Wednesday, July 31, 2013

மாதவிடாய் பிரச்சனைகளுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவம்!

மாதவிடாய் பிரச்னைகளுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்தும்!

இன்றைய பரபரப்பான உலகத்தில் பெண்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல பிரச்னைகளை சமாளிக்க வேண்டியுள்ளது. உடல் பிரச்னைகள், மனதை பாதிப்பதும், மன அழுத்தம் உடல் நிலையை பாதிப்பதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கிறது. உடல், மனம் இரண்டும் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் முக்கியமான ஒன்று மாதவிடாய் பிரச்னை. இது எதனால் ஏற்படுகிறது, இந்தப் பிரச்னையை யோகா மூலம் எப்படித் தீர்ப்பது என்பது போன்ற சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறவர் யோகா மற்றும் இயற்கை மருத்துவர் டாக்டர் ஹிமேஸ்வரி.

இன்றைய பெண்களின் வேலை பெரும்பாலும் உட்கார்ந்தே செய்ய வேண்டிய வேலையாகவே இருக்கிறது. வேலைக்குப் போகும் பெண்களில் அதிகமானோர் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்திருக்க வேண்டி இருக்கிறது. இதேபோல் வீட்டில் இருக்கும் பெண்களும் பெரும்பாலும், டி.வி. முன்னால்தான் உட்கார்ந்திருக்கிறார்கள். இதனால் உடல் தசைகளின் இயக்கம் குறைந்து விடுகிறது.

தவிர, நம்மில் பலர் பசியைத் தணிக்கவோ, அல்லது போரடிக்கிறது என்றோ ‘ஜங்க் ஃபுட்ஸ்’ என்கிற ரெடிமேட் வகை உணவுகைள சாப்பிடப் பழகிவிட்டார்கள். முன் காலத்தில் இடுப்புச் சதைகளுக்கு வலிவு தரும். உளுந்து சேர்ந்த உணவுகளை அதிகமாக சாப்பிட்டார்கள். தற்போதோ இடுப்பிலும், உடம்பிலும் தசை போடும் இனிப்பு, ஐஸ்கிரீம், சிப்ஸ் போன்ற வறுத்த, பொரித்த உணவுகள் தான். இதனால் இடுப்புப் பகுதியிலும், கர்ப்பப்பையிலும் கொழுப்பு தேங்கி விடுகிறது. இதைக் கரைப்பதற்கென்று நாம் தனியாக எந்த வேலையையும் செய்வதில்லை.

முன்பு ஆட்டுக்கல், அம்மிக்கல் போன்றவற்றில் இடுப்பை அசைத்துச் செய்யும் வேலைகள் அதிகமாக இருந்தது. இப்போதோ அந்த வேலைகளை, சுவிட்சைத் தட்டிவிட்டால், கிரைண்டர், மிக்ஸி போன்ற சாதனங்கள் செய்து விடுகிறதே! இதனால் சத்துக்கள் எல்லாம் இடுப்பில் தேங்கிவிடுகிறது. இதேபோல் சினைப்பையில் தேங்கும் நீர், கொழுப்பு காரணமாக நீர் கட்டிகள், கொழுப்பு கட்டிகள் உருவாகிறது. இதனால் ஹார்மோன் சுரப்பு தடைபட்டு, மாதவிடாய் பிரச்னைகள் வருகின்றன.

இன்னொரு விஷயமும் தெரியுமா? நாம் அழுகையை அடக்கும் போது டென்ஷன் அதிகமாகி, இடுப்புப் பகுதி தசைகளில் இறுக்கம் ஏற்படுகிறது. இந்த இறுக்கம் கர்பப்பையை பாதிக்கிறது. இதைத்தான் மருத்துவ ரீதியாக when we don’t cry. the uterus will cry என்று சொல்வதுண்டு.

சரி, காரணம் தெரிந்து விட்டது. இந்த பிரச்னைகள் வராமல் தடுக்கவும், வந்தால் சரி செய்யவும் என்ன செய்ய வேண்டும்?

இடுப்புப் பகுதியில், இருக்கும் சக்கரத்திற்குப் பெயர் ‘ஸ்வாதிஷ்டானம்’. இந்த சக்கர சக்திதான், இடுப்புப் பகுதியின் இயக்கத்தையும் மனவலிமையையும் சீராக வைக்கிறது.

ஸ்வாதிஷ்டான சக்கர சக்தியை பலப்படுத்தும், மர்ஜரியாசனம், புஜங்காசனம், தனுராசனம், அர்த்தசலபாசனம், பச்சி மோத்தாசனம் போன்ற யோகாசனங்கள் இடுப்புப் பகுதியைச் சீராக இயக்க வைத்து கர்ப்பப்பையை பலப்படுத்துகின்றன. அடி வயிற்றில் உள்ள கொழுப்பு கரையவும் உதவுகின்றன!.

இந்த ஆசனங்களை முதலில் 10 முறை செய்யவேண்டும். ஆனால், ஒரு பயிற்சி பெற்ற ஆசிரியரின் மேற்பார்வையில்தான் செய்யவேண்டும்.

இதற்கான உணவு முறை என்ன?

தினமும், ஏதாவது ஒரு வேளை, சமைத்த உணவிற்கு பதிலாக நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்களை சாப்பிட்டால், ஸ்வாதிஷ்டானத்தில் சக்தி அதிகமாகும். இந்த சக்கரம், நீர் ஆதாரத்தைக் கொண்டதால் நீர்ச்சத்து சேரும் போது சக்தி அதிகரிக்கிறது. நார்ச்சத்தோ, கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.

வாரத்தில் இரண்டு நாளாவது உளுந்து மாவு சேர்ந்த (புளிக்காத) உணவைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். மாதவிடாய் நேரங்களில் உளுந்துக் களியை தினமும் சாப்பிடலாம். இந்த உளுந்து உணவுகள், எலும்பை பலப்படுத்தும். அதே சமயத்தில் வாயு, மற்றும் எண்ணெய், சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

பச்சிமோத்தாசனம் : படத்தில் உள்ளது போல் முகத்தை, முழங்காலில் பதித்து, மூச்சை மெதுவாக இழுத்து, அடிவயிற்றிலும், பின்புற தசைகளிலும் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

அர்த்த சலபாசனம் : குப்புறப் படுத்து, காலை உயர்த்தி, பக்கவாட்டில் கைகளை நீட்டி, வயிறு, இடுப்பு, இதயம் இவைகளில் மூச்சு சீராகச் சென்று வருவதை கவனிக்க வேண்டும்.

புஜங்காசனம் : குப்புறப் படுத்து, கைகளைத் தரையில் ஊன்றி, உடலையும், தலையையும் நிமிர்த்தி, முதுகுத் தண்டு ரிலாக்ஸ் ஆவதை உணர்ந்து கவனத்தைச் செலுத்த வேண்டும்.

தனுர் ஆசனம் : குப்புறப் படுத்து, கால்களை படத்தில் உள்ளது போல் செய்து மூச்சை மெதுவாக இழுத்து, வயிற்றிலும் முதுகிலும் தசை விரிவடைவதை கவனிக்க வேண்டும்.

மர்ஜரியாசனம்: முட்டிபோட்டு, இரண்டு கைகளையும்
தரையில் ஊன்றி மூச்சை கவனித்து முதுகுத் தண்டில்,
இடுப்புப் பகுதியில் கவனத்தைச் செலுத்த வேண்டும்

No comments:

Post a Comment