Wednesday, July 6, 2011

அர்த்தம் நிறைந்த ஆன்மீகத் தத்துவங்கள்- 2


தீபாராதனை காட்டுவது ஏன்?

கோயில்களில் கற்பூர தீபாராதனையும், நெய்விளக்கு தீபாராதனையும் காட்டப்படுகின்றன. கற்பூரமும் நெய்விளக்கும் கடைசிவரை எரிந்து போகும். எதுவும் மிஞ்சாது.மனிதன் இறந்த பிறகும் இதே நிலை தான். எஞ்சும் சாம்பல் கூட தண்ணீரில் கரைக்கப்பட்டு விடுகிறது. இந்த தத்துவத்தை உணர்த்தவே கோயில்களில் தீபாராதனை காட்டப்படுகிறது. எனவே இந்த தத்துவத்தின் படி எதுவுமே மிச்சமில்லாமல் நம்மை இறைவனுக்கு அர்ப்பணிப்போம். இதர வகை வழிபாடுகளில் பிரசாதமாக ஏதேனும் மிஞ்சும். ஆனால், கற்பூர வழிபாட்டில் எதுவுமே மிஞ்சாது. நாமும் கற்பூரத்தை போல் நம்மை முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணித்து வழிபட்டால் இறைவனது ஜோதி தரிசனம் கிடைக்கும் என்பதையே கற்பூர தீபாராதனை உணர்த்துகிறது.

தீபாராதனையில் ஆலயமணி ஒலிப்பதேன்?

தீபாராதனையின் போது கோயிலில் எழும் ஒலி நம் காதில் விழும். கோயிலுக்கு வரும் சிலர் லோகாயத விஷயங்களை பேசலாம். அது உண்மையான பக்தர்களின் இறையுணர்விற்கு இடையூறாக இருக்கலாம். வேண்டாத வார்த்தைகள் காதில் விழாது.
மணியோசை கேட்டு துர்தேவதைகள், ராட்சசர்கள் எல்லாம் ஓடிவிடுவர். பூஜாமணி தீபாராதனையின் போது எல்லோருடைய மனதையும் ஒரு மிக்கச் செய்கிறது. மணிஓசையில் ஓம் என்ற பிரணவ மந்திரமும் கலந்து ஒலிப்பதாக சொல்வதுண்டு.

கோலம் போடுதேன்?.

கோலம் போடும் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்கிறாள். சூரிய உதயத்திற்கு முன் வாசலில் சாணம் தெளித்து கோலம் போட வேண்டும். வீட்டிலிருந்து யாரேனும் வெளியே கிளம்பும் முன்பாக கோலம் போட வேண்டும். கோலத்தில் தவறு ஏற்பட்டால் காலால் அழிக்காமல், கையால் அழிக்க வேண்டும். வீட்டின் வெளி முற்றம், படிகள், திண்ணை, நடை, உள்முற்றம், சமையல் அறை, பசுவின் கொட்டில், துளசி மாடம், பூஜை அறை, இவற்றில் கோலமிடல் வேண்டும். அதிகாலையில் அரிசி மாவினால் கோலம் போடும் போது எறும்பு போன்ற சிறு உயிர்களின் பசியைப்போக்கிய புண்ணியம் கிடைக்கும். அதே போல் அமர்ந்து கோலம் போடக்கூடாது. வேலையாட்கள் வைத்தும் கோலம் போடக்கூடாது. சுபகாரியங்களின் போது இரட்டைக்கோடுகள் வருகின்ற மாதிரி கோலம் போட வேண்டும்

சாப்பிட்ட பின்பு குளிக்கலாமா?

காலையில் எழுந்ததும் காலைக்கடன்கள் முடித்து, குளித்தபின்பே சாப்பிடவேண்டும். எக்காரணத்திற்காகவும், சாப்பிட்ட பின்பு குளிக்கவே கூடாது. சாப்பிட்ட உணவு செரிப்பதற்கு, வெப்பம் அவசியம் தேவை. சாப்பிட்ட பின்பு குளித்தால் உடலின் வெப்பம் குறைந்து விடும். எனவே, செரிப்பதற்கு நேரமாகும்.வயிற்றிலும் வீண் தொல்லை ஏற்படும். காலப்போக்கில் பசியும் எடுக்காது. இதனால் தான் குளிக்கும் முன்பு சாப்பிடக்கூடாது என்பர். இதையே பெரியோர், குளிக்கும் முன் சாப்பிட்டால் போஜனம் கிடைக்காது, எனவும் சொல்லி வைத்தன

உங்களுக்கு ஓர் செய்தி!

ஒரு குடும்பத்தில் அண்ணன், தம்பி, மாமியார், மருமகள், தந்தை, மகன் என உறவோடு வாழ்ந்து வருகிறோம். ஆனால், ஆளுக்கொரு கருத்து கொண்டு பிரச்சனைகளைத்தான் சந்தித்துக் கொண்டு இருக்கிறோம். ஸ்ரீராமர் குடும்பத்தினர் இப்படி இல்லை. மிகுந்த ஒற்றுமையுடன் அனுசரணையாக நடந்து கொண்டனர். அவர்களின் வாழ்க்கை முறையிலிருந்து பல செய்திகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ராமன்+அயனம் என்பதே ராமாயணம் ஆயிற்று. ராமன் காட்டிய வழி என்று இதற்குப் பெயர். அதற்காக ராமன் காட்டிற்கு மனைவியுடன் சென்றானே, அது போல் நாமும் போக வேண்டுமா என எண்ணக் கூடாது. காட்டிற்கு போ, 14 வருஷம் இரு என்று தந்தை சொன்னவுடன் ஏன்? எதற்கு? என்ற கேள்வி கேளாமல் மலர்ந்த முகத்துடன் ராமன் புறப்பட்டான். பிள்ளைகள் தந்தை சொல்லைக் கேட்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. கணவன் புறப்பட்டவுடன் மனைவி பின்னாள் போனாள். இதைத்தான் ராமன் இருக்குமிடம் சீதைக்கு அயோத்தி என்றார்கள். அவள் கண்ணைக் கசக்கிக் கொண்டு, என் மாமனார் இப்படி செய்து விட்டாரே! இவரெல்லாம் ஒரு மனுஷனா? என்று கதறிக் கொண்டு தகப்பனார் வீட்டுக்கு ஓடவில்லை. கணவனின் மனமறிந்து நடக்கும் வீட்டில் சண்டைக்கு இடமில்லை. மாமியார்கள் யாரும் சீதாவைக் கொடுமைப்படுத்தவில்லை, கைகேயி உட்பட. உன் புருஷன் காட்டுக்கு போகட்டும், நீ இங்கேயிருந்து எங்களுக்கு சேவகம் செய், என அதிகாரம் செய்யவில்லை. மாமியார்கள் மருமகள்களை கொடுமை செய்யக்கூடாது என்பதை இது உணர்த்துகிறது. மைத்துனர்கள் அண்ணன் மனைவியை தாயாக மதிக்க வேண்டும் என்பதை லட்சுமணன், பரத, சத்ருக்கனர்களின் கதாபாத்திரங்கள் சுட்டிக்காட்டின. ஒரு ஆணும்,பெண்ணும் எப்படி இருக்கக்கூடாது என்பதை உணர்த்தின ராவண, சூர்ப்பனகை பாத்திரங்கள். இப்படி அன்றாட வாழ்வின் ஒரு குடும்பத்தினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் நூல் ராமாயணம்

No comments:

Post a Comment