Tuesday, November 29, 2011

ஆரோக்கிய வாழ்வும் உடல் உறுப்புகளும்


தனியொருவரின் உடல், உள, சமூக நிலை ஆகியன நல்ல நிலையில் இருக்கும் நிலையே ஆரோக்கிய நிலை என உலக ஆரோக்கிய ஸ்தாபனம் (டபிள்யு.எச்.ஓ - WHO) 1948ம் ஆண்டில் வரையறுத்துள்ளது. மேலும் ஒருவருக்கு நோயற்ற நிலையை மட்டும் இது குறிப்பதல்ல எனவும் கூறப்பட்டுள்ளது. 1986ம் ஆண்டில் ஆரோக்கியம் என்பது ஒவ்வொரு நாள் வாழ்வின் மூலப்பொருள் எனவும் இதுவே தனிப்பட்ட, சமூக மூலப்பொருளாகவும் அமைவதாகவும் உலக ஆரோக்கிய ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது. ஆரோக்கியம், தனியொருவருக்கும் அதனூடு சமூகத்திற்குமான நல்ல நிலையைப் பெறுவதற்கான நன்மை நோக்கிய குறியாகும். வாழ்வதன் நோக்கமே ஆரோக்கியம் என்றில்லபமல் நல்ல வாழ்வினை தரும் மூலப்பொருள் ஆரோக்கிமாக அமையவேண்டும்.
தனியொருவருக்கு முதலில் உடலாரோக்கியமும், உள ஆரோக்கியமும் முக்கியமானதாகும்;. இவற்றில் உடலாரோக்கியமானது, ஒருவரின் பொதுவான நாளாந்த உயிர் வாழ்க்கைக்கான செயற்பாடுகளை செவ்வனே செய்து முடிப்பதற்கான நிலையும் சில குறிப்பிட்ட, சிறப்பான செயற்பாடுகளை செய்வதற்கான ( உ-ம் விளையாட்டு, குறிப்பான சில வேலைகள்) நல்ல உடல் நிலையையும் குறித்து நிற்கிறது. தகுதியான உடல் நிலையென்பது இதயம், குருதிக் குழாய்கள், சுவாசப்பை (நுரையீரல்) தசைத் தொகுதி போன்றன தமது வல்லமையின் மிகச் சிறந்த அளவில் செயற்படுகின்றன என்பதைக் குறித்து நிற்கிறது. ஒருவரின் உடல் ஆரோக்கியம் எனப்படுவது, அவரின் வேலையையும் ஓய்வு நேர செயற்பாடுகளையும் செய்வதற்கு, தமது வல்லமையின் நிலையில் செயற்படு நிலையாகும். இந்நிலையில் உடல் நோய் நொடி அற்றதாகவும், ஏதாவது அவசர நிலைகளைச் சமாளிக்க கூடியதானதாகவும் இருக்கும். 
உடல் ஆரோக்கியமானது, போதியளவு ஒழுங்கான தேக அப்பியாசம், நல்ல தரமான போசாக்குக் கொண்ட முழு உணவு, போதியளவான நல்ல உடல் இளைப்பாறுதல், ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. ஒருவரின் தேக ஆரோக்கியம் நல்ல நிலையில் இருப்பதற்கான அளவு கோல்கள் பின்வருமாறு அமையும்:
- கணிப்புத் திறமை
- உடன் செயலாற்றும் திறனாற்றல்
- சமநிலை
- உடல் வாகு
- செயல் தாங்குதிறன்
- இணைந்து செயலாற்றல்
- நெகிழ்வுத் தன்மை (வளையும்)
- சக்தி
- வேகம்
- செயலில் நீடித்து நிற்றல்
- விசை
ஒருவரின் ஆரோக்கியத்தில் உடல் உள ஆரோக்கியம் முக்கியமானதாகும். உள ஆரோக்கியமானது, ஒருவர் தான் வாழும் சமூகத்தில் உணர்வு சார்ந்த, உளம் சார்ந்த வகையில், சாதாரண வாழ்க்கை ஒன்றின் நிற்பந்தங்களை நல்லபடி சமாளித்து வாழ்வதற்கான நிலையாகும். உள ஆரோக்கியமானது சமூகம் சார்ந்ததாக இருக்கின்றது. சமூக பழக்கவழக்கங்கள், நடைமுறைகள், நம்பிக்கைகள் ஒருவரின் உணர்வுகளையோ அல்லது மன நிலையையோ மாற்றி விடக்கூடும். இங்கு மனநோய்க்கும் உள ஆரோக்கியத்திற்குமான வேறுபாட்டையும் கருத்தில் கொள்ளவேண்டும். உள ஆரோக்கியமென்பது, தனியொருவர் எவ்வாறு திறம்பட காரியங்களை ஆற்றுகிறார்;, சாதாரண வாழ்வின் சவால்களை எவ்வாறு கையாளுகிறார்;, தனது உறவுகளை எவ்வாறு செவ்வனே திருப்தி செய்து பேணுகிறார்;, இவற்றூடாக தனது சுதந்திர வாழ்வில் எவ்வாறு வெற்றிகரமாக செயற்படுகிறார் என்பவற்றின் அளவு கோலாகும். கடினமான சூழ்நிலைகளிலிருந்து மீண்டுவருதல் நல்ல உள ஆரோக்கியத்தின் அறிகுறியாகும்.
ஆகவே ஆரோக்கியம் என்பது சமூகமொன்றில் நன்றே வாழ நல்ல உடல் உள நிலையைப் பெற்றிருப்பதாகும்.
ஒருவரின் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பதில் பல சமூக பொருளாதார காரணிகள் பங்குபற்றுகின்றன. அவற்றில் பின்வருவனவற்றைப் பொதுவாக கருதலாம்.

- வருமானமும், சமூக அந்தஸ்தும்
- கல்வியறிவு நிலை
- சமூக உதவி வழங்கள் அல்லது அமைப்புக்கள்
- வாழ் சூழல்
- ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பு சூழல்
- ஒருவரின் தனிப்பட்ட ஆரோக்கியம் பெறும் செயற்பாடுகளும், கடின சூழலை சமாளிக்கும் திறனும
- உயிரியல் தலைமுறை ரீதியான தொடர்புகள்
- சமூக சுகாதார அமைப்புக்கள்
- பால் (ஆண் அல்லது பெண்)
- கலாச்சாரம்
இவற்றில் சில சமூக காரணிகளாகவும் சில தனியொருவரினால் கட்டுப்படுத்தக் கூடியதாகவும் காணப்படுகின்றன. சமூக அமைப்புக்களிடமிருந்து ஆரோக்கியத்திற்கான உதவிகளைப் பெறும் அதே வேளை தனியொருவர் தமது ஆரோக்கியத்தைப் பெறும் பொருட்டு வேண்டிய வாழ்க்கை முறை மாற்றங்களைக் கொண்டுவர முடியும். தனியொருவர், தனதாரோக்கியத்தை நல்ல நிலையில் நன்கு பேணும் பொருட்டு சில முறைகளை வகுத்து அதனை ஒழுங்காக செயற்படுத்தவேண்டும். ஆரோக்கிய நிலையை அடைவதும், அதனை தொடர்ச்சியாகப் பேணுவதும் தொடர்சியாக நடைபெற வேண்டியதாகும். இதனடிப்படையில் பின்வரும் விடயங்களை கருதவேண்டும்.

