Sunday, June 2, 2013

சப்தகன்னியர்- வராஹி

பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். அந்தகாசுரன் என்பவனை அழிக்க, சிவன் தனக்கு உதவியாக சப்தமாதர்களைத் தோற்றுவித்ததாக மத்ஸ்யபுராணம் சொல்கிறது. சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்கள் வதத்தின்போது, தனக்கு உதவியாக சப்தமாதர்களை சக்திதேவி தோற்றுவித்ததாக மார்க்கண்டேய புராணம் கூறுகிறது. சப்தமாதர்களில் வாராஹியை தனிதெய்வமாக வழிபடும் முறை பழங்காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. இவள் கருப்பு நிறம், பன்றி முகம், பெருவயிறுடன், ஆறு கைகளுடன் இருப்பதாக ஸ்ரீதத்வநிதி என்றநூல் வர்ணிக்கிறது. வராஹியின் வரத, அபயஹஸ்தம் தவிர மற்ற கைகளில் சூலம், கபாலம், உலக்கை, நாகம் தாங்கியிக்கிறாள். சதுர்த்தி, சஷ்டி, அஷ்டமி, தசமி, துவாதசி, அமாவாசை திதிகள் வாராஹி வழிபாட்டிற்கு உகந்தவை. சோழ அரசர்களின் இஷ்ட தெய்வமாக விளங்கிய வாராஹிக்கு தஞ்சை பெரியகோயிலில் சந்நிதி உள்ளது. வாராஹி மாலை என்னும் நூலை எழுதிய சுந்தரேசர், சோழ மன்னரான குலோத்துங்கனின் படையில் குதிரைப்படைக்குத் தலைமை வகித்தவர். வாராஹியை வழிபடுபவருக்கு எதிரிகளின் தொல்லை நீங்கி, வளமான வாழ்வு உண்டாகும்.

இதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று சிவனின் அருளாசி பெற்றுள்ளனர். சப்தகன்னியரில் வராகி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், வழுவூர் அருள்மிகு இளங்கிளை நாயகி சமேத வீரட்டேசுரர் திருக்கோயில் ஆகும். இவருக்கு கிருத்திவாசர் என்ற பெயரும் உண்டு. அஷ்டவீரட்டத் தலங்களில் கஜசம்காரம் நிகழ்ந்த தலம். கஜசம்ஹார மூர்த்தி திருவுருவம் மிக்க சிறப்புடையது. இவர் எழுந்தருளிய சபை ஞானசபை எனப்பெறும். தேவார வைப்புத் தலம். வராகி பூஜித்த தலம்.

திருமாலின் வராக அவதார அம்சம் உடையவள். கறுப்புப் பட்டாடை உடுத்தியவள். பன்றி முகம் உடையவள். மிக்க செல்வமும் அணிகலன் பூண்ட அழகிய மார்பும் உடையவள். பாதங்களில் நூபுரம் அணிந்தவள். கலப்பை, முசலம், வரதம், அபயம் அமைந்த நாற்கரத்தினள். கருநிறம் உடையவள்.

அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில்

மூலவர் : கிருத்திவாசர் (வீரட்டேசுவரர்)

அம்மன் / தாயார் : பாலகுராம்பிகை, இளங்கிளைநாயகி

தலவிருட்சம் :தேவதாரு,வன்னி

தீர்த்தம் : பாதாளகங்கை
பாடியவர் : திருஞானசம்பந்தர்( வைப்புத்தலம்)
புராண பெயர் : தாருகா வனம்

மாநிலம் : தமிழ்நாடு

மாவட்டம் : நாகப்பட்டினம்

ஊர் : திருவழுவூர்

திருவிழா : மாசிமகம் - யானை சம்கார ஐதீக நிகழ்ச்சி -10 நாட்கள் திருவிழா - தினமும் இரண்டு வேளை வீதியுலா - 9ம் நாள் யானை சம்கார நிகழ்ச்சி - 10 ம்நாள் தீர்த்த வாரி - இத்திருவிழா இத்தலத்தில் நடைபெறும் மிகச்சிறப்பான திருவிழா ஆகும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.

மார்கழி - திருவாதிரை - 3 நாட்கள் திருவிழா

புரட்டாசி - நவராத்திரி திருவிழா - 10 நாட்கள் திருவிழா

கார்த்திகை சோம வாரங்கள் இத்தலத்தில் விசேஷமாக இருக்கும்,

இரவு தினந்தோறும் யந்திர பிரதிஷ்டைக்குப் பூஜை நடைபெறுகிறது. அமாவாசை தோறும் சுவாமி தீர்த்தம் கொடுத்தருள்கிறார்.

