோ, ரயிலிலோ போகும்போது பகவந்நாமாவை ஜபித்துக்கொண்டே போகலாமே!
ஓடி ஓடி சம்பாதிப்பதில் ஒரு பைசா கூட பிற்பாடு உடன்வராதே.
மறுஉலகத்தில் செலவாணி பகவந்நாமா ஒன்றுதானே.
மனசு பகவானின் இடம்.

அதை குப்பைத்தொட்டியாக்கியிருக்கிறோம். அதை
சுத்தப்படுத்தி, மெழுகி, பகவானை அமரவைத்து, நாமும் அமைதியாக அமர்ந்து
விட வேண்டும். தினமும் இப்படி ஐந்து நிமிஷமாவது தியானம் செய்ய வேண்டும்.

லோகமே மூழ்கிப்போனாலும் நிற்காமல் நடக்கவேண்டிய காரியம் இது. ஏனெனில், லோகம்
முழுகும் போது நமக்கு கைகொடுப்பது இந்த பகவந்நாமாதான்.

No comments:

Post a Comment