- சுயகவனம்
- போசாக்குணவு
- விளையாட்டு வீரருக்கான போசாக்குணவு
- உடற் பயிற்சி
- சுகாதாரம்
- மனப்பழுவைக் கையாளுதல்
- இயற்கை ஆரோக்கிய முறைகள்
- வேலைத்தளச் சூழல்
- சமூக ஆரோக்கியம்
- ஆரோக்கியம் சார்ந்த விஞ்ஞானம்
சுய கவனம்
சுய கவனம் என்பதில் தனியொருவரின் ஆரோக்கியத்தை நல்ல நிலையில் பேணுதலாகும். இதில் தனியொருவர் குடும்பம், சமூகம் உள்ளடங்குகின்றனர். இவர்களின் ஆரோக்கியத்தை பேணுதல், நோயுற்ற நேரம் ஆரோக்கியத்தை மீளப்பெறுதல், நோய் தடை செய்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இங்கு உடல் உள ஆரோக்கியத்தைப் பெறும் பொருட்டு, உடற்பயிற்சி செய்தல், நிறை உணவு உண்ணல், சுகாதார முறைகளைக் கடைப்பிடித்தல் ஆகியன கருதப்படுகின்றன. பாதகமான விளைவுகளைத் தருமென நன்கு அறியப்பட்டவற்றை கட்டாயம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் (உ-ம் புகைத்தல், போதைவஸ்து பாவித்தல்)
தொடர்ச்சியான சுயகவனம் செலுத்துதல் மூலம் இலகு வழியில் ஆரோக்கியத்தைப் பேணலாம்.

போசாக்குணவு
போசாக்குணவென்பது, ஆரோக்கிய வாழ்க்கையொன்றிற்கு வேண்டியவற்றை உடலுக்கு தருவதாகும். உணவாகவே இவற்றை நாம் உள்ளெடுக்கின்றோம். புல நோய் நிலைகளை, போசாக்குணவுகளை எடுப்பதன் மூலம் தவிர்த்துக் கொள்வதோடு, நோய் நிலையிலிருந்து நீங்கியும் விடலாம். டயற் என ஆங்கிலத்தில் குறிக்கப்படுவது ஒருவர் உண்ணும் உணவாகும். தரத்தில் குறைவான டயற்றை ஒருவர் உண்ணும் பொழுது போசாக்கு, உயிர்ச்சத்து குறைபாட்டினால் நோய்கள் தோன்றுகின்றன. (பெரிபெரி, ஸ்கேவி, உடல் பருமனடைதல், நீரிழிவு, சில இரத்த சுற்று சம்பந்தமான நோய்கள்). நாமுண்ணும் உணவின் கூறுகளென்ன அவை எவ்வாறு உடலுக்கு பயன்படுகிறது என்னும் அறிவு, எமதாரோக்கியத்தை பேண மிகவும் உதவும். எமதுணவில் உடலுக்கு வேண்டிய போசாக்குகள் - உயிர்ச்சத்துக்கள் போதியளவில் இல்லாது போனால் நோய்கள் தோன்றிவிடுகின்றன.
விளையாட்டு வீரருக்கான போசாக்குணவு
இங்கு உணவும், உணவுக் குறைநிரப்பிகளும், விளையாட்டு வீரர்கள் விளையாட்டில் ஈடுபடும் பொழுது, விளையாட்டிற்;கு பயிற்சி அல்லது தயார் செய்யும் பொழுது, விளையாட்டின் பின், இழந்தவற்றை அல்லது தேய்ந்தவற்றை புதுப்பிக்க எவ்வாறானவை என்பதனைப் பற்றிய அறிவாகும். ஒவ்வொரு விளையாட்டும் அதன் சக்தி தேவையிலும், சக்தி வெளிவிடப்படவேண்டிய நேர அவகாசத்திலும், வேறுபட்டு நிற்கின்றன. எனவே விளையாட்டைப் பொறுத்து, வீரர்கள் என்ன உண்ணவேண்டும் என தீர்மானிக்கப்படுகிறது. ( உ-ம் நீந்தல், காற்பந்தாட்டம், மரதன் ஓட்டம், துடுப்பெடுத்தாட்டம்)
உடற்பயிற்சி
உடல் அப்பியாசம் (பயிற்சி) என்பது ஆரோக்கியத்தையும், உடலுறுதியையும் பேணுவதற்கான உடற் செய்முறையாகும். உடற் பயிற்சியின் பொழுது என்புகள், தசைகள் வலுப்பெறுவதோடு, குருதிச் சுற்றேட்டம், சுவாசம் மேம்படுகிறது. பல சந்தர்ப்பங்களில், நோயெதிர்ப்பு தன்மை மேம்படுவதால் நோய் வராது தடுக்கப்படுகிறது. மேலும் பயிற்சியின் போது கவனம் பயிற்சியில் குவிக்கப்படுவதனால், மனவழுத்தம், போன்ற நிலைகளுக்கும் தீர்வாகின்றது. நோயுற்றவர், நோயற்றவர் என்ற வேறுபாடில்லர்து அனைவருக்கும் ஒழுங்கான அல்லது கிரமமான உடற்பயிற்சி வேண்டும். சில நோய் நிலையுள்ளவர்களுக்கு தேகாப்பியாசம் கட்டாயம் வேண்டியிருக்கிறது. (உ-ம் நீரிழிவு, உடற்பருமனடைந்தோர், நித்திரையின்மை, மனவழுத்தம் போன்றன). உடல் எடையையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். பல விதமான உடற்பயிற்சிகள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் தனது உடலின் தன்மைக்கும், அப்பியாச தேவைக்கும் (உ-ம் விளையாட்டு வீரர், உடற்கட்டு வளர்ப்போர்), வயதிற்குமேற்ப அப்பியாசங்களை தெரிவு செய்யவேண்டும். அப்பியாசம் செய்யும் கதியும், நேரவளவும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். யோக அப்பியாசத்தையும் ஒருவர் தெரிவ செய்யலாம். அளவுக்கும் அல்லது தேவைக்கும் மேலாக உடற்பயிற்சி செய்வது உடலிற்கு தீங்காக அமையலாம். உடற்பயிற்சியின் பின்பு உடலிற்கு ஓய்வு (மீள் கட்டமைப்பிற்காக) தேவைப்படுகினறது. போதியளவு ஓய்வு கிடைக்காத பொழுது, பாவித்தழிக்கப்பட்ட போசாக்கு கூறுகள் மீளக் கிடைக்காத பொழுது உடல் நோய் நிலைகள் தோன்றுவதற்கு இடமளிக்கிறது.
சுகாதாரம்
சுத்தம் சுகம் தரும் என்று கூறப்படும். நோய் தொற்றை உடல் வருத்தங்களையும் தவிர்த்துக் கொள்ளுமுகமாக அனைவரும் உடலைச் சுத்தமாக பேணவேண்டும். காலையில் பல்துலக்கி, குளித்து அல்லது முழுகி, நாவழித்து, அல்லது காலைக்கடன்களை காலையிலேயே முடித்தல் நல்லது. உணவுத் தயாரிப்பு பாத்திரங்களையும், சமையலின் முன்பும் பின்பும் கழுவுதல், உணவின் முன்பும் பின்பும் கைகளையும் கழுவவேண்டும். மலசல கூடத்திற்கு போயிருந்தால் தொற்றுநீக்கி பயன்படுத்தி கைகளைக் கழுவவேண்டும்.
மனவழுத்தக் கட்டுப்பாடு
நீண்ட நாளாக விருக்கும் உளவியல் தாக்கங்கள், உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை வலுக்குறைப்பதன் மூலம் உடலாரோக்கியத்தைக் குலைத்துவிடுகிறது. மனவழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய முறைகளைக் கையாளுவதன் மூலம்; மனவழுத்தத்தைக் குறைக்கமுடிவதோடு. மனவழுத்த நிலையை சகித்துக் கொள்ளும் நிலையுமேற்படுகிறது. உடல் அப்பியாசம் செய்தல், தியானம், ஆக்க வழிதிடசிந்தனை, உடலையும் மனதையும் அமைதியுறச் செய்யும் முறைகள் (ரிலாக்கேசன் முறைகள்) போன்றவை மனவழுத்தத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரக்கூடிய முறைகளாகும். இம்முறைகளை அப்பியாசிக்கும் பொழுது, வாழ்க்கைக்கு வேண்டிய செயற்திறனிலும், செய்யும் நுட்பத்திலும் முன்னேற்றம் காணப்படுவதோடு தன்னம்பிக்கை வலுப்படுகிறது. மனவழுத்தம் தந்த பட்டறிவு மீஷண்டுமொரு சந்தர்ப்பத்தை தவிர்க்கவுதவுகிறது. உடல் வருத்தம் உளத்தையும், உளவருத்தம் உடலையும் பாதிக்கும். உடல், உள நிலைகள் ஆரோக்கியமாக இருந்தால்தான் தனியொருவரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
இயற்கையான ஆரோக்கியம்
பல, இயற்கையான முறைகளால் ஆரோக்கியத்தைப் பேணக்கூடிய வழிகள் பலவாண்டுகாலம் பயன்பாட்டில் இருந்துவருகின்றன. அலோபதிக் மருத்துவ முறை ஒப்பீட்டு ரீதியில் குறுகிய கால சரித்திரத்தைக் கொண்ட போதிலும், அதுவே முதன்மையான மருத்துவ முறையாக நடைமுறையிலுள்ளது. ஏனைய சிகிச்சை முறைகள் பதிலான சிகிச்சை முறையாகவோ (ஓல்ரநேரிவ்) அல்லது ஒத்துதவும் முறையாகவோ (கொம்பிளிமென்ரறி) கருதப்பட்டு செய்யப்படுகின்றன. இம்முறைகளில் சில பின்வலுமாறு:

- உணவு முறை
- உடற்பயிற்சி
- மூலிகை வைத்தியம்
- கோமியோபதி
- அக்கியூபஙசர்
- ஆயுர்வேதம்
- நச்சுரோபதி
- முசாச் சிகிச்சைமுறை
- அரோமாதரப்பி
மனித மூளை
மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் நிகழும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல், சமிபாடு (செரிமானம்),இதயத்துடிப்பு, கொட்டாவி போன்ற செயற்பாடுகளையும், விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மற்ற எல்லா உயிர்களையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது.

மனிதனின் மூளை, மற்ற பாலூட்டிகளின் மூளையின் பொது வடிவத்தினை பலவாறு ஒத்திருப்பினும், அவற்றின் மூளைகளைக் காட்டிலும் உடல் எடை-மூளை அளவு விகிதத்தில் குறைந்தது ஐந்து மடங்கு பெரியது. இதற்குக் காரணம், மனித மூளையின் நன்கு விரிவடைந்த பெருமூளைப் புறணிப் (cerebral cortex) பகுதியாகும். நரம்பிழையத்தால் (neural tissue) உருவாகி, பல தொடர் மடிப்புகளை கொண்ட இப்பகுதி மனிதனின் முன்மூளையில் அமைந்துள்ளது. குறிப்பாக, பிற விலங்குகளில் இருந்து மனிதனைப் பிரித்துக்காட்டும் சிறப்பு செயல்பாடுகளான, தற்கட்டுப்பாடு, திட்டமிடல், பகுத்தறிதல், கற்றறிதல் ஆகியவற்றிக்குக் காரணமான மூளையின் முன் மடல்கள் மனித மூளையில் நன்கு விரிவடைந்து காணப்படுகின்றன. மேலும், கண் பார்வைக்குக் காரணமான பகுதியும் மனித மூளையில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.

மூளையின் படிவளர்ச்சியில், மிக முந்திய சிறிய பாலுட்டியான மூஞ்சூறில் இருந்து மனிதக் குரங்கு வழியாக உயர்நிலை விலங்கினங்களில் ஒன்றான மனிதன் வரை மூளை-உடல் அளவு விகிதம் படிப்படியாக உயர்ந்துள்ளது; இதை மூளைப் பருமனாக்கம் (encephalisation) என்று அழைக்கின்றனர். மனித மூளையில் உள்ள சுமார் 50–100 பில்லியன் (5000-10000 கோடி) நரம்பணுக்களில் (1011), சுமார் 10 பில்லியன் நரம்பணுக்கள் (1010) புறணிக் கோபுர உயிரணுக்கள் (cortical pyramidal cells) ஆகும். இவ்வுயிரணுக்கள் தமக்குள் சமிக்கைகளை (குறிகைகளை) அனுப்பி கொள்ள ஏறத்தாழ 100 டிரிலியன் (1014) நரம்பிணைப்புகளைப் பயன்படுத்துகின்றன.