ஆடிப்பூரம், பௌர்ணமி பூஜை ஆகியவை இத்தலத்தில் வெகு விமரிசையாக நடக்கும். கந்தர் சஷ்டி, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை தலத்தின் சிறப்பான விசேச நாட்கள் ஆகும்.

மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும்.

வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி,பொங்கல், தமிழ்,ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கும்.

தல சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்

அட்ட வீரட்டத் தலங்களில் இது 6 வது தலம்.

சிவபெருமானின் உள்ளங்கால் தரிசனம் இத்தலத்தில் மட்டுமே பெறமுடியும்.

சப்தகன்னியரில் வராகி வழிபட்ட தலம்

திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி: அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில்,
வழுவூர் - 609 401
நாகப்பட்டினம் மாவட்டம்

போன் : 99437 98083

பொது தகவல் : இங்குள்ள தீர்த்தத்தில் 5 கிணறுகள் உள்ளன. இதற்கு பஞ்சமுக கிணறு என்று பெயர். திருஞான சம்பந்தர் எட்டு வீரட்டங்களைக் குறிப்பிட்டு அருளியுள்ள திருப்பாடல்களில் இத்தலத்தை குறிப்பாக அருளியுள்ளார்.இது தேவார வைப்புத்தலம் என போற்றப்படுகிறது. இத்தல விநாயகர் செல்வ விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறார்.

பிரார்த்தனை : அமாவாசை தோறும் சுவாமி சந்நிதியில் உள்ள தீர்த்தத்தில் சுவாமி தீர்த்தம் கொடுத்தருள்கிறார். அந்நாளில் இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபடுவோர்க்கு புத்திர தோசம் நீங்கி நன்மக்கட்பேறு வாய்த்து வருகிறது.

திருமண வரம் , குழந்தை வரம் ஆகியவற்றை பக்தர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் நிச்சயம் நிறைவேறுகிறது.

இத்தலத்தின் சிறப்பு மூர்த்தியான கஜசம்கார மூர்த்திக்கு பின்புறம் தெய்வீக யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அந்த யந்திரத்தை வழிபட்டால் பில்லி , சூன்யம், ஏவல், மாந்திரீகம் ஆகியவை விலகி நன்மை பயக்கும்.

இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் கிருத்திவாசரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி , உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

நேர்த்தி கடன் : அமாவாசை அன்று தீர்த்தத்தில் நீராடி விட்டு சுவாமிக்கு அர்ச்சனைசெய்து வழிபடுகிறார்கள்

கல்யாணவரம் வேண்டுவோர் கல்யாண மாலை சாத்துதல்,

சுவாமிக்கு சங்காபிசேகமும்,கலசாபிசேகமும் செய்யலாம்

அம்மனுக்கு புடவை சாத்துதலும், அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.

சுவாமிக்கு மா மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்.

மேலும்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம்.சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம்.தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

தல பெருமை:

கஜசம்கார மூர்த்தி : இத்தலத்தின் விசேச மூர்த்தி இந்த கஜசம்கார மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.இங்குள்ள மூர்த்தி போல் வேறு எந்த கோயில்களிலும் கஜசம்கார மூர்த்தியைக் காண முடியாது. திருவடியை யானையின் தலைமேல் ஊன்றி அதன் தோலைக் கிழித்துப் போர்த்தும் நிலையில் பெரிய திருவுருவத்தோடு கஜசம்காரமூர்த்தி விளங்குகிறார். அருகில் குழந்தையான முருகனை தன் இடுப்பில் வைத்துள்ள உமையவள் அச்சத்தோடு திரும்பும் நிலையில் நிற்கிறார். கையிலுள்ள முருகனோ தன் தந்தையை ஆட்காட்டி விரலால் சுட்டிக்காட்டுகிறார். சிவனுக்கும், நந்திக்கும் இடையில் பஞ்சபிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது எங்குமில்லாத தனிசிறப்பு. இத்தீர்த்தத்தில் நீராடினால் குழந்தைப்பேறு கிட்டும். ஆணவம் நீங்கினால், ஞானம் கிடைக்கும். அம்மன் சன்னதி முன்புள்ள சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் கல்வியறிவு பெருகும். சிதம்பரத்தில் சிதம்பர ரகசிய பிரதிஷ்டை உள்ளது போல் இங்கும் கஜசம்ஹார மூர்த்திக்கு பின்னால் யந்திர பிரதிஷ்டை உள்ளது. அம்பாள் இளங்கிளை நாயகி எனப்படுகிறாள்.பெருமான், உமையஞ்ச ஆனையை உரித்ததை இத்திரு உருவத்தில் காணலாம். சுவாமியின் உள்ளங்காலை பக்தர்கள் இத்தலத்தில் மட்டுமே இந்த மூர்த்தியிடம் மட்டுமே தரிசனம் செய்யலாம். சம்காரமூர்த்தி இருக்கும் இடம் ஞான சபை ஆகும்.

