Friday, November 11, 2011

மந்திரங்கள் உச்சரிப்பதின் மகத்தான பலன்கள்



மனிதனுக்கு உள்ள ஆறாம் அறிவைக் கொண்டு - அடுத்த நிலையை அறிய உணர்வதில் - ஒரு சீரான சப்த அதிர்வுகளுக்கு பெரும் பங்கு உண்டு. இதைப் போன்ற தேவதை வசிய சக்தியை உடையவை - மந்திரங்கள் என்று அழைக்கப் படுகின்றன. 

வேதத்தில் மந்திர சாஸ்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது. நடைமுறையில் மந்திரசாஸ்திரம் என்றால் தீய விளைவுகளுக்கு பயன்படும் விஷயமாக எண்ணுகிறார்கள். மந்திர சாஸ்திரத்தை சரியான முறையில் பயன்படுத்தினால் சிறந்த நிலையை அடையலாம். யோக சாஸ்திரம் பரமாத்மாவை அடையும் பல வழிகளை கூறுகிறது.

ஹத, ஞான, கர்ம , பக்தி மற்றும் மந்திர யோகம் எனும் ஐந்து பாதைகளைக் கொண்டு ஆன்ம தரிசனம் அடைய முடியும் என யோக சாஸ்திரம் கூறுகிறது. யோக சாஸ்திரத்தில் மந்திர யோகம் ஓர் அங்கம் என்பதின் மூலம் மந்திர சாஸ்திரத்தின் உயர்வை உணரலாம்.



அறியாமை கொண்ட மனதுடன் ஆராய்ந்தால் ஓர் எளிய வார்த்தைக்கு என்ன சக்தி இருக்க முடியும் என எண்ணத் தோன்றும். உண்மையில் மந்திரத்தின் வார்த்தையைக் காட்டிலும் அதை பயன்படுத்தும் விதம் [ப்ரயோகம்] மற்றும் பயிற்சியே [சாதனா] முக்கியம்.

மந்திர உச்சாடனம் செய்யும் பொழுது நமது உடலில் உள்ள 72,000 நாடிகளில் சலனம் ஏற்படுகிறது. பிரபஞ்ச ஆற்றலில் சில விளைவுகளை ஏற்படுத்தும் இந்த சலனம் முடிவில் நாம் அடையவேண்டிய இலக்கை அடைகிறது.
மந்திர ஜெபம் மனதை ஒருமுகப்படுத்துகிறது. மனதில் ஏற்படும் சலனத்தை தெளிவாக்குகிறது.

கலங்கலான நீர் இருக்கும் பாத்திரத்தில் ஒரு நாணயத்தை இடும்பொழுது அனைத்து தூசும் அந்த நாணயம் இருக்கும் இடத்தை அடையும். நீர் தெளிவடையும். எப்பொழுதும் சலனம் கொண்ட நீர் போன்ற மனதில் மந்திர ஜெபம் செய்யும் பொழுது எண்ண அலைகள் மந்திரத்துடன் அடங்கி மனம் தெளிவடையும்.

ஞான யோகிகள் மந்திர ஜெபத்தை ஆதரிப்பதில்லை. ஆத்ம விசாரம் செய்வதை விட்டு மந்திர ஜெபம் செய்வதால் என்ன பலன்? என்பது அவர்களின் கருத்து. மனம் ஒடுங்கியதும், மனதின் மூலத்தைக் காண்பதே மந்திர ஜெபத்தின் நோக்கம். ஞான விசாரத்தின் நோக்கமும் இதுவே. அதனால் தான் யோக முறையில் ஜெபயோகம் முக்கியத்துவம் பெறுகிறது.

ஜெபம் என்றால் தொடர்ந்து உச்சரிப்பது என பொருள்படும். ஜெபம் மற்றும் அஜெபம் என இரு தன்மைகளை கொண்டது, மந்திரஜெபம். தூய்மையான மனதுடன் மந்திரத்தை உச்சரிப்பது மந்திர ஜெபம் எனப்படும். தொடர்ந்து மந்திர ஜெபம் செய்த பின்பு வேறு நடவடிக்கைகள் செய்யும் பொழுது நம்மை அறியாமல் மனம் ஜெபம் செய்து கொண்டிருக்கும். இது அஜெபம். அதாவது சமஸ்கிருத சொல்லான அஜெபம் ஜெபிக்காத ஜெபம் என மொழி பெயர்க்கலாம்.

உலகில் உள்ள அனைத்து மதத்திலும் மந்திர ஜெபம் உண்டு என்பது இதன் சிறப்பை பறைசாற்றும். எனவே மந்திர ஜெபம் சமயங்கள் கடந்த இறைநிலை காட்டும் கருவி எனலாம்.

என்ன மந்திரம் ஜெபிக்கலாம் ?

வேதத்தில் காணப்படும் அனைத்து வாசகங்களும் மந்திரம் என்றே அழைக்கப் படுகிறது. அதில் சக்தி வாய்ந்த சில வார்த்தைகள் இணைவு பெற்று காணப்படுவதால் வேதம் உயர்வான மந்திரம் என அழைக்கப்படுகிறது. இதை தவிர்த்து சில சமஸ்கிருத வாசகங்களுக்கு உள்ள சக்தியை கண்டறிந்த நமது முன்னோர்கள் அவற்றை மந்திரமாக உச்சாடனம் செய்து முக்தி அடைந்தார்கள். இது போன்ற சில வார்த்தைகளுக்கு அர்த்தம் கிடையாது. மந்திரத்திற்கு அர்த்தம் தேவையில்லை. மந்திரத்தின் சக்தியே முக்கியமானது. மந்திரம் பல வகையாக கையாளப்படுகிறது.