மனித மூளை, தடிப்பான மண்டை ஓட்டின் எலும்புகளாலும், மூளை முதுகுத் தண்டுநீர்மம் (cerebrospinal fluid) என்னும் நீர்மத்தாலும், அதிர்வுகளிலிருந்தும், வெளிச் சேதங்களிலிருந்தும், குருதி-மூளை வேலி (blood-brain barrier) என்னும் அமைப்பின் மூலம் இரத்த மண்டத்திலிருந்தும், இரத்தம் மூலம் பரவும் நோய்களில் இருந்தும் தீங்குறாமல் பெரிதும் பாதுகாக்கிறது. ஆனாலும், அதன் மென்மையான தன்மையால் பல வகை நோய்களாலும், சேதங்களாலும் தீங்குகள் ஏற்படுவது தவிர்க்க இயலாதது.

பொதுவாக மூளையில் ஏற்படும் சேதங்கள், உள் தலை காயங்கள் (closed head injuries) எனப்படும் வகையை சார்ந்த, தலையில் ஏற்படும் காயம், மூளையில் இரத்த தடை ஏற்படுவதால் ஏற்படும் இரத்தத் தடை (stroke), நரம்பு நச்சுகள் (neurotoxin) எனப்படும் வேதியல் நச்சுப் பொருட்களால் பாதிக்கப்படுதல் ஆகியன குறிப்பிடத் தக்கவை. மூளை தொற்று நோய்களால் பாதிக்கப்படுவது மிக அரிதானது. ஏனெனில், இரத்த மண்டலத்தில் கலந்து உடல் உறுப்புகளை தாக்கக் கூடிய பெரும்பாலான பாக்டிரியா கிருமிகளை, மனித மூளையில் குருதி-மூளை வேலி என்ற அமைப்பு வடிகட்டி விடுவதன் மூலம், மூளை தொற்று நோய் நுண்ணுயிரிகளில் இருந்து பெரும்பாலும் பாதுகாக்கப் படுகிறது. இருப்பினும், மூளை பாக்டிரியாவால் அரிதாக தாக்கப்படும் போது, எதிர்ப்பொருள் (antibodies) மூலம் சிகிச்சை அளிப்பது மிக கடினமானதாகிறது. ஏனெனில் இதே குருதி-மூளை வேலி அமைப்பு நோய் எதிர்ப்பு மருந்துகளையும் தடுத்து நிறுத்தி விடுவதே காரணம். தீநுண்மம் (வைரசு) எளிதாக குருதி-மூளை வேலியை தாண்ட வல்லவை. இவை இரத்தத்தில் உள்ள வெள்ளை உயிர் அணுக்களுடன் சேர்ந்து தாண்டுகின்றன. இவை தவிர பொதுவாகக் காணப்படும் பல மரபியல் நோய்களும் மூளையைத் தாக்க வல்லவை. அவற்றுள், பார்கின்சன் நோய், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமே நரம்பு மண்டலத்தை தாக்கும் மல்டிபிள் சுகுலோரோசிஸ் (multiple sclerosis) ஆகியவை முக்கியமானவை. உளவியல் நோய்களான உளச் சோர்வு, தாழ்வு மனப்பான்மை, மந்த அறிவு ஆகியவையும் மூளையில் ஏற்படும் மாற்றங்களால் தோன்றுகின்றன.

அமைப்பு
மாந்தரில் ஒரு சராசரி ஆணின் மூளை சுமார் 1.5 கிலோகிராம் எடையும்,  1260 கன சென்டிமீட்டர் அளவும் உடையது. பெண்ணின் மூளை சுமார் 1130 கன சென்டிமீட்டர் (cc) அளவுடையது. மனிதன் உயிருடன் இருக்கும்போது, மூளையின் வெளிப்பரப்பு அடர்த்தியான சாம்பல் நிறத்திலும், உள்நிறை மஞ்சள், வெள்ளை நிறமாகவும் காணப்படுகிறது. வலது புறத்தில் உள்ள புகைப்படத்தில் மூளையின் நடுவில் கிடைமட்ட குறுக்குவெட்டு தோற்றம் காட்டப்பட்டுள்ளது. இப்படத்தில் பெருமூளைப் புறணியையும் (மடிப்புகள் நிறைந்த பகுதி) வெண்பொருளையும் காணலாம். கோடிக்கணக்கான மயலின் உடைய நரம்பிழைகள் (myelinated fibre) வெண்பொருளையும், பெருமூளைப் புறணியையும் இணைக்கின்றன. 20 வயதான ஆணின் மூளையில் உள்ள மயலின் உடைய நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 176,000 கிலோமீட்டர். அதே வயதில் பெண்ணின் மூளையில் உள்ள மயலின் உடைய நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 149,000 கிலோமீட்டர்.

மூளையின் மேல் பகுதியில், மடிப்புகளை உடைய பெருமூளைப் புறணிப் பகுதி, இரண்டு அரைக் கோளங்களாக அமைந்திருப்பதால், அவை பெருமூளை அரைக்கோளங்கள் (cerebral hemispheres) என்று அறியப்படுகின்றன. இப்பகுதியே மூளையின் பெரிய பகுதி. பெருமூளை அரைக்கோளங்களுக்குக் கீழே அவற்றை இணைத்தவாறு அமைந்துள்ள தண்டுப் பகுதி மூளைத்தண்டு என்று அழைக்கப்படுகிறது. மூளையின் பின்பகுதியில், பெருமூளைப் புறணிக்கு கீழே, மூளைத்தண்டிற்கு பின்பகுதியில் உள்ள பகுதி சிறுமூளை (cerebellum) என்று அறியப்படுகிறது. இப்பகுதியில் கிடைவாக்கில் வரிவரியான பள்ளம் போன்ற அமைப்பு உள்ளமையால், மூளையின் மற்ற பகுதிகளை விட தோற்றத்தில் மாறுபட்டதாக காணப்படுகிறது. மற்ற பாலூட்டி இனங்களிலும் காணப்படும் சிறுமூளை, மூளையின் சிறிய பகுதிகளில் ஒன்று. மேலும், பொதுவான விதியாக ஓர் உயிரினத்தின் சிறுமூளை எவ்வளவு சிறிதாக உள்ளதோ, அதே அளவு அதன் பெருமூளைப் புறணி பகுதி குறைந்த மடிப்புகளை கொண்டதாக இருக்கும். [[எலி], சுண்டெலியின் பெருமூளைப் புறணி பகுதி மடிப்புக்களே இன்றி வழுவழுப்பான பகுதியாக இருப்பது இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக அமையும். பாலூட்டிகளில் மிகப்பெரியதான திமிங்கலமும், ஓங்கிலும் (dolphin) மனிதனை விட மிக அதிகமான மடிப்புகளைப் பெருமூளைப் புறணிப் பகுதியில் கொண்டுள்ளன.

