Thursday, February 27, 2014

“இங்கிலீஷ் எழுத்துக் கணக்குப்படி பேர் மாற்றம் செய்வது சரியல்ல!


பரீட்சையில் நிறைய மார்க் வாங்கினால்தான் மேலே படிக்க முடியும். இல்லையென்றால்வெறும் போஸ்ட் கிராஜூவேட் படிப்புடன் நின்றுவிட வேண்டியதுதான்.
நான் எவ்வளவு முயன்றும் எண்பதுக்கு மேல் வாங்க முடியவில்லை. தொண்ணூறாவது வேணும் ந்யூமராலஜி பிரகாரம் பெயரை மாற்றி வைத்துக்
கொண்டால் மார்க் நிறைய கிடைக்கும் என்றார்கள். எண் கணித ஜோதிடர் ஒருவரிடம் போனேன். நாராயணசாமி (Narayanaswami) என்ற பெயரை ‘Narain’ என்று வைத்துக்கொள்ளச்சொல்கிறார். பெரியவா உத்திரவு கொடுத்தால்
‘நாரெய்ன்’ என்று வைத்துக்கொள்வேன்.
பெரியவா சந்நிதியில் பதினைந்து பேர் நின்றுகொண்டிருந்த போது தன் விண்ணப்பத்தைச் சொல்லி முடித்தான், கல்லூரி மாணவன் ஒருவன்.
இதை சாக்காக வைத்துக்கொண்டு பெரியவாள் ஒரு சிறு சொற்பொழிவே நிகழ்த்திவிட்டார்கள்!
“நாற்பது சமஸ்காரங்களில் ஒன்று நாமகரணம். பலபேர்கள் முன்னிலையில், வேத மந்திரங்களைக் கூறி நிகழ்த்தப்படும் சடங்கு, நாமகரணம் செய்வதற்கு (பெயர் வைப்பதற்கு)த்தான் வேத மந்திரங்கள் இருக்கின்றன.
நாமவிகரணத்துக்கு (பெயரை சிதைத்து, மாற்றுவதற்கு) இல்லவே இல்லை.
ஸ்வாமி பெயரைத்தான் வைக்கச் சொல்லியிருக்கு ‘நம்பி,பிம்பி’ என்று பெயர் வைத்தால் அதெல்லாம் பின்னால் காப்பாற்றாது; ‘கண்ணன் பெயரை
வையுங்கள்’ என்று ஓர் ஆழ்வார் பாடியிருக்கிறார்.
நாராயணசுவாமியை, அவ்வளவு நீளமாகக் கூப்பிடாவிட்டாலும் , நாராயணா, நாராயணா என்று அழைப்பார்கள்.சுலபமா புண்ணியம் கிடைச்சிடும்.
ந்யூமராலஜி என்று சமீப காலத்தில் பிரசித்தமாக இருக்கு. ஒவ்வோர் இங்கிலீஷ் எழுத்துக்கும் நம்பர் கொடுத்து, அதைக் கூட்டி ,’நல்லது கெட்டது’ என்கிறார்கள். இது, சுதேசிச் சரக்கு இல்லை என்பது தெரிகிறது. எண் கணிதப்படி பெயர் மாற்றம் செய்து கொண்டவர்களில் பலர், நல்ல பலன் கிடைத்தது என்கிறார்கள்….
அது போகட்டும், ந்யூமராலஜியைப் பற்றி இப்போ தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை.
பையனுக்கு நிறைய மார்க் வாங்கணும் என்று கவலை, அதனால் பெயரைக் கொஞ்சம் மாற்றி வைத்துக்கொண்டால், ஆதாயம் கிடைக்காதா என்று பார்க்கிறான். அந்த ஆசை சரிதான்; வழி அவ்வளவு சரியில்லையோ? என்று சிந்திக்க வைக்கிறது.
கல்வி அறிவை சரஸ்வதி கடாக்ஷம் என்பார்கள். சரஸ்வதியின் அருள் இருந்தால் படிப்பு வரும்; மார்க் வரும். அதற்கு என்ன செய்யணும்.
சரஸ்வதி ஸ்தோத்திரம் இருக்கு. சௌந்தர்யலஹரியிலே மூணு சுலோகம்,
ஸாரஸ்வத ப்ரயோகம்,மேதா ஸூக்தம் என்று வேத மந்திரமே இருக்கு.
குமரகுருபரரின் சகலகலாவல்லிமால, கம்பநாட்டாழ்வாரின் சரஸ்வதி ஸ்தோத்திரம் எல்லாம் பாராயணம் செய்யலாம்.
ஹயக்ரீவர் என்று விஷ்ணு அவதாரம். அவர்தான் சகல கலைகளுக்கும்,
ட்ரெஷர் ஹௌஸ் என்பார்கள். ஹயக்ரீவ ஸ்தோத்திரம், மந்திரம் இருக்கு.
மேதா தக்ஷிணாமூர்த்தி மந்திரம் இருக்கு.
இவைகளையெல்லாம் லட்சியம் செய்யாமல் இங்கிலீஷ் எழுத்துக் கணக்குப்படி பேர் மாற்றம் செய்து கொள்வது, சாஸ்திர சம்மதமாகப் படவில்லை.”
இத்தனை விஷயங்களையும் பொதுவாகச்சொல்லிவிட்டு, பின்னர் மாணவனைப் பார்த்தார்கள் பெரியவாள்.
அவன் கண்கள் கெஞ்சிக் கொண்டிருந்தன.
தொண்டர் மூலமாகப் பிரசாதம் கொடுக்கச்சொன்னபோது, மாணவன் பெயரைக்
கேட்கச் சொன்னார்கள் பெரியவாள்.
“நாராயணஸ்வாமி” என்று கம்பீரமாகப் பதில் வந்தது!

No comments:

Post a Comment