பீஜமந்திரம் , தேவதாமந்திரம் , பாராயணம் என இவற்றை எளிமையாக வகைபடுத்தலாம். பீஜமந்திரம் என்பது ஓர் வார்த்தை கொண்டது. முன்பு சொன்னது போல பீஜ மந்திரத்திற்கு அர்த்தம் தேவையில்லை. "பீஜ" என்றால் விதை எனப்படும். ஓர் சிறு வித்தாக ஒலிக்கும். பீஜ மந்திரம் ஒரு மிகப்பெரிய மரம் போன்று வளர்ந்து ஆன்மீக புரட்சியை ஏற்படுத்தும். "ரீம்" எனும் பீஜ மந்திரத்தை உச்சரித்த வண்ணம் பறந்து, தேன் சேகரிப்பதால்தான், தேனியின் எச்சில் கூட புனிதமாக கருதப்படுகிறது.

தேவதா மந்திரம் என்பது குறிப்பிட்ட கடவுளை உருவகப்படுத்தும் மந்திரம். இது சில வரி கொண்டதாக இருக்கும். காயத்ரி மந்திரம் மற்றும் மஹா மந்திரங்கள் இதில் அடங்கும்.

பாராயண மந்திரம் என்பது பல வரிகள் கொண்ட நீண்ட சொற்றொடர்கள் கொண்டது. விஷ்ணு சகஸ்ர நாமம், அஷ்டோ த்ர நாமாவளி, ருத்ரஜெபம் என இதற்கு உதாரணம் கூறலாம். மந்திரத்தை நாமே தேர்ந்தெடுத்து ஜெபம் செய்யலாம் என பலர் கூறுகிறார்கள். ஆனால் சிறந்த குருவின் மூலம் மந்திர தீட்சை பெற்று ஜெபம் செய்வதெ நன்று. இதற்கு பல காரணம் உண்டு.

மந்திரம் உச்சரிக்கும் முறை, அதை உச்சாடனம் செய்யுமிடம், உச்சாடனம் செய்பவரின் தன்மை அறிந்து குரு, தீட்சை அளிப்பதால் மந்திர தீட்சை குருவின் மூலம் பெறுவது சிறந்தது எனக் கூறலாம்.

மந்திரத்தை தவறாக உச்சரிக்க முடியுமா? என உங்களுக்கு சந்தேகம் வரலாம்.

இதற்கு கும்பகர்ணனின் கதையை உதாரணமாக கூறலாம். தனது தவ வலிமையால் பிரம்மனிடம் இறப்பற்ற நிலையை கேட்க கடுமையான தவம் இருந்தான், கும்பகர்ணன். இராவணனின் சகோதரன் இந்த வரத்தைப் பெற்றால் அனைத்து உலகத்திலும் துன்பத்தை விளைவிப்பான் என தேவர்கள் அச்சம் கொண்டனர்.

பிரம்மன் கும்பகர்ணன் முன் தோன்றி "உனக்கு என்ன வரம் வேண்டும் ?" என கேட்டவுடன் "நித்ய தேவத்துவம் " என்று கேட்பதற்கு பதிலாக "நித்ர தேவத்துவம்" என தவறுதலாக கூறினான். இது போன்று தவறுதலாக உச்சரித்ததால் இறவா வரம் பெறுவதற்கு பதிலாக தூங்கும் வரத்தைப் பெற்றான். சில சமஸ்கிருத மந்திரங்கள் சரியாக உச்சாடனம் செய்யவில்லை என்றால் பலன் அளிக்காது. குருதீட்சை அளிக்கும் பொழுது இதை சரியாகப் பயன்படுத்த துணைபுரிவார்.

மேலும் ஒருவரின் தன்மையைப் பொறுத்தும் மந்திரம் வேறுபடும். இதற்கு அதிகாரத்துவம் என்பார்கள். குரு ஒருவனுக்கு இந்த மந்திரம் முக்தி அளிக்குமா என பார்த்து, இதற்கு சரியான அதிகாரியா என பார்த்து தீட்சை அளிப்பார்.

3 comments:

  1. ஜயா அவா்களே,

    யார் வேண்டுமானலும் மந்திர உச்சாடனம் செய்யலாமா,அல்லது
    இன்னாா்தான் உச்சாடணம் செய்ய வேண்டும்,அல்லது அதற்க்கு ஏதேனும் தகுதி தேவவையா,அதாவது பிரமச்சர்யம் போன்ற கட்டுபாடு ஏதேனும் உள்ளதா.மந்திர உச்சாடணம் செய்ய என்ன தகுதி வேண்டும்,அல்லது யாரேனு குரு முகமாக கேட்டுதான் உச்சாடனம் செய்ய வேண்டுமா அல்லது தாமாகவே முயன்று உச்சாடணம் செய்யலாமா,எப்படி இருக்க வேண்டும்,என்று சற்று விளக்கமாக பதிலளித்தால் எனக்கு மட்டுமல் இன்னும் ஏராளமானோர் பயனடைவர்,இதை ஏன் கேட்கிறேன் என்றால் ஏதேனும் தவறான
    விளைவுகள் ஏற்பட்டுவிடுமோ என்ற பயம்தான்.கண்டிப்பாக விளக்கமளிக்க தவற வேண்டாமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய கேள்விகளுக்கு விடையாக, 15-11-2013 அன்று வெளிவந்துள்ள பதிவினை தயவு கூர்ந்து படிக்கவும்

      திரு. இயற்கை சிகிச்சையாளன்

      Delete
  2. Neenga nalla irukkanumnu solren ,devadai pirayogam pannina adarku niraya farmaltes irukku

    ReplyDelete