மனித மூளையின் சிறப்பு வேறுபாடு மிகப் பெரிய அளவிலான பெருமூளைப் புறணிப் பகுதியாகும். மனிதனில் மிகப்பெரிதாக இருப்பதால் அது மூளையின் ஏனைய பகுதிகளை முழுவதும் மறைத்தவாறு காணப்படுகிறது. மனிதனின் சிறுமூளை மற்ற பாலூட்டிகளை விட அளவில் பெரியது. மனிதனின் பெருமூளைப் புறணி அளவில் மட்டுமல்லாது மூளையின் செயல் பாட்டிலும் பெரும் பங்கு வகிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு எலியின் பெருமூளைப் புறணிப் பகுதி அறுவை முறையில் அகற்றப்பட்ட நிலையிலும், அவ்வுயிரினத்தால் நடக்கவும், உண்ணவும், வெளிப்புற மாற்றங்களை உணரவும் இயலும். ஆனால் பெருமூளைப் புறணி பாதிப்படைந்த நிலையில் உள்ள ஓர் மனிதன், நிரந்தர ஆழ்மயக்க (coma) நிலைக்கு உட்படுவான்.

பெருமூளைப் புறணி தோராயமாக ஈடான வலது-இடது அரைக் கோளங்களாக பிரிக்கப்படுகிறது.உடற்கூறு வல்லுநர்கள் ஒவ்வொரு அரைக் கோளத்தையும் நான்கு மடல்களாக பிரிக்கின்றனர். அவையாவன, முன் மடல் (frontal lobe), சுவர் மடல் (parietal lobe), பக்க மடல் (temporal lobe), மற்றும் பிடரி மடல் (occipital lobe). இப்பிரிவுகளின் பெயர்கள் அப்பிரிவுகளின் அருகில் இருக்கும் மண்டையோட்டு எலும்புகளின் பெயருக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பெருமூளைப் புறணி பகுதி, ஓர் அகலமான பெரிய நரம்பணு இழைய விரிப்பை பல மடிப்புகளாக மடிப்பதன் மூலம் சுருக்கி குறுகிய மண்டையோட்டினுள் வைத்தது போன்ற வடிவத்தையுடையது. ஒவ்வொரு பெருமூளைப் புறணி அரைக்கோளத்தில் உள்ள நரம்பணு இழையத்தை மடிப்புகளை அகற்றி விரித்தால் அவற்றின் பரப்பளவு சுமார் 1.3 சதுர அடியாகும். உடற்கூறு வல்லுநர்கள் இத்தகைய மடிப்புகளால் ஏற்படும் பள்ளத்தை வரிப்பள்ளம் (sulcus) எனவும், ஒவ்வொரு வரிப்பள்ளத்துக்கும் இடையே உள்ள வழுவழுப்பான பகுதியை மடிமேடு (gyrus) எனவும் குறிப்பிடுகின்றனர். பொதுவாக எல்லா மனிதர்களின் மடிப்புகளும் ஏறத்தாழ ஒரே வடிவத்தைக் கொண்டிருப்பினும், வேறுபாடுகளை அறியத்தக்க அளவில் அவை வடிவத்திலும், மதிப்புகளின் அமைவிடத்திலும் சில மாறுதல்களைக் கொண்டு தனித்தன்மையுடன் விளங்குகின்றன. இருப்பினும், சில பெரிய மடிப்புகளை எல்லா மாந்தரிடமும் காண இயலும்.

பெருமூளைப் புறணியின் வெவ்வேறு பகுதிகள், வெவ்வேறான புலனறிவுத் திறன்களை (எ.கா, பார்த்தல், கேட்டல், உணர்தல்) கற்று ஆளும் திறனை பெற்றுள்ளன. இதனை பல்வேறு வழிகளின் மூலம் உறுதிப்படுத்த இயலும்: மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதி சேதமடைதல், ஒரு குறிப்பிட்ட புலனை மட்டுமே பாதித்தல், காந்த ஒத்ததிர்வு வரைவு (magnetic resonance imaging) நுட்பத்தின் சிறப்பு வரைவு முறையான வினைசார் காந்த ஒத்ததிர்வு வரைவு (functional magnetic resonance imaging அல்லது fMRI) மூலம் ஓர் குறிப்பிட்ட புலனையும் அதனை ஆளும் மூளையின் குறிப்பிட்ட பகுதியையும் அறிதல், பெருமூளைப் புறணியின் இழைய கட்டமைப்பை ஆராய்தல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. உடற்கூறு வல்லுனர்களின் கருத்துப்படி நுண்ணோக்கி துணை கொண்டு பெருமூளைப் புறணி இழையத்தை சுமார் 6 அடுக்குகளாக பிரிக்க இயலும். ஆயினும், பெருமூளையின் அனைத்து இடங்களிலும் இவ்வடுக்குகளை பிரித்துக் காண இயலாது. பல உடற்கூறு வல்லுனர்கள் புறணியில் உள்ள இவ்வடுக்குகளை வரைபடமாக குறித்துள்ளனர். இவர்களில் முதன்மையானவராக அறியப்படும் பிராட்மேன் மூளையின் பல்வேறு பாகங்களை 52 பிரிவுகளாக குறித்துள்ளார். (பின்னாளில் உடற்கூறு வல்லுநர்கள் அதனை மேலும் பல உட்பிரிவுகளாக பிரித்துள்ளனர்).