சனிபகவான் : சூரிய மண்டலத்தில் விக்கிரம ராஜாவோடு சனி பகவான் யுத்தம் செய்கிறார். இதில் விக்கிரமராஜா தோற்றுப்போய்விடுகிறார். இத்தீர்த்தத்தில் வந்து விழுகிறார். தீர்த்தக்குளத்தில் குளித்து விட்டு சுவாமியை வழிபடுகிறார். சுவாமி அவருக்கு அருள் பாலிக்கிறார். சனி பகவான் சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்கிறார். சனிபகவானை சுவாமி ஒரு காலை முடமாக்கி விடுகிறார்.இத்தலத்தில் சனிபகவானுக்கு தனி சந்நிதி உள்ளது.இங்குள்ள சனிபகவான் கையில் வில்லோடு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தலத்தில் யானையை பிளந்து சிவபெருமான் வீரச்செயல் புரிந்துள்ளார்.

சனீசுவரனுக்கு இங்கு சாப நிவர்த்தி ஆன தலம். சிதம்பர ரகசியப் பிரதிஷ்டைபோல இங்கும் கஜசம்கார மூர்த்திக்கு பின்னால் யந்திர பிரதிஷ்டை உள்ளது. முதலில் நந்தி, பின்பு குளம், அதன்பிறகு மூலஸ்தானம் என்று வித்தியாசமான கோயில் அமைப்பை இங்கு மட்டுமே காண முடியும். கஜ சம்கார மூர்த்தி உள்ள இடம் ஞானசபை ஆகும். கஜசம்கார நடனம் நவ தாண்டவத்தில் ஊர்த்துவ தாண்டவமாகப் போற்றப்படும் நடன சபையில் ஞானசபை என்று இது கூறப்படும்.

யானையைப் பிளந்து வீரநடனமாடி வரும் அப்பாவைப் பார்த்து அம்பாளின் இடுப்பில் இருக்கும் முருகப்பெருமான் அதோ அப்பா வருகிறார் என்று சுட்டிக் காட்டியபடி உள்ளார். 48000 மகரிஷிகள் இத்தலத்தில் தவம் செய்து ஞானோதயம் பெற்றனர் எனக் கூறப்படுகிறது. சனீசுவரனுக்கு தனி சந்நிதி உள்ளது.

இங்கு சனீசுவரன் கையில் வில்லோடு இருக்கிறார் என்பது சிறப்பம்சம் தீர்த்தங்களில் சுவாமி சந்நிதிக்கு எதிரே உள்ள ஈசான தீர்த்தம் அல்லது பாதாள கங்கை விசேசமானது. பிரளய காலத்திலும் அழியாமல் வழுவியதாதலின் வழுவூர் என்று ஆனது. இதிகாசங்களில் இத்தலம் தாருகா வனம் என்று குறிப்பிடப்படுகிறது.

