Thursday, January 3, 2013

கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!


ஒருவர் வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்காலும், 
உடலால் செய்தவற்றை உடலாலும், மனத்தால் செய்தவற்றை 
மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். வேத, சாஸ்திர, 
புராணம் கற்ற பண்டிதன் வாக்குத் திறமையால் வெற்றி அடைவான். 
புனித நீராடியவர்கள், பாகவதர்கள், பௌராணிகர்கள் போன்றோர், 
மற்ற புண்ணிய செயல்கள் புரிந்தோர் இணக்கமான சரீரத்தைத் 
தனக்கு இசைவாகப் பெற்று மகிழ்வர். உலக நன்மையைக் கருதி 
நற்காரியங்கள் செய்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். 
குடை, மரவடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், 
தாமரைச் சொம்பு, அரிசி ஆகியவற்றைச் சத்பிரா மணர்களுக்கு 
அளித்தல் வேண்டும். ஜீவன் செல்லும் போது குடைதானம் குளிர்ந்த 
நிழலில், அழைத்துச் செல்லப்படும். மரவடி தானம் குதிரைபோல் 
ஏறிச் செல்ல உதவும். நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் 
முக்கியமானவை இருபத்தெட்டாகும். 
1. பிறன் பொருள் கொள்ளை அடிப்போர்க்கு தாமிஸிர நரகம்.
2. கணவன் (அ) மனைவியை வஞ்சித்து வாழ்வோர்க்கு 
அநித்தாமிஸ்ர நரகம்.
3. சுயநலக்காரர்களும், பிறர் குடும்பங்களை அழிப்பவர்களும் 
அடைவது ரௌரவ நரகம்.
4. குரு என்னும் அகோரமான்கள் பாவிகளைத் துன்புறுத்தும் 
நரகம் மஹா ரௌரவம்.
5. தன் சுவைக்காக உயிர்க்கொலை, சித்திரவதை செய்வோர்க்கு
கும்பீபாகம்.
6. பெற்றோர், மற்ற பெரியோர்ளைத் துன்புறுத்துவோர்க்கு 
கால சூத்திரம்.
7. தெய்வ நிந்தனை, தன் தர்மத்தை விடுத்தோர்க்கு அசிபத்திரம்.
8. கொடியர், அநீதியாளர், அக்கிரமக் காரர்களுக்குப் பன்றி முகம்.
9. துரோகம், கொலை, சித்திரவதைச் செய்வோர்க்கான நரகம் 
அந்த கூபம்.
10. நல்லொழுக்கம் நீக்கி, கிருமிகள் போல் பிறரைத் துளைப்
போர்க்கானது கிருமிபோஜனம்.
11. பிறர் பொருளை அபகரிப்போர், பலாத்காரம் செய்வோர்க்கு 
அக்கினி குண்டம்.
12. கூடா ஒழுக்கம் கொண்ட மோக வெறியர்களுக்கு வஜ்ர 
கண்டகம்.
13. தரங்கெட்டு எல்லோருடனும் பழகித் திரியும் மோகாந்தகாரப் 
பாவிகள் பெறும் நரகம் சான்மலி.
14. அதிகார வெறி, கபட வேஷம், நயவஞ்சகம் செய்யும் 
அதர்மிகளுக்கு வைதரணி.
15. ஒழுங்கின்றி இழிமகளைக் கூடி லட்சியமின்றி விலங்குகளைப் 
போல் திரிவோர்க்கான நரகம் பூபோதம்.
16. பிராணிகளைத் துன்புறுத்தல், கொல்லுதல் செய்வோர்க்கு 
பிராணி ரோதம்.
17. டம்பத்திற்காக யாகம் புரியும் பித்தலாட்டக்காரர்களுக்கு 
விசஸனம்.
18. இல்லாளை விபரீத இச்சைக்கு வற்புறுத்துவோர்க்கானது 
லாலா பக்ஷம்.
19. தீ வைத்தல், சூறையாடல், விஷமூட்டல், குடிகளைக் 
கொல்வோர்க்கு சாரமேயாதனம்.
20. பொய்ச் சாட்சி கூறுவோர், அகம்பாவம் கொண்டோர்க்கானது 
அவீசி.
21. மது, போதைப் பொருள், குடியுள்ள குடிகேடர்களுக்கு பரிபாதளம்.
22. தானே பெரியோன் எனப் பறை சாற்றிப் பிறரை மதியாதவர்க்கு 
க்ஷõரகர்த்தமம்.
23. நரமேதயாகம், நரமாமிசம் உண்ணல், பிராணிகள் வதை 
ஆகியவற்றுக்கு ர÷க்ஷõணம்.
24. தற்கொலை, நயவஞ்சகக் கொலை, நம்பிக்கைத் துரோகம் 
செய்த பாவிகளுக்கு சூலரோதம்.
25. தீமை புரிந்த தீயோர், துரோகிகளுக்கானது தந்த சூகம்.
26. உயிர்க்கொலை செய்வோர்க்கு வடாரோதம்.
27. விருந்தினரை வெறுத்தோர், சுயநல வாதிகளுக்கானது 
பர்வாவர்த்தகைம்.
28. செல்வம், செல்வாக்கால் கர்வம், அநியாயமாகப் பொருள் 
ஈட்டல், பதுக்கி வைத்தல் போன்றவை செய்வோர்க்கு சூசி முகம்.