இடவிளக்கவியல்
இயக்கப் புறணி

முதன்மை இயக்கப் புறணி (primary motor cortex) என்ற பட்டையான நரம்பு இழையம் படத்தில் காட்டியுள்ளபடி நடு வரிப்பள்ளத்தின் (central sulcus) முன்புற ஓரத்தில் அமைந்துள்ள ஒரு இயக்கப் புறணி (motor cortex) ஆகும். இயக்கப் புறணிகள் உடம்பில் உள்ள, மனிதனின் விருப்பத்துக்கேற்ப இயங்கக் கூடிய தசைகளுக்கு ஆணைகளை அனுப்பி கட்டுப்படுத்தும் பகுதிகளாகும். வலது புறத்தில் உள்ள வரைபடம் மூலம் மூளையின் இயக்கப் புறணிகளில் ஒன்றான முதன்மை இயக்கப் புறணியில், உடம்பில் உள்ள பாகங்களின் இயக்க கட்டுப்பாட்டு பகுதிகளை வரிசை முறையே ஒழுங்கு படுத்தி இருப்பதை அறிய முடிகிறது. அதாவது, முதலில் கால் பாதம், அதை தொடர்ந்து கால்கள், தொடை, அடிவயிறு என்று உடம்பில் பாகங்கள் எவ்வரிசையில் அமைந்துள்ளனவோ, அதே வரிசையில் மூளையிலும் அவற்றின் கட்டுப்பாட்டு பகுதிகள் அமைக்கப் பட்டுள்ளன. புறணியின் ஒரு பகுதியை மின்கிளர்ச்சியூட்டினால், அப்பகுதி கட்டுப்படுத்தும் உடல் உறுப்பின் தசையில் இறுக்கம் ஏற்படுவதையும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். ஆயினும், ஒவ்வொரு உறுப்பும் வெவ்வேறு அளவு புறணி நரம்பிழையத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக,மனிதனின் தலையில் உள்ள உறுப்புகளை கட்டுப்படுத்தும் புறணி நரம்பிழையம், முதுகினை கட்டுப்படுத்தும் புறணி நரம்பிழையத்தை விட மூன்று மடங்கு அளவில் பெரிது. எந்த அளவு ஒரு உடல் உறுப்பினை கட்டுப்படுத்தும் புறணி நரம்பிழையம் செரிவுமிக்கதாக (பெரிய அளவினை உடையதாக) அமைந்துள்ளதோ, அதே அளவு அவ்வுறுப்பின் இயக்க கட்டுப்பாடும், புலன் பாகுபடுத்தி அறியும் திறனும் அமையும். இக்காரணத்தால், மனிதனின் உதடு, நாக்கு, விரல்கள், முக தசைகள் ஆகிய அவயங்கள் சிறிதாக இருப்பினும் பல நுண்ணிய செயல்பாடுகளை ஆற்றுவதால் ( எ.கா, நாக்கு,உதடு - பேசுதல்) அவற்றைக் குறிக்கும் புறணி நரம்பிழையத்தின் அளவு பெரிதாக அமைந்துள்ளது.

பார்வைப் புறணி
மனிதனின் பார்வைக்கான புறணி நரம்பிழைய அமைப்புகள், கண்ணின் பின்புறம் அமைந்துள்ள விழித்திரையின் (retina) அமைப்பினை ஒத்துள்ளன. மனிதனின் கண்ணை வந்தடையும் ஒளியினை சமிக்கைகளாக மாற்றும் விழித்திரையின் ஒவ்வொரு நரம்பணுவும், இப்பகுதியில் சில புறணி நரம்பணுக்களால் குறிக்கப்படுகின்றன. அதிலும், விழித்திரையின் நடுவில் உள்ள நரம்பணுக்களுக்கு (பார்வையின் நடுவில் இருக்கும் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில்) விழித்திரையின் ஓரத்தில் உள்ள நரம்பணுக்களை விட அதிக அளவு பார்வை புறணி நரம்பணுக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பெருமூளைப் புறணியில் உள்ள பார்வைப் புறணியில் (visual cortex) விழித்திரையினில் விழும் ஒரு காட்சியின் தோற்றங்களை பல்வேறு கோணங்களில் ஆராய நூற்றுக்கணக்கான வெவ்வேறு விழித்திரை ஒப்புருவ வரைவுகள் (retinotopic maps) உள்ளன. இவற்றின் மூலம் ஒரு தோற்றம், ஒரே நேரத்தில் பல கோணங்களில் ஆராயப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப் படுகிறது. முதன்மைப் பார்வைப் புறணி (primary visual cortex) (பிராட்மேன் வகைப்பாட்டில் 17வது பகுதி), கண்ணில் இருந்து வரும் நரம்பு சமிக்கைகளை முன்மூளை உள்ளறை (thalamus) வழியே நேரடியாகப் பெறுகிறது. இப்பகுதி பெறப்பட்ட தோற்ற சமிக்கைகளில் உள்ள முக்கிய சிறப்பியல்புகளை (visual feature) எளிதாக பிரித்தெடுக்க வல்லது. முன்மூளை உள்ளறை முன்மூளையில் உள்ள கோள வடிவிலான, சாம்பல் நிற பொருளாலான, இரண்டு பெரிய அறைகளை குறிக்கும். இவை பெருமூளைப் புறணிக்கு புலன்களில் இருந்து வரும் சமிக்கைகளை தம் வழியே அனுப்புகின்றன. காட்சியில் இருந்து பொருளின் நிறம், இயக்கம், வேகம், வடிவம் ஆகியவற்றை முதன்மைப் பார்வைப் புறணிக்கு அடுத்து ஆராயும் பார்வை புறணிகள் கண்டறிகின்றன.

கேட்டல் புறணி
கேட்டல் புலன் பகுதி, இடமகன்ற தொனியொழுங்கு முறையில் அமைக்கப்பட்ட ஒப்பு வரைவுகளைக் (tonotopic maps) கொண்டது. இடமகன்ற தொனியொழுங்கு முறை என்பது மனிதன் கேட்கும் ஒவ்வொரு மாறுபட்ட தொனியும் (ஒலி அதிர்வெண்ணும்), கேட்டல் புறணியின் வெவ்வேறு இடத்தை கிளர்ச்சி அடையச் செய்தல் ஆகும். சுருக்கமாக, தொனியின் அதிர்வெண்ணைக் கொண்டு, இடமகன்ற வெளியில் ஒழுங்கு படுத்துதல் என்ற பொருள்படும். கேட்டல் புறணியின் பல்வேறு பகுதிகளில் நிகழும் கிளர்ச்சிகளின் மொத்தக் கூட்டு தரும் இணைவுப் பொருத்தம் (combination) ஒரு சொல்லை உருவாக்கும். ஒலிகள் அவை தரும் அதிர்வெண்ணை (அதாவது, உச்ச சுருதி அல்லது தாழ்ந்த சுருதி) கொண்டே பிரித்துணரப் படுகின்றன. பார்வை அமையம் (visual system) போன்றே, கேட்டல் பகுதியிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடமகன்ற தொனியொழுங்கு முறையில் அமைக்கப்பட்ட புறணி ஒப்பு வரைவுகள் (tonotopic cortical maps) உள்ளன. ஒவ்வொரு ஒப்பு வரைவும் வெவ்வேறு வகையில் ஒலியினை ஆராய விழைகின்றன.

