Tuesday, May 7, 2013

சப்தகன்னியர்- பிராம்மி

பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். பராசக்தியின் படைத்தளபதிகளான இவர்கள் பெரும்பாலான சிவாலயங்களில் சுற்றுப் பிரகாரத்தில் அருள்பாலிப்பர். சப்த கன்னியர் எனப்படும் சப்த மாத்திரிகைகள் பொதுவாக ஒரே கல்லில் வரிசையாக அமர்ந்திருப்பது போன்று அமைக்கப்படுவர். சில இடங்களில் தனித்தனித் திருமேனிகளும் கொண்டிருப்பர். நின்ற நிலையில் அமைக்கப்படுதல் பெரும்பாலும் வழக்கில் இல்லை. இருந்தருளும் நிலையில், இடது காலை மடித்து சுகாசன நிலையிலோ அல்லது உத்குடி ஆசன நிலையிலோ வைத்திருப்பர். வலது காலைத் தொங்கவிட்ட நிலையில் காணலாம். ஆகமம் மற்றும் புராணங்களில் இவர்களுக்குக் கரங்கள் பல கூறப்பட்டிருந்தாலும் பொதுவாக இரண்டு அல்லது நான்கு கரங்களுடனேயே இருப்பர். இரண்டு கரங்களானால் அபய வரதம் கொண்டிருப்பர்; நான்கு கரங்களானால் முன்னிரு கரங்களை அபயவரதமாகவும் பின்னிரு கரங்களில் தத்தமக்குரிய ஆயுதங்களைத் தாங்கியிருப்பர். கோயிலில் உள்ள இறைவனை வழிபட்ட பின் இந்த சப்தகன்னியரையும் வழிபட்டால் தான். கோயிலுக்கு சென்றதற்கான முழு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சப்தகன்னியரின் தோற்றம்: சிவன் அந்த காசுரனுடன் போரில் ஈடுபட்ட போது; அந்த காசுரனின் உடலில் இருந்து வழிந்த இரத்தத்திலிருந்து தோன்றிய அசுரர்களை அழிக்கும் நோக்கில், சிவன் தனது வாயிலிருந்து தோன்றிய அக்னியிலிருந்து யோகேசுவரி - என்ற சக்தியைத் தோற்றுவித்தார் என்றும்; அவள் மாகேசுவரி - என்ற சக்தியை உருவாக்கினாள் என்றும்; அவளுக்கு உதவியாக பிரம்மன் தனது அம்ச பிராம்மியையும்; விஷ்ணு தனது அம்ச வைஷ்ணவியையும்; இந்திரன் - தனது அமட்ச இந்திராணியையும் ; முருகன் - தனது அம்ச கவுமாரியையும்; வராகமூர்த்தி - தனது அம்ச வராகியையும்; யமன் - தனது அம்ச சாமுண்டியையும் படைத்து அளித்தனர் என்று வராகபுராணம் கூறுகிறது. சும்ப - நிசும்ப என்ற அரக்கர்களை அம்பிகை அழிக்கப்போர் புரிந்த போது அவளுக்கு உதவியாக இத்தேவியர்கள் உற்பவித்தனர் என்று மார்க்கண்டேய புராணம் கூறுகின்றது.

நைரிதன் என்ற அசுரனை ஒழிக்கப் பிரதம்மா யுத்தம் செய்த போது; அவருக்கு உதவி புரிவதற்காக பிற தேவர்கள் தங்களது சக்திகளை உருவாக்கி, அளித்தனர் என்று சுப்ரபேதாகமம் விளக்குகின்றது. அக்னி புராணம், மச்ச புராணம், தேவி புராணம் என்ற புராண நூல்களிலும், பூர்வ காரணாகமம், அம்சுமத் பேதாகமம் என்ற ஆகம நூல்களிலும்; விஸ்வகர்ம சாஸ்திரம், சில்பரத்தினம், ரூப மண்டலம், ரூபாவதாரம் என்ற சிற்ப சாஸ்திர நூல்களிலும்; இவர்களது உருவ அமைப்பு ஆயுதங்கள் முதலியன கூறப்படுகின்றன. ஆண் தெய்வங்களின் சக்திகளான இவர்கள் தத்தமக்குரிய ஆண் தெய்வங்களின்; ஆயுதங்கள் ஆபரணங்கள் வாகனம் கொடி என்பனவற்றினைக் கொண்டு விளங்குவர்!

இதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று சிவனின் அருளாசி பெற்றுள்ளனர். சப்தகன்னியரில் பிராம்மி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், திருஇந்தளூர், அருள்மிகு ஒப்பிலா நாயகி சமேத தான்தோன்றீசுவரர் திருக்கோயில் ஆகும்.

பிராம்மி, பிரமனுடைய அம்சம் உடையவள். நாற்றடந்தோள், அகன்ற கண்கள், ஒளிவிடும் பொன்மேனி, நாற்கரங்களில் வரதம், அபயம், கமண்டலம், அட்சமாலிகை கொண்டவளாய் அன்னக்கொடி, ஜடாமகுடம் உடையவளாய் பத்மாசனத்தில் எழுந்தருளியிருப்பாள். மயிலாடுதுறையிலிருந்து நீடூர் செல்லும் பேருந்து சாலையில் திருவழுந்தூரின் வடக்கு எல்லையில் இத்தலம் உள்ளது.

காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

பிராம்மி - ரூப லக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)

பிரம்மனின் சக்தி பிராம்மி எனப்படுவாள். அவள் நான்கு கரங்களையும் ஒரு முகத்தையும் உடையவள். முன் இரு கரங்களை அபயவரதமாகவும், பின் இரு கரங்களில் கெண்டி - ஸ்படிக மாலைகளை உடையவள். வெண்ணிற ஆடை அணிந்தவள்; ஸ்படிக மாலையை ஆபரணமாகப் பூண்டவள். அன்னவாகனத்தின் மேல் அமர்ந்தவள்; அதையே கொடியாகவும் உடையவள். தர்ப்பைப்புல் நீரால் இல்லத்தைச் சுத்தப்படுத்துபவள்.

பிரம்மனின் அம்சமாகையால் சிருஷ்டிக்கு அதிபதியானவள்; இவள் கலைகளின் அதிதேவதை என்பதால், கலைஞானம் கிட்டும், கல்வி - கேள்விகளில் சிறந்து விளங்கலாம். அத்துடன் குழந்தைப் பேறும் கிட்டும்.

பிராம்மி பாடல்:

பேசவாம் புகழ்ப் பிராமி என்று உரைப்பவர் தான்தோன்
றீச நாதனை இமையவர் வாழ நஞ்சுண்டு
நாசமில்லியை நலந்தரு பூசனை ஆற்றித்
தேசமைந்த பல்வரத்தொடு சிறப்பெலாம் பெற்றாள்.

பிராம்மி என்ற சாவித்திரியை வழிபடுவதற்கான பூஜா முறைகள்:

ஆசன மூர்த்தி மூலம்

ஓம் - ஹ்ரீம் - பிராம்மி - ஆசனாயயாய நம:
ஓம் - ஹ்ரீம் - பம் - பிராம்மி - மூர்த்தியை நம:
ஓம் - ஹ்ரீம் - ஐம் - பம் - பிராம்மியே நம:

பிராம்மி காயத்ரி:

ஓம் - ஹம்ஸத்வஜாயை வித்மஹே;
கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ, ப்ராம்மி ப்ரசோதயாத்

தியான ஸ்லோகம்:

சதுர்ப்புஜா விஸாலாட்சி;
தட்த காஞ்ச நசந்நிபா;
வரதாபய ஹஸ்தா ச
கமண்டல் வக்ஷ மாலிகா;
ஹம்ஸத்வஜா, ஹம்ஸாரூடா,
ஜடா மகுட தாரிணீ,
ரக்த பத்மாஸ நாசீகா
ப்ரம்ஹரூபிணீ, நமஸ்துதே

மூலமந்திரம்:

ஓம் - ஹ்ரீம் - ஐம் - பம் - பிராம்யை - நம:

No comments:

Post a Comment