Monday, May 6, 2013

அட்சய திருதியை

அட்சய திருதியை என்று சொன்னவுடன் இப்போது இருக்கும் அனைத்து மக்களுக்கும் நகை வாங்கும் நாளாகத்தான் மனதில் தோன்றும். ஆனால் அட்சய திருதியையின் உண்மையான காரணம் என்ன என்று புராணங்களை படித்து பார்த்தால், இந்த நன்நாளில் புண்ணியங்கள் செய்யும் நாளாக அனுசரிக்க வேண்டும் என்றுதான் இருக்கிறது.

இந்த அட்சய திருதியை திருநாளில் புண்ணிய காரியங்கள் அதாவது, தான – தர்மங்களை சின்ன அளவில் செய்தால், அது பெரிய விஷயமாக அமைந்து, நம் பாவ-புண்ணிய கணக்கில் பாவங்கள் ஒரளவு குறைந்து, புண்ணியங்கள் கூடுதலாக சேரும். நம் புண்ணிய கணக்கு வளர்ந்தாலே எல்லா செல்வங்களும் நம்மை தேடி வரும். தேடி வரும் செல்வங்கள் எப்போதும் நிலைத்து இருக்கும்.

“அட்சய” என்ற சொல்லின் மகிமையை உணர்த்திய மகாபாரதம்

மகாபாரதத்தில் பாண்டவர்கள் தங்கள் உரிமைகளையும் செல்வங்களையும் இழந்து காட்டில் வாசம் செய்தபோது உணவுக்கு என்ன செய்வது? என்று அவர்களுக்கு தெரியவில்லை. அத்துடன் தங்களின் பசியை போல காட்டில் தவம் செய்யும் முனிவர்கள் தங்களை தேடி உணவு கேட்டு வரும்போது அவர்களுக்கு உணவு இல்லை என்று சொல்லக்கூடாதே என்று சிந்தித்த துரோபதை, சூரிய பகவானை நினைத்து வணங்கி அட்சய பாத்திரத்தை பெற்றாள்.

அந்த நாள்தான் அட்சய தினம். அட்சய பாத்திரம் கிடைத்த பிறகு, உணவு கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தாராளமாக உணவு படைத்தாள். இதன் புண்ணியத்தால் பாண்டவர்களுக்கும் – கௌரவர்களுக்கும் நடந்த பாரத யுத்தத்தில் துரோபதி செய்த தர்மம், பாண்டவர்களின் தலையை காத்தது. இழந்த ராஜ்யத்தை திரும்ப பெற்றார்கள்.

தர்மம் செய்தாலே மோசமான கர்மவினைகள் விலகும், புண்ணியங்கள்சேரும் என்பதற்கு மகாபாரதம் ஒரு சாட்சி. தோஷங்கள் நீங்குவதற்கு அட்சயம் ஒரு அட்சாரம்.

கர்ணன் பல தானங்கள் செய்தாலும் அன்னதானம் செய்யாததால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கவில்லை. ஆகவே அன்னதானம் செய்தாலே சொர்க்கத்தில் மட்டுமல்ல, இந்த பூலோக வாழ்க்கையும் சொர்கலோக வாழ்க்கையாக அமையும்.

ஸ்ரீ ராகவேந்திரர் அட்சய திருதியை மகிமையை உணர்த்தினார்

விஜயராகவ நாயக்கர் ஆட்சியில் மழை இல்லாமல் நாடு வறட்சியில் அல்லல்பட்டது. மழை இல்லை அதனால் விவசாயம் இல்லை அதனால் உணவு இல்லை. அரசருக்கே அடுத்த வேலை உணவுக்கு திண்டாட்டம் உண்டானது. என்ன செய்வது? இயற்கையை எதிர்க்க மனிதர்களால் முடியுமா? என்று மந்திரிசபை கூட்டி ஆலோசித்தார் அரசர். அப்போது ஒரு மந்திரி, “நம் ஊருக்கு ஸ்ரீ ராகவேந்திரர் வந்திருக்கிறார். அவர் சிறந்த மகான். அவர் நமக்கு ஒரு நல்ல வழியை காட்டுவார்.” என்று கூறினார். அரசரும் உடனே, “ஸ்ரீராகவேந்திர சுவாமிக்கு மரியாதை செலுத்தி அழைத்து வாருங்கள்.” என்று உத்தரவிட்டர்.

ஸ்ரீ ராகவேந்திர சுவாமி அரசரை சந்தித்தார். தன் நாடு மழை இல்லாமல் வறுமையில் பிடியில் இருக்கிறது. இயற்கை வளங்கள் பெற சுவாமிகள் அருள் செய்ய வேண்டும் என்று அரசர், ஸ்ரீராகவேந்திரரிடம் வேண்டிக் கொண்டார். மக்களும் சுவாமிகளிடம் தங்கள் நிலையை எடுத்துச் சொல்லி அழுதார்கள்.

நாட்டின் நிலையையும் மக்களின் நிலையையும் நேரில் கண்ட சுவாமிகள், “நெல் களஞ்சியத்திற்கு போகலாம் வாருங்கள்” என்று அரசரையும் மக்களையும் அழைத்துக் கொண்டு நெல் களஞ்சியத்திற்கு சென்ற ஸ்ரீராகவேந்திர சுவாமிகள், அங்கு சிறிய அளவில் இருந்த நெல்லின் மேல் “அட்சயம்” என்ற எழுதி, அங்கு இருந்த சில மக்களுக்கு தன் திருகரத்தால் நெல்லை தானம் செய்தார். அங்கே ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. 50 பேருக்கு கூட போதாத அளவில் இருந்த நெல் இருப்பு, சுவாமியின் மகிமையால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அள்ளி அள்ளி தந்தும் குறையவில்லை. பிறகு சில மணி நேரத்திலேயே மழை பெய்ய தொடங்கியது. சில மாதங்களிலேயே விவசாயம் பெருகியது. வரட்சி நீங்கியது. பிறகுதான் உணர்ந்தார்கள் மக்கள். அட்சயம் என்றால் “வளருவது” என்ற பொருள். இந்த மகிமை நடந்த நாளும் ஒரு அட்சய திருதியை நாளில்தான்.