வினை இடமறிதல்
வினை இடமறிதல் என்பது மூளையின் ஒவ்வொரு கட்டுப்பாட்டு பகுதியையும், அது கட்டுப்படுத்தும் உறுப்பின் செயல்பாடுகளையும் கண்டறிந்து அவற்றை ஒன்றுடன் ஒன்று பொருத்துதல் எனலாம். பெருமூளையின் ஒவ்வொரு அரைக் கோளமும், உடம்பின் ஒரு பாகத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும், வலது பக்க மூளை உடம்பின் இடப்பக்க உறுப்புகளையும், இடப்பக்க மூளை உடம்பின் வலப்பக்க உறுப்புகளையும் கட்டுப்படுத்துவது குறிப்பிடத்தக்கது. இதே முறையிலேயே, மூளைக்கும், முதுகுத் தண்டுக்கும் இடையே உள்ள இயக்க இணைப்புகளும் (motor connections), புலன் இணைப்புகளும் (sensory connections), மூளைத்தண்டின் நடுப்பகுதியில், வலது இடதாகவும், இடது வலமாகவும் இடம் மாறுகின்றன.
இதயம்
இதயம் (மாற்றுச்சொற்கள்: நெஞ்சு, நெஞ்சாங்குலை ) என்பது முதுகெலும்பிகளில் காணப்படும் ஒரு தசையாலான ஓர் உறுப்பாகும். இதன் வேலை இரத்தத்தைக் குருதிக்குழாய்களின் வழியாக சுழற்சி முறையில் சீரான வேகத்தில் உடல் முழுதும் செலுத்துவது ஆகும். இதயமானது இதயத்தசை என்னும் சிறப்புத் தசையால் ஆனது.

இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு வரும் குழாய்கள் சிரைகள் எனவும் இதயத்தில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள் தமனிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இதயமானது பெரிகார்டியல் நீர்மம் என்னும் நீர்மத்தினால் சூழப்பட்டுள்ளது. இந்நீர்மமானது இதயத்தை அதிர்ச்சிகளில் இருந்தும் இதயம் சுருங்கி விரியும் போது மற்ற பாகங்களுடன் உராய்வதைத் தடுக்கவும் உதவுகிறது.

அமைப்பு
மனித உடலில் இதயமானது மார்பின் இடதுப்பகுதியில் மார்பு எலும்புகளுக்குப் பின் பகுதியில் அமைந்துள்ளது. இடப்பகுதியில் இடது நுரையீரலானது வலது நுரையீரலை விட சிறியதாக இருக்கிறது.

வலது இதயத்தின் பணியானது அசுத்த இரத்தத்தைச் சேகரிப்பது ஆகும். அசுத்த இரத்தமானது வலது ஆரிக்கிளை அடைகிறது. பின் இது வலது வெண்ட்டிரிக்கிள் வழியாக குருதி நுரையீரல்களுக்கு அனுப்பப் படுகிறது. இங்கு கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றப்பட்டு இரத்தத்தில் ஆக்ஸிஜன் கலக்கிறது.

இதயத்தின் இடப்புறமானது தூய இரத்தத்தை பெறுகிறது. இது இடது ஆரிக்கிளை அடைகிறது. இங்கிருந்து குருதியானது இடது வெண்ட்டிரிக்கிளை அடைந்து அங்கிருந்து உடல் முழுவதற்கும் அனுப்பப் படுகிறது.

இதயத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள வெண்ட்டிரிக்கிள்கள் மேலே உள்ள ஆரிக்கிள்களை விட தடிப்பாக இருக்கின்றன. அதிலும் இடது வெண்ட்டிரிக்கிளானது இரத்தத்தை உடல் முழுவதும் செலுத்த அதிக வேகம் தேவைப்படுவதால் வலது வெண்ட்டிரிக்கிளை விட தடிப்பாக உள்ளது.

வலது இதயம்
இதயத்தில் உள்ள வலது ஆரிக்கிளும் வலது வெண்ட்டிரிக்கிளும் கூட்டாகச் சேர்த்து வலது இதயம் என்று அழைக்கப்படுகிறது. சில நேரங்களில் வலது ஆரிக்கிள், வலது வெண்ட்டிரிக்கிள், பல்மோனரி டிரங்க் ஆகிய மூன்றும் சேர்த்து வலது இதயம் என்று குறிக்கப்படுவது உண்டு.

கார்பன்-டை-ஆக்ஸைடு நிறைந்த குருதியானது உடலின் பல பகுதிகளில் இருந்தும் வலது ஆரிக்கிளை அடைகிறது. பின் இது மூவிதழ் வால்வு வழியாக வலது வெண்ட்டிரிக்கிளுக்கு அனுப்பப் படுகிறது. வலது வெண்ட்டிரிக்கிள் பல்மோனரி வால்வு வழியாக குருதியை பல்மோனரி தமனிக்குள் செலுத்துகிறது.

வலது ஏட்ரியம்
வலது ஏட்ரியம் (முந்தைய வழக்கு: வலது ஆரிக்கிள்) மனித இதயத்தில் உள்ள நான்கு அறைகளில் (இரு ஏட்ரியங்கள், இரு வெண்ட்டிரிக்கிள்கள்) ஒன்று ஆகும். இது இரத்தத்தை மேற்பெருஞ்சிரை, கீழ்ப்பெருஞ்சிரை, இதயச்சிரை ஆகியவற்றில் இருந்து பெறுகிறது. பின் குருதியானது மூவிதழ் வால்வு வழியாக வலது வெண்ட்டிரிக்கிளுக்கு அனுப்பப் படுகிறது.

வலது வெண்ட்டிரிக்கிள்
வலது வெண்ட்டிரிக்கிள் மனித இதயத்தில் உள்ள நான்கு அறைகளில் (இரு ஏட்ரியங்கள், இரு வெண்ட்டிரிக்கிள்கள்) ஒன்று ஆகும். இது ஆக்ஸிஜன் அற்ற இரத்தத்தை மூவிதழ் வால்வு வழியாக வலது ஏட்ரியத்தில் இருந்து பெறுகிறது. பின்னர் நுரையீரல் வால்வு வழியே நுரையீரல் தமனிக்கு அனுப்புகிறது.

