Tuesday, April 30, 2013

பக்தி கதை



ஒரு துறவி, சீடனைத் தினமும் காட்டிற்குச் சென்று, அங்குள்ளவற்றை அறிந்து வரும்படி அறிவுறுத்தினார். அவன் தினமும் காட்டிற்குச் சென்று வந்தான். முதலில் பயமாக இருந்தது. ஒரு வாரத்தில் காடு அவனுக்கு இயல்பாகிப் போனது. பயம் தெளிந்ததும், அடர்ந்த காட்டுக்குள்ளும் நுழைய ஆர்வம் பிறந்தது. விலங்குகளை பார்த்தான். தனது அனுபவத்தை குருவிடம் அன்றாடம் சொல்வான். காடு பற்றி இன்னும் நிறையத் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. தொடர்ந்து செல் என்று அவர் உத்தரவிட்டார். ஒருநாள் சீடன் மரநிழலில் அமர்ந்தான். காட்டு நீரோடை சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது. பறவைகள் பாடிக் கொண்டு இருந்தன. சுற்றி நிகழ்வதை ஆழ்ந்து கவனித்தான்.

விலங்குகளின் சப்தம், பறவைகளின் ஒலி காதில் விழுந்தன. இன்னும் கவனித்தான். வண்டுகளின் ரீங்காரம் கேட்டது. பார்த்ததை குருவிடம் தெரிவித்தான். மகிழ்ச்சியுடன், நல்லது! இன்னும் கவனித்து வா! என்று தட்டிக் கொடுத்தார். காட்டில் ஒருநாள் இனிய அனுபவம் காத்திருந்தது. என்னுடைய காது தானா? என்று சந்தேகம் வந்தது. பூக்கள் பூக்கும் மெல்லிய ஓசையைக் கேட்டு தன்னை மறந்தான். குருவைத் தேடி மகிழ்ச்சி யுடன் ஓடி வந்தான். என்ன! இதுவரை ஏற்படாத புதிய அனுபவம் கிடைத்ததோ!, என்றார். மூச்சிறைத்த படி,ஆம் குருவே! என்று நடந்ததைச் சொன்னான். உனக்கு ஆழ்ந்த கவனம் கைவந்தது. நாளை முதல் வேறொரு பாடம், என்றார் குரு. ஆழ்ந்த கவனம் என்பது மனிதனுக்கு ஒருநாளில் வருவதல்ல. ஆர்வமும், முயற்சியும் இருந்தால் மட்டுமே சாத்தியம்.

No comments:

Post a Comment