தல வரலாறு : தாருகாவனத்து முனிவர்கள் தாமே தவ முனிவர்கள் எனவும் தாம் செய்யும் நற்கருமங்களே பலனைத்தரும் எனவும் இதற்குக் கடவுள் துணை தேவையில்லை எனவும் கருதி ஆணவர் கொண்டனர். அவ்வாறே அவர்களது மனைவியரும் நினைத்தனர். இவர்களது ஆணவத்தையும் கர்வத்தையும் அழிக்கும் பொருட்டு சிவபெருமான் பிட்சாடனராகவும், திருமால் மோகினியாகவும் உருவெடுத்து தாருகாவனம் வந்தனர். முனிவர்கள் மோகினியைக் கண்டும், அவர்களது மனைவியர் பிட்சாடனரைக் கண்டும் தந்நிலை அழிந்தனர். பெருமான் மோகினியோடு கூடி ஐயனாரை பெற்றெடுத்து மறைந்தார். முனிவர்கள் சிவபெருமானின் செயல் கண்டு கோபம் கொண்டனர். வேள்வி செய்து அக்னி, புலி, மான், மழு,பாம்பு , முயலகன் ஆகியவற்றை சிவபெருமான் மீது ஏவி தோல்வி கண்டு கடைசியாக மதயானையை வேள்வி தீயிலிருந்து உண்டாக்கி பெருமான் மீது ஏவினர். பிட்சாடனர் உருவில் வந்த பெருமான் யானையின் வயிற்றுக்குள் புகுந்து கொண்டார். உலகம் இருள்கிறது. அம்பிகை ஐயனைக் காணாது அஞ்சினாள். பெருமான் யானையின் வயிற்றிலிருந்து கலக்க, கொல்ல வந்த யானை வலி தாங்க முடியாமல் தவிக்க, சுவாமி யானையின் வயிற்றை கிழித்துக் கொண்டு (ஊர்த்துவ தாண்டவம்) வீர நடனமாடிக் கொண்டு வருகிறார். அதன்பின் ஆணவம் அழிந்த முனிவர்கள், வந்தது சிவன் என்பதை அறிந்து மன்னிப்பு கேட்டனர். யானையை சம்ஹராம் செய்தவர் என்பதால் இறைவன் கஜசம்ஹாரமூர்த்தி எனப்படுகிறார்.

இருப்பிடம் : மயிலாடுதுறை - மங்கநல்லூர் பேருந்துச் சாலையில் எலந்தங்குடியை அடுத்து உள்ள நெய்க்குப்பையில் வழுவூர் கைகாட்டியில் இறங்கிச் சென்றால் எளிதில் கோயிலை அடையலாம்

முக்கிய ஊர்களிலிருந்து தூரம் :

மயிலாடுதுறை - 7 கி.மீ.

திருவாரூர் - 25 கி.மீ.

வாராஹி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)

விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான வராக அவதாரத்தின் அம்சமாக அவதரித்தவள் - வாராஹி. வராக (பன்றி) முகமும் - நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரு கரங்களை அபய - வரதமாகவும்; மேல் வலக்கரத்தில் தண்டமும் - இடக்கரத்தில் கலப்பையும் கொண்டவள். கருப்பு நிறமுடைய ஆடையை உடுத்திக் கொண்டிருப்பவள். கிரீட மகுடம் தரித்து - சிம்ம வாஹனத்தில் அமர்ந்திருப்பவள்.

இவள் அசுரன், உலகைத் தூக்கிக் கொண்டு கடலுள் ஒழிந்தபோது, வராக அவதார மெடுத்து மீட்டுக் கொண்டு வந்தவள். எனவே, இவளை வழிபட்டால், எதிரிகளை அழித்து வெற்றி அடையலாம். பெண்கள் உபாசித்தால் கற்பு நிலையைக் காப்பாற்றிக் கொள்ளலாம். அதற்குத் தீங்கு நேரும்போது, எதிர்த்து நின்று காத்தருள்வாள்!

வராகி பாடல்: கரியின் தோல் திருமேனியிற் கவினுறப் போர்த்தி
அரியின் கண்ணடி அணிதரும் அண்ணலைச் சத்தி
புரியின் மேவிய பொருளினை வராகி பூசித்தாள்
தெரியின் மேம்படு வரமெலாம் சிறப்புறப் பெற்றாள்.

வாராகி விஷ்ணு அம்சி - பூஜா

ஆசன மூர்த்தி மூலம்: ஓம் - ஹ்ரீம் - வாராகி - ஆசனாயயாய - நம:
ஓம் - ஹ்ரீம் - வம் - வாராகி மூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வாராகியை - நம:

காயத்ரி: ஓம் - மஹிசத்வஜாயை வித்மஹே
தண்ட ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ, வராஹி ப்ரசோதயாத்

தியான ஸ்லோகம்: ஏக வக்த்ராம் த்விநேத்ராம்ச
சதுர்புஜ சமன் விதாம்;
க்ருஷ்ணாம்பர தராம், தேவிம்
வராஹ சக்ர ஸம்யுதாம்;
ஹசலமுஸல ஹஸ்தாம்
தாம் வரா பயகராம்புஜாம்;
ஸிம்ஹ வாஹ ஸமாரூடாம்
கிரீட மகுடோஜ் வலாம்;
ஸர் வாலங்கார ஸம்பன்னாம்,
வாராஹிம் பூஜயேத்புத

மூல மந்திரம்: ஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வாராகியை - நம :

No comments:

Post a Comment