Wednesday, November 30, 2011

வர்ம மருத்துவம்

பிரபஞ்ச சக்தியை அடைந்தவர்களால் தான் அண்ட சராசரங்களை அறிய முடிந்தது. இந்த பிரபஞ்ச சக்தியை சித்தர்கள் ஞானிகள், ரிஷிகள், முனிவர்கள் அடைந்தார்கள். அதனால் தான் அவர்களால் முக்காலத்தையும் உணர முடிந்தது

அண்ட சராசரங்களை அடைவதற்கு கலைநாலும் சேர்த்து எண் சாண் உடம்பில் (உடம்பின் எல்லா பாகங்களும்) மனம், புத்தி, ஆங்காரம், வாக்கு இவைகளை ஒரே நிலையில் உடம்பில் ஒடுக்கி ஆதாரங்கள் 9-ஐயும் சரநிலையில் ஒரே நேர்க்கோட்டில் கொண்டு வந்தால் பிரபஞ்ச சக்தியை அடையலாம்.

தண்டுமுண்டு செய்யாதே மனம் வேறானால்

தற்பரத்தை எப்போதும் அறியமாட்டாய்

மனதை அலைபாய விடாமலும், சத்தியத்திற்கு உட்பட்டும் செயல்பட வேண்டும். தவறான வழியில் சென்றால் எப்போதும் பிரபஞ்ச சக்தியை அடைய முடியாது. தன்னைச் சுற்றியுள்ள பெரியோரை வணங்கி அவர்களுக்கு தொண்டு செய்து வந்தால் கர்ம வினைகள் நீங்கி உடலும், மனமும் தெளிவுபெறும். அப்போதுதான் இறைசக்தி கைகூடும். எல்லா மதங்களும் இதையே போதிக்கின்றன.

அன்பே சிவம் என்கிறது இந்து மதம்

அன்பினால் இவ்வுலகை வெல்லலாம் என்கிறது கிறிஸ்தவ மதம்.

அனைத்து உயிர்களிடத்தும் அன்பாக இரு என்கிறது இஸ்லாம்.

மனம் தெளிவு பேறாமல் எந்த ஒரு செயலிலும் வெற்றியடைய முடியாது. ஒரே மனநிலை, சிந்தனையோடு இருந்தால்தான் சாதனை புரிய முடியும் என்பதை சித்தர்கள் பல நூல்களில் தெளிவுபடுத்தியுள்ளனர். 

தூய்மையான மனம், தெளிவான சிந்தனை, ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் இவை மூன்றும்தான் மனிதனை உன்னத நிலைக்கு எடுத்துச் செல்லும். எந்த ஒரு தொழிலுக்கும் இந்த மூன்றும் மிகவும் முக்கியம்.

இதையே நம் சித்தர்களும் தனித்திரு, விழித்திரு, பசித்திரு என்கின்றனர். நம் முன் வாழ்ந்த சுவாமி விவேகானந்தரும் கூறியுள்ளார். இதுபோல் பெரியோரை மதித்து வணங்கினால் தான் பிரபஞ்ச சக்தியின் மூலம் வர்மத்தை அறிந்து கொள்ள முடியும். 

இதனால்தான் வர்ம மருத்துவத்தை அறிய குருவருளும், இறையருளும் முக்கியம் என்று கடந்த இதழில் எழுதியிருந்தோம்.

சரநிலை தெரியாமல் ஒருவரால் வர்ம மருத்துவம் செய்ய முடியாது என்பதை பல வர்ம நூல்களின் மூலம் தெளிவாக அறியலாம். ஆனால் தற்போதைய மருத்துவ பாடதிட்டத்தில் வர்ம மருத்துவம் பற்றி முழுமையான தகவல் இல்லை. மேலும் வர்ம மருத்துவம் சரியாக கற்றுக் கொடுக்கப்படவில்லை என்பதுமருத்துவம் தெரிந்த பெரியோர்களும், சான்றோர்களும், அறிஞர்களும் மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த அனைத்து வல்லுநர்களும் அறிந்த உண்மை.

இந்த நிலைக்குக் காரணம் வர்ம மருத்துவம் தெரியாமல் தெரிந்தது போல் பாசாங்கு செய்து அரசாங்கப் பதவிகளில் ஒட்டிக் கொண்டு ஏமாற்றும் வித்தகர்கள்தான். இவர்கள் ஜோல்னா பையும், ஜோக்கர் உடையும் அணிந்து வர்ம மருத்துவராக நடித்து ஏமாற்றி வந்துள்ளனர்.

ஆனால் முழுமையாக வர்ம மருத்துவத்தை அறிந்தவர்கள் நம் நாட்டில் ஆங்காங்கே இருந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

குறிப்பாக கன்னியா குமரி மாவட்டத்தில் வர்ம மருத்துவர்கள் அதிகம் உள்ளனர்.

