Thursday, January 31, 2013

நவக்கிரகங்களும் எளிய பரிகாரங்களும்;

சூரிய பகவான் : 
பித்ருக்களுக்கு நாம் செய்யும் திதியின் பலனை நம்மிடம் இருந்து பெற்று பித்ரு தேவதைகளின் மூலம் மறைந்த நமது மூதாதையர்களிடம் சேர்ப்பவர் சூரியபகவானாவார். தினமும் நீராடியவுடன் கிழக்கு திக்கை நோக்கி சூரிய பகவானை வணங்குவதும், புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் நீரில் நின்று சூரியனை நோக்கி இரண்டு கைகளிலும் நீர் விடுவது சூரியனுக்கு உகந்தது. 
சந்திர பகவான் :
சந்திரனின் பலம் அதிகரிக்க மனித மூளையின் செயல்பாட்டு திறன் உயர்கிறது. சுக்கிலபட்சம் என்ற வளர்பிறையில் மனிதனின் அறிவாற்றல் அதிகரிக்கிறது. கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறையில் மனிதனின் அறிவுத் திறமை குறைகிறது. (இதனால் தான் நல்ல காரியத்தை வளர்பிறையில் துவங்குகிறார்கள்) திங்கட்கிழமையில் உபவாசம் இருந்து ஏதாவது கோவில் ஒன்றில் மாலையில் தீபம் ஏற்றுவது சந்திரதோஷ பரிகாரமாகும். 

குரு பகவான் : 
விவாகத்திற்கும், குழந்தை பாக்கியத்திற்கும் குரு பலன் அவசியம். வியாழக்கிழமை விரதம் இருந்து மாலையில் திருக்கோவில் ஒன்றில் நெய்தீபம் ஏற்றுவதாலும், வியாழன் அன்று பெரியவர்கள், துறவிகள், சாதுக்களை வணங்கி ஆசி பெறுதலும், குரு தோஷ பரிகாரமாகும். 

ராகு பகவான் : 

தவறான காதலில் விழுந்து தங்கள் வாழ்வை அழித்துக் கொள்ளும் பெண்களின் ஜாதகத்தை ஆராய்ந்தால் அதில் ராகுவின் பங்குள்ளதை அறியலாம். இத்தகைய ஜாதகம் அமைந்த பெண்களுக்கு கூடிய வரையில் ராகுவின் ஆதிக்கம் வருவதற்குள் திருமணம் செய்துவிடுவது நல்லது. ஜாதகத்தில் புத்திரதோசம், சயன தோஷம், களத்திர தோசம், மாங்கல்ய தோசம், காலசர்ப்ப தோஷம் இருப்பவர்கள் ராகு பிரீதி செய்து கொள்வது அவசியமாகும். அருகில் உள்ள திருக்கோவில் ஒன்றில் கர்பகிரகத்தில் இடைவிடாது எரிந்து கொண்டுள்ள விளக்கில் முடிந்தபோதெல்லாம் நெய் சேர்த்து வருவது மிக எளிய பரிகாரமாகும்.
புதன் பகவான் : 
வாக்கு வன்மை, பேச்சினாலே பிறரை வசீகரிக்கும் திறன், பண்பு, பொறுமை, கணிதம், ஜோதிடம், சிற்பம், பன்மொழிப்புலமை தருவது புதனே. புதன் தோஷத்தால் கல்வித்தடை ஏற்படும். புதன்கிழமை உபவாசமிருந்து கோவில் ஒன்றில் தீபம் ஏற்றுவது, புதன்கிழமையில் ஏழைக் குழந்தைகளுக்கு ஆடை, புத்தகம், உணவு வழங்குவது எளிய பரிகாரமாகும். 
சுக்கிர பகவான் :
"சுக்கிரன் என்ற கிரகம் இல்லாவிடில் உலகமே காவி உடுக்கும்'' வாழ்க்கை தரும் சுகங்களை அனுபவிப்பதற்கு, ரசிப்பு தன்மை - ரசிக்கும் மனோபாவம், கலையுள்ளம் வேண்டும். இதை அளிப்பவர் சுக்கிர பகவானே. சுக்கிரனின் தோஷத்தில் அகமிழந்து வேதனை அடைவோர் அரங்கனின்(ஸ்ரீரங்கம்)சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி வணங்க வேண்டும். வெள்ளிக்கிழமை நீராடி, உபவாசம் இருந்து, ஏழை சுமங்கலிப் பெண்ணிற்கு ஆடை, ஏழை எளியவர்க்கு அன்னதானம் செய்வது எளிய பரிகாரமாகும். 

கேது பகவான் :
கேது இல்லையேல் சொர்க்கம் காலியாகும். கேது சுபமாயிருந்தால் ஆன்மீகத்தில் நாட்டமும் உலக பந்தபாசங்களில் குறைந்த நாட்டமும் ஏற்படும். பாப விமோசனத்தை அளிப்பவர் கேது. பிறவிப் பிணியறுப்பவர் கேது. கேது தோஷம் ஏற்பட்டால் சர்ம ரோகம், பில்லி சூன்ய துன்பங்கள், ஒழுக்கமற்ற பெண் சேர்க்கை ஏற்படும். காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள சித்ரகுப்தர் கோவிலில் 100 கிராம் நல்லெண்ணை தீபம் ஏற்றி மூன்று முறை வலம் வரவும். 

சனி பகவான் :
ஜாதகத்தில் சனிபலம் பெற்றிருந்தால் நீண்ட ஆயுளும், குறைவிலா செல்வமும் பெறுவார்கள். கொடிய விபத்திலும் ஆயுளை பாதுகாக்கும் சக்தி கொண்டவர் சனி. செய்த தவறுக்கு அந்த செயலாலே அழிவு ஏற்படுத்துபவர் சனிபகவான். வீட்டில் சனிக்கிழமை விரதமிருந்து மாலை தீபம் ஏற்றுவது, எள் கலந்த சாதம், ஏழை எளியவர்க்கு உணவு கொடுப்பது எளிய சனி தோஷப் பரிகாரமாகும். 
அங்காரகன் :
உறுதியான உள்ளம், பகைவரை கண்டு அஞ்சாத வீரம் ஆகியவற்றை தருபவர் செவ்வாய் என்கின்ற அங்காரகன். பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 2, 4, 7, 8, 12-ம் இடங்களில் செவ்வாய் அமைந்திருந்தால் செவ்வாய் தோஷம் என்பர். ஆனால் இதை மட்டுமே வைத்து தோஷம் என்று கூறுவது தவறாகும். மற்ற கிரகங்களின் நிலையை ஆராய்ந்தே இதை தீர்மானிக்க வேண்டும். செவ்வாய் தோஷம் சிலருக்கு 60 வயதுக்கு மேல்தான் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் தீர ஆராய்ந்தே செவ்வாய் தோஷத்தை தீர்மானிக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து, ஏதாவது கோவிலில் தீபம் ஏற்றுதல் எளிய பரிகாரமாகும். 

No comments:

Post a Comment