இடது இதயம்
இதயத்தில் உள்ள இடது ஆரிக்கிளும் இடது வெண்ட்டிரிக்கிளும் கூட்டாகச் சேர்த்து இடது இதயம் என்று அழைக்கப்படுகிறது. சில நேரங்களில் இடது ஆரிக்கிள், இடது வெண்ட்டிரிக்கிள், மகாதமனி ஆகிய மூன்றும் சேர்த்து இடது இதயம் என்று குறிக்கப்படுவதும் உண்டு.

இடது ஆரிக்கிள் நுரையீரலில் இருந்து வரும் ஆக்சிஜனேற்றப்பட்ட இரத்தத்தை பல்மோனரி சிரைகளின் வழியாகப்பெறுகிறது. பின் குருதி மிட்ரல் வால்வு வழியாய் இடது வெண்ட்டிரிக்களுக்கு அனுப்பப்படுகிறது. இடது வெண்ட்டிரிக்கிள் மகாதமனி வால்வு வழியாக இரத்தத்தை மகாதமனிக்குள் செலுத்துகிறது.

இடது ஏட்ரியம்
இடது ஏட்ரியம் மனித இதயத்தின் நான்கு அறைகளில் ஒன்றாகும். இது ஆக்சிஜன் நிறைந்த இரத்தத்தை நுரையீரல் சிரையில் இருந்து பெறுகிறது. பின் இதனை இடது வெண்ட்டிரிக்கிளுக்கு அனுப்புகிறது.

இடது வெண்ட்டிரிக்கிள்
இடது வெண்ட்டிரிக்கிள் மனித இதயத்தில் உள்ள நான்கு அறைகளில் (இரு ஏட்ரியங்கள், இரு வெண்ட்டிரிக்கிள்கள்) ஒன்று ஆகும். இது ஆக்சிஜன் நிறைந்த இரத்தத்தை இடது ஏட்ரியத்தில் இருந்து மிட்ரல் வால்வு வழியாகப் பெற்று அதனை மகாதமனி வால்வு வழியாக மகாதமனிக்கு அனுப்புகிறது.

இடது வெண்ட்டிரிக்கிள் உடல் முழுவதும் இரத்தத்தை செலுத்த வேண்டியிருப்பதால் வலது வெண்ட்டிரிக்கிளை விட இதன் சுவர்கள் மூன்றில் இருந்து ஆறு மடங்கு வரை தடிமனாக இருக்கின்றன
சிறுநீரகம்
சிறுநீரகம் என்பது யூரியா போன்ற கழிவுப் பொருட்களைக் குருதியில் இருந்து பிரித்து, நீருடன் சேர்த்துச் சிறுநீராக வெளியேற்ற உதவும் ஒரு உடல் உறுப்பு ஆகும். சிறுநீரகம், அது தொடர்பான நோய்கள் ஆகியவை பற்றி ஆய்வு செய்யும் மருத்துவத் துறை சிறுநீரகவியல் எனப்படும்.

மனிதர்களில், சிறுநீரகம், வயிற்றின் பின்புறத்தில் காணப்படுகின்றது. இவை முள்ளந்தண்டின் இரு பக்கங்களிலும், பக்கத்துக்கு ஒன்றாகக் காணப்படுகின்றன. வலது சிறுநீரகம், ஈரலுக்குச் சற்றுக் கீழேயும், இடது சிறுநீரகம் திரைத்தசைக்குக் கீழே மண்ணீரலுக்கு அருகிலும் அமைந்துள்ளன. ஒவ்வொரு சிறுநீரகத்தின் மேலும் ஒரு அண்ணீரகச் சுரப்பி (அட்ரீனல் சுரப்பி) அமைந்துள்ளது. ஈரலின் அமைவினால் வயிற்றுக்குழி சமச்சீரற்றதாக இருப்பதால், அதனுள் உள்ள வலது சிறுநீரகம் இடது சிறுநீரகத்திலும் சற்றுத் தாழ்வாக அமைந்துள்ளது.
சிறுகுடல்
உயிரியலில் சிறுகுடல் (small intestine) என்பது, இரையகக் குடற்பாதையின் ஒரு பகுதியாகும். இது இரைப்பைக்கும், பெருங்குடலுக்கும் இடையில் அமைந்துள்ளது. இது, முன்சிறுகுடல், நடுச்சிறுகுடல், பின்சிறுகுடல் என மூன்று பகுதிகளாக உள்ளது. இங்குதான் பெரும்பாலான சமிபாடு நிகழ்கிறது. சிறுகுடலின் உட் சுவரிலிருந்து நீட்டிக்கொண்டிருக்கும் விரலிகள் என்னும் அமைப்புக்கள் ஊட்டப் பொருள்களை உறிஞ்சி குருதிக்குள் அனுப்புகின்றன. ஐந்து வயதுக்கு மேற்பட்ட மனிதரில் சிறுகுடலின் நீளம் 4 மீட்டருக்கும் 7 மீட்டருக்கும் இடையில் காணப்படும்.

சிறுகுடலின் பகுதிகள் பின்வருமாறு அமைந்திருக்கும்:
* முன்சிறுகுடல்: 26 சமீ (9.84 அங்) நீளம்.
* நடுச்சிறுகுடல்: 2.5 மீ (8.2 அடி) நீளம்.
* பின்சிறுகுடல்: 3.5 மீ (11.5 அடி) நீளம்.

சிறுகுடல், பெருங்குடலிலும் 4 - 5 மடங்கு நீளம் கொண்டு பெரியதாக இருந்தாலும், இதன் விட்டம் சிறியதாக இருப்பதால் சிறுகுடல் என்று அழைக்கப்படுகிறது. சராசரியாக, வளர்ந்த மனிதரில் சிறுகுடல் 2.5-3 சமீ விட்டம் கொண்டதாகவும், பெருங்குடல் 7.6 சமீ விட்டம் கொண்டதாகவும் இருக்கின்றன.
பெருங்குடல்
பெருங்குடல் திண்மக் கழிவுகளுக்கான ஒரு சேமிப்புக் குழாய் ஆகும். பெருங்குடலின் முக்கிய செயற்பாடு மலத்தில் இருந்து நீர், உப்புக்கள் என்பவற்றைப் பிரித்து எடுப்பதாகும். பாலூட்டிகளில் இது ஏறு பெருங்குடல், இறங்கு பெருங்குடல், குறுக்குப் பெருங்குடல், நெளிபெருங்குடல் என நான்கு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. பெருங்குடல்வாயில் இருந்து இறங்கு பெருங்குடல் தொடக்கம் வரையுள்ள பகுதி வலது பெருங்குடல் எனவும் மீதி இடது பெருங்குடல் எனவும் அழைக்கப்படுவது உண்டு

நன்றி---http://www.panippulam.com

No comments:

Post a Comment