தாமிஸிர நரகம்: பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை 
விரும்புவதும் அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல் பிறரது 
குழந்தையை அபகரிப்பது மகாபாவமாகும். பிறரது பொருளை 
ஏமாற்றி அபகரிப்பது, நமக்கு தீராத துன்பத்தைத் தரும். 
இதற்குத் தண்டனையாக, நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான 
கட்டைகளாலும் கதைகளாலும் நையப் புடைப்பார்கள்.
அநித்தாமிஸ்ர நரகம்: கணவனும் மனைவியும் சேர்ந்து 
மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரை 
ஒருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை 
வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்
செயலாகும். இத்தகையவர்கள் இந்த நரகத்தில் 
உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி 
விழுந்து தவிக்க வேண்டியது வரும்.
ரௌரவ நரகம்: பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் 
குடும்பத்தைக் கெடுப்பது, பிரிப்பது, அழிப்பது, அவர்களின் 
பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும். இதற்குத் 
தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் 
துன்புறுத்துவார்கள்.
மகா ரௌரவ நரகம்: மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை
வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் 
செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும். 
இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான
 மிருகம் காணப்படும். இவை பாவிகளைச் சூழ்ந்து,முட்டி 
மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.
கும்பிபாகம்: சுவையான உணவுக்காக, வாயில்லா 

உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில் 
கொடுமைப்படுத்தும் பாவிகள் அடையும் நரகம் 
இது. எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்
கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத் 
துன்புறுத்துவார்கள்.
காலகுத்திரம்: பெரியோர்களையும் பெற்றோர்களையும் 
அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும் பட்டினி போட்டும் 
வதைத்த பாவிகள் செல்லும் நரகம்
இதுவாகும். இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி 
என்று அவர்கள் வதைக்கபடுவது உறுதி.
அசிபத்திரம்: தெய்வ நிந்தனை செய்தவர்களும் தர்ம
நெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும் 
அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால்
துன்புறுத்தப்பட்டு அவதிப்படுவார்கள். இனம் புரியாத 
ஒரு பயம் உண்டாகும்.
பன்றி முகம்: குற்றமற்றவரைத் தண்டிப்பது 
கொடுமையாகும். நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் 
துணைபோவதும் அதர்மமாகும். இந்த நரகத்தில், 
பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு 
வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு, 
கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு 
பாவிகள் அவதிப்படுவார்கள்.
அந்தகூபம்: உயிர்களைச் சித்திரவதை செய்தல்,