குபேரர் லட்சுமிதேவியை பூஜிக்கும் நாள் அட்சய திருதியை

செல்வத்திற்கு அதிபதி குபேரர். தன் செல்வம் ஆண்டு முழுவதும் நிலைத்து இருக்க அடசய திருதியை அன்று ஸ்ரீமகாலஷ்மிக்கு பூஜை செய்வார். இதனால் மகிழ்ச்சியடைந்த ஸ்ரீலஷ்மி தேவி, குபேரரை என்றும் செல்வந்தனாக இருக்கும் படி ஆசி வழங்குவார். நாமும் இந்த அட்சய திருதியை அன்று ஸ்ரீமகாலஷ்மிக்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் ஸ்ரீலஷ்மிதேவியின் ஆசி கிடைக்கும்.

இறைவனுக்கு பொன் – பொருள் தந்துதான் வணங்க வேண்டும் என்றில்லை. நம் தகுதிக்கு ஏற்ப சமர்பித்து வணங்கலாம். குசேலர் ஸ்ரீகிருஷ்ணருக்கு தன் சக்திக்கேற்ப அவல் மட்டும் தந்துதான் செல்வந்தர் ஆனார்.

அதேபோல வறுமையில் இருந்த ஒரு குடும்பத்தின் வீட்டு வாசலில்“பவதி பிக்ஷாந்தேகி” வந்து நின்ற ஆதிசங்கரருக்கு, உணவு ஏதும் தர வழியில்லாமல் கலங்கிய அந்த குடும்பத்தின் இல்லதரசி, அப்போது தன் வீட்டில் இருந்த காய்ந்த நெல்லி கனியை தந்த பலனால், வறுமையிலும் உயர்ந்த பண்பாட்டில் நிற்கும் அந்த தாயின் நிலையை எண்ணி மகிழ்ந்த ஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் பாட, அதனால் ஸ்ரீமகாலஷ்மியின் மகிழ்ந்து அந்த குடும்பத்தின் தரிதிரத்தை நீக்கி வாழ்க்கை தரத்தை உயர்த்தினார். இந்த சம்பவம் நிகழ்ந்த நன்னாளும் ஒரு அட்சய திருதியை அன்றுதான்.

ஆகவே அட்சய திருதியை அன்று அன்னதானம், நீர்மோர் தானம், நன்றாக படிக்கும் ஏழை மாணவ-மாணவிக்கு நம் சக்திக்கேற்ப கல்வி உதவி போன்றவை செய்தாலே சொர்கலோக வாழ்க்கை அமையும். அத்துடன் ஸ்ரீ மகாலஷ்மியை அன்று மனமுருகி பிராத்தனை செய்தால் குபேரர் போல் ஆண்டு முழுவதும் சுபிக்ஷத்தோடு செல்வ வசதியோடு வாழ்க்கை அமையும். இதைதான் எல்லா புராணங்களும், சாஸ்திரங்களும் சொல்கிறது.

அட்சய திருதியை அன்று அரிசி, சர்க்கரை போன்ற உணவு பொருட்களை வாங்கலாம். இதனால் ஆண்டு முழுவதும் உணவுக்கு பஞ்சம் வராது. நமக்கு உணவு பஞ்சம் இல்லாமல் இருந்தாலே பிறகு அன்னதானம் தருகிற நிலை அமையும். இந்த அன்னதான புண்ணியத்தால் முன்ஜென்ம பாவங்கள் குறைந்து, பொன் – பொருள் சேரும். அடுத்த தலைமுறையும் செழிப்பாக இருக்கும். புண்ணியங்கள் செய்தால்தான் பல நன்மைகள் நம் நிழல் போல் பின் தொடரும்.

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்று அவசியம இல்லை. இருந்தாலும் அவரவர் விருப்பங்களுக்கு சாஸ்திரம் தடையாக இருக்காது. அட்சய திருதியை அன்று தங்கம்-வெள்ளி வாங்குகிறமோ இல்லையோ ஆனால் கண்டிப்பாக சர்க்கரை – உப்பு இவற்றில் ஏதேனும் ஒன்றை வாங்க வேண்டும்.

சர்க்கரை வாங்கினால் இன்னும் சிறப்பு. எப்படி இனிப்பு இருக்கும் இடம் தேடி எறும்பு வருகிறதோ, அதுபோல் இனிப்பை விரும்பும் ஸ்ரீமகாலஷ்மி இனிப்பு இருக்கும் அந்த வீட்டுக்கு வர காத்திருக்கிறாள்.

ஸ்ரீ மகாலஷ்மி படத்தின் முன் நெல்லிக்கனியை வைத்து ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரத்தை பாடினாலும் அல்லது கேசட்டில் ஒலிக்கச் செய்தாலும் வளமை பெருகும்.

அட்சய திருதியை அன்று புண்ணியங்கள் செய்வோம் – வளம் பெருவோம்.

No comments:

Post a Comment