மருத்துவ உலகில் சிலரின் அறியாமை யாலும், வர்ம மருத்துவத்தைப் பற்றி தெரியாமலும் இருந்த காரணத்தால் வர்ம மருத்துவத்தை அறிந்து கொள்ள ஆர்வம் கொண்ட மாணவர்க ளிடம் உனக்கு கைரேகை சரியில்லை, உனக்கு வர்மம் கிடைக்காது, இராசியில்லை என்று பொய் பேசி வர்ம மருத்துவத்தை புரியாத புதிர் ஆக்கிவிட்டனர். இதனால் வர்ம மருத்துவம் மாணவர்களுக்கு எட்டாக் கனியாகவே மாறிவிட்டது. வர்மம் தெரியாத இவர்களால் நமக்கு வர்மம் எப்படி கற்றுக்கொடுக்க முடியும் என்று மாணவர்களால் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானவர்கள் இவர்கள்தான். இந்த ஏமாற்றுப் பேர்வழிகளைப் பற்றி அன்றே உணர்ந்த சித்தர்கள் 

கடைத்தெருவில் மிருகம்போல் அலைவான் என்று எச்சரித்துள்ளனர். இவர்கள் தாங்கள் பணிபுரிந்த இடத்தை கழுதை புரண்ட இடம் போல் ஆக்கிவிட்டனர்.

வர்ம மருத்துவம் ஒரு மாபெரும் மருத்துவம். காலத்தின் மாற்றங்களினாலும் பல ஏமாற்றுக் காரர்களாலும் வர்ம மருத்துவம் பலருக்குத் தெரியாமல் போனது. இந்த மருத்துவத்தை மொழிகளின் தன்மைக்கேற்ப சிலர் ஆயுர்வேத மருத்துவம் என்றும் சிலர் சித்த மருத்துவம் என்றும் பிரித்துக்கொண்டார்கள். இப்படிப்பட்ட ஞானம் கொண்டவர்களுக்கு வர்ம மருத்துவம் புரியாத புதிராகத்தான் தோன்றும்.

வர்ம மருத்துவத்தில் நாடி பார்த்தல், உடல் கூறுகளின் நிலைகள், தத்துவங்கள், வாய்வு நிலை, நிதானங்கள், உயிர் நிலை ஒடுக்கம், அடங்கல் முறை, அகமருந்து, புறமருந்து செய்முறை விளக்கங்கள் அனைத்தும் கூறப்பட்டுள்ளன. அதி முக்கியத்துவம் வாய்ந்த நாடி நரம்புகளின் செயல்முறைகள், எலும்பு நரம்பு, தசை, தமனிகளின் சந்திப்புகள், இவற்றின் ஆதிக்கங்கள் பலவற்றை மறந்து திரிந்துபோன மருத்துவங்களாக இன்றைய காலகட்டத்தில் இந்திய மருத்துவ முறை உள்ளது. இதனால் சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் வர்ம மருத்துவத்தை உட்பிரிவு என்கின்றனர்.

வர்ம மருத்துவம் முழுமையாக அறிந்த ஒருவரால்தான் நரம்பு எலும்பு நோய்களுக்கு மருத்துவம் செய்ய முடியும். 

வர்ம மருத்துவர் நாடி பிடித்துப் பார்க்கும்போது முகத்தையும் கவனித்து நோயின் தன்மையை துல்லியமாக உணர்ந்து விடுவார்கள். வர்ம மருத்துவம் உடலுக்கு மட்டும் அல்ல, மனதிற்கும் உண்டு.

நோயின் தன்மையை அறிந்து அதன் ஆணிவேரை அகற்றுவதே வர்ம மருத்துவத்தின் சிறப்புத் தன்மை.

கடந்த இதழில் அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சியை பார்த்தவுடன் கண் நரம்புகள் தூண்டப்பட்டு நட்சத்திர காலம் என்ற வர்மப் புள்ளிகள் பாதிக்கப்பட்டு அதனால் திலர்த காலமும் பாதிக்கப்படுவதால் மூர்ச்சையாகிறார்கள் என்று பார்த்தோம். இதனால் மனம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் வர்ம பாதிப்புதான் காரணம் என்பதை அறியலாம். இதற்குண்டான சிகிச்சை முறையும், வர்ம மருத்துவத்தில் உள்ளது. இதனால்தான் அகத்தியர் தன்னுடைய வர்ம நூலில் திலர்த கால வர்மத்தை முதலில் வைத்தார். திலர்த வர்மத்தில்தான் உடம்பில் உள்ள அனைத்து வர்மப் புள்ளிகளின் செயல்பாடுகளையும் துல்லியமாக அறிய முடியும் என்பது உண்மை. 

வர்மத்தின் முழுப் பயன்கள் அனைத்தும் எல்லா மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அது இக்கால இளைய தலைமுறைகளில் எழுச்சி மருத்துவர்களாக படித்துவரும் இந்திய மருத்துவ மாணவர்கள் அறிய வேண்டும். பொது மக்களுக்கும் இந்த தொடர் மூலம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.

இனம்புரியாத நோய்களுக்கு எளிய முறையில் சிகிச்சை செய்யும் இந்த அற்புத மருத்துவத்தைப் பற்றி அடுத்த இதழில் காண்போம்.

நம் கண்முன்னே வாழும் முதியோர்களை மதித்து நம்மால் முடிந்த பணிவிடைகளை செய்து வந்தால் நம் கர்ம வினைகள் நீங்கி பூர்வ ஜென்ம புண்ணியத்தால் சுகமாகவும், நலமாகவும் வாழலாம் என்பது சித்தர்களின் பொன்மொழியாகும். 

No comments:

Post a Comment