கொடுமையாகக் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் 
புரிந்த பாவிகள் அடையும் நரகம் இது. கொடிய 
மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். 
விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் 
துன்புறுத்தும்.
அக்னிகுண்டம்: பிறருக்கு உரிமையான பொருள்களை, 
தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து 
வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது காரியங்களை 
நிறைவேற்றிக்கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள்.
இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில் 
மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் 
எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.
வஜ்ரகண்டகம்: சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ 
கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம் 
வஜ்ர கண்டகம். நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் 
கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.
கிருமிபோஜனம்: தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் 
சுரண்டிப்பிழைத்த பாவிகள் இங்குதான் வரவேண்டும். 
பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடையது கிருமிகள். 
இந்த நரகத்தில், பாவிகளைப் பலவிதமான கிருமிகள் கடித்துத் 
துளையிட்டு துன்புறுத்தும்.
சான்மலி: நன்மை, தீமை, பாபம் ஆகியவற்றைப் பாராமல், 
உறவுமுறையைக்கூடப் பாராமல் யாருடனாவது எப்படியாவது 
கூடி மகிழும் காதகர்கள் அடையும் நரகம் இது. இங்கு இத்தகைய 
பாவிகளை முள்ளாலான தடிகளாலும் முட்செடிகளாலும் 
எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.
வைதரணி: நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக 
நடந்தவர்கள் அடையும் நரகம் இது. வைதரணி என்பது நதியல்ல. 
இங்கு ரத்தம் சீழும் காணப்படும். சிறுநீரும் மலம் கலந்திருக்கும். 
கொடிய பிராணிகள் இருக்கும். பாவிகள் இந்த நதியில் விழுந்து 
துன்பப்படுவார்கள்.
பூபோதம்: சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடி, 
ஒழுக்கக்குறைவாக நடந்து, எந்த லட்சியம் இன்றி வாழ்ந்தவன் 
அடையும் நரகம் இது. இங்கு ஜீவனை விஷமுடைய பூச்சிகள்,
பிராணிகள் கடிக்கும்.
பிராணி ரோதம்: பிராணிகளைக் கொடுமைப்படுத்தினால் 
அடையும் நரகம் இது. இங்கு கூர்மையான பாணங்களை 
ஜீவன்களின் மீது எய்து துன்புறுத்துவார்கள்.
விசஸனம்: பசுக்களைக் கொடுமை செய்பவர்கள் அடையும் 
நரகம் இது. இங்கு ஜீவனுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி 
கொடுத்துத் துன்புறுத்துவார்கள்.
லாலா பக்ஷம்: மனைவியைக் கொடுமைப்படுத்தி முறையற்ற
மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுக்கும் கொடியவர்கள் அடையும் 
நரகம் இது. இங்கு ஜீவனும் அதே முறையில் வதைபடும்.
சாரமேயாதனம்: வீடுகளை தீவைப்பது, சூறையாடுவது, 
உயிர்களை வதைப்பது, விஷத்தைக் கொடுத்துக் கொல்லுதல், 
மக்களைக் கொன்றுகுவித்தல் போன்ற கொடிய பாவங்களைச் 
செய்தவர்கள் அடையும் நரகம் இது. இங்கு விசித்திரமான 
கொடிய மிருகங்கள் ஜீவனை வதைக்கும்.
அவீசி: பொய்சாட்சி சொன்னால் நீர்நிலைகளில் ஜீவன்களைத் 
தூக்கிவீசி அழுத்துவார்கள்.
மார்க்கண்டேய புராணம் கூறும் பாவத்திற்கேற்ற 

தண்டனைகள்:
1. பிறர் மனைவியை காமக்கண் கொண்டு நோக்கியவர்களின்

கண்கள் இரும்புமுகம், நீண்ட அலகுள்ள கொடிய 
பறவைகளால் கொத்திப் பிடுங்கப்படும்.
2. குருவை அவமதித்தல், சாஸ்திரத்தைச் சாதுக்களைக் 
கேலி செய்தல், கோள் சொல்பவர்கள் நாக்கு இடுக்கிகளால் 
பிடுங்கப்படும்.
3. விருந்தோம்பாமல் தான் மட்டுமே உண்டு மகிழ்பவன் 
மலம், சிறுநீர், குருதி போன்றவற்றை உணவாகக் 
கொள்ளச் செய்யப்படுவர்.
4. அக்கினி, குரு, பசு ஆகியவற்றை காலால் தீண்டியவன் 
கால்கள் வெட்டப்படும்.
5. தெய்வநிந்தனை, குருவை இகழ்தல் செய்வதைக் 
கேட்டவர் காதில் இரும்பு ஆணி அடிக்கப்படும்.
6. தீர்த்தத்தில் மலம், சிறுநீர் கழிப்பவன் கல்லுக்குள் 
தேரையாய்ப் பிறப்பான்.
7. நீசனிடம் தானம் கேட்டோர், யாசகர், குருவிடம் 
பொய் கூறியோர் நாயாகப் பிறப்பர்.
8. தானியத்தை திருடியவன் எலியாகவும், சகோதரர் 
மனைவியைக் கெடுத்தவன் குயிலாகவும், குரு 
பத்தினியைக் கூடியவன் பன்றியாகவும், உணவு பால் 
திருடியவன் கொக்காகவும், கொழுந்து விட்டு எரியாத 
தீயில் ஓமம் செய்தவன் செரிமானம் இன்றி 
அவதிப்படுபவனாகவும் பிறப்பர். இப்படி வேறு, 
வேறு பாவங்களுக்கு ஏற்ப ஏராளமான 
தண்டனைகள் நரகத்தில் அளிக்கப்படும்.
எனவே மனிதன் பாவத்திற்கு ஏற்ற தண்டனை
நரகில் நிச்சயம் என்று அறிந்து 
புண்ணியத்தையே சம்பாதிக்க வேண்டும்.

No comments:

Post a Comment