Saturday, July 20, 2013

சூரிய சந்திர கிரகணம் - விஞ்ஞான ஆன்மீக விளக்கங்கள்





சந்திர கிரகணத்தின் விவரணப் படம்



சூரிய கிரகணத்தின் விவரணம் படம்

கிரகணம் என்பது ஒரு வானவியல் நிகழ்வு. வானில் பல பொருட்கள் சுழன்று (வலம் வந்து) கொண்டிருக்கின்றன. அவற்றுள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியும் ஒன்று. இவற்றுள் நட்சத்திரங்கள் தானாக ஒளிர்வன. மற்றையவை தானாக ஒளிர்வதில்லை. ஆனால் நட்சத்திரங்களின் ஒளியைப் பெற்று மற்றையவை ஒளிர்வன போல் பிரகாசிக்கின்றன.



ஒளிரும் ஒரு பொருளை பார்க்கும் ஒருவருக்கு இடையில் இன்னொரு ஒளிராப் பொருள் நகரும்போது ஒளிரும் பொருளின் ஒரு பகுதியோ அல்லது முழுவதுமோ மறைக்கப்பெறுகின்றது. இது அப்பொருளின் பிரமாணத்தையும், அப்பொருள் ஊடறுத்து நகரும் தூரத்தையும் பொறுத்து அமையும்.

அதுபோல் ஒளிரும் ஒரு பொருளின் ஒளிபெற்று பிரகாசிக்கும் ஒரு பொருளுக்கிடையே இன்னொரு பொருள் நகரும்போது ஒளிக் கற்றைகள் தடுக்கப்பெறுவதால் பிரகாசிக்கும் பொருள் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ ஒளிபெறாது மறைக்கப்பெறுகின்றது. இதுவும் அப்பொருளின் பிரமாணத்தையும், அப்பொருள் ஊடறுத்து நகரும் தூரத்தையும் பொறுத்து அமையும்.


கிரகணம் எவ்வாறு நிகழ்கின்றது?
நாம் வாழும் பூமியானது ஆலயத்தைச் சுற்றி நாம் பிரதட்டை செய்வதுபோல் பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றது. பூமி தன்னைத் தானே சுற்ற ஒரு நாளும் சூரியனை ஒருமுறை சுற்ற ஒரு வருடமும் ஆகின்றது, பூமி தன்னைதானே சுற்றுவதால் பூமியில் இராப் பகல் தோன்றுகின்றது. சூரியனைச் சுற்றுவதால் பூமியில் பருவ காலங்கள் தோன்றுகின்றன.


அத்துடன் பூமியின் உப கிரகமான சந்திரனும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு பூமியையும் சுற்றி வருவதுடன் பூமியுடன் இணைந்து சூரியனையும் சுற்றிவருகின்றது. சந்திரன் பூமியச் சுற்றுவதனால் பூமியில் அமாவாசை, பௌர்ணமி போன்ற திதிகள் தோன்றுகின்றன.


இவ்வாறு சந்திரன் பூமியைச் சுற்றி வரும் போது 29 1/2 நாட்களுக்கு ஒருமுறை பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயும், சூரியனுக்கு எதிர் திசையிலும் வருகின்றது. அதனால் பூமியில் இருப்போருக்கு (சந்திரனில் சூரிய ஒளி விழாது) இருட்டாகஅமாவாசையாகவும் சூரிய ஒளிவெளிச்சம் பெற்று பிரகாசமாக பௌர்ணமியாகவும் சந்திரன் தோற்றமளிக்கின்றது. இதற்கான காரணம் சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் குறித்த தினங்களில் ஒரே நேர் கோட்டில் வருவதே.


பௌர்ணமி தினத்தில் பிரகாசமாக தோற்மளிக்க வேண்டிய சந்திரன் சில சமயங்களில் பூமியின் நிழலால் மறைக்கப்பட்டும், அமாவாசை தினத்தில் சூரியன் சந்திரனின் நிழலால் மறைக்கப்பட்டும் விடுகின்றது. இவ் நிகழ்வையே சந்திர, சூரிய கிரகணம் என்று அழைக்கின்றோம்.


சந்திரன் பூமியைச் சுற்றும் போது ஒழுங்கான வட்டப் பாதையில் சுற்றாது நீள் வட்டப் பாதையில் சுற்றுவதனால் சந்திரன் ஒரு காலப் பகுதியில் பூமிக்கு மிக அண்மையாகவும், வேறு காலங்களில் பூமிக்கு சேய்மையாகவும் அமைந்து விடுகின்றது. இதேபோல் பூமியும் நீள் வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றுவதால் பூமியும் சூரியனில் இருந்து வித்தியாசமான தூரங்களில் அமைந்து சுற்றி வருகின்றது. இது இயற்கையின் நியதி.


அனைத்து கோள்களும் சற்றே சாய்ந்த நிலையில் அதாவது பூமி, தன் அச்சில் 23 1/2 பாகை சாய்ந்தும். சூரியன் தன் அச்சில் 7 பாகை சாய்வாகவும் சுற்றுகிறது. சந்திரனும் கூட 5 பாகை சரிவாக பூமியைச் சுற்றுகிறது.


இந்த காலகதியில் பூமி, சூரியன் மற்றும் சந்திரன் இவை மூன்றும் எப்போதாவது, ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அப்படி அவை மூன்றும் நேர்கோட்டில் வரும்போது, ஏதாவது ஒன்று நம் பார்வையிலிருந்து மறைக்கப்படுகிறது. இதுதான் கிரகணம்என்று சொல்லப்படுகிறது. சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலவு நாளிலும் நிகழ்கின்றது. எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை.


மேலும் விளக்கமாக கூறுவதாயின்; இது ஒரு வானவியல் நிகழ்வு. வானில் பல பொருட்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவை நகர்ந்து செல்லும்போது சில சமயம் ஒன்றின் பாதையில் மற்றொன்று குறுக்கிட நேரிடலாம். அப்போது எமக்கு தெரிந்த அந்த வான்பொருள் நம் பார்வையிலிருந்து மறைக்கப்படும்.


இந்நிகழ்வு, சூரிய குடும்பத்துக்குள் நிகழும்போது இடையே வந்த வான் பொருளின் நிழல் மற்றைய வான் பொருளை ஒரு குக்கப்பெற்ற நேரத்திற்கு முழுமையாகவோ அல்லது பகுதியாக மறைத்து விடும். இந் நிகழ்வானது மறைக்கப்பெற்ற வான் பொருளின் பெயரை வைத்து, அதன் கிரகணம் என்று சொல்லப்படுகிறது. கிரகணம் என்பது சமஸ்கிருத சொல். இதனை நாம் சூரிய மறைப்பு, சந்திர/நிலா மறைப்பு என்றும் சொல்லலாம்.


பூமி தன் துணைக்கேளான சந்திரனுடன் இணைந்து கொண்டே சூரியனைச் சுற்றிக்கொண்டிருக்கிறது. சந்திரனும் தனது கோளான பூமியை 29 1/2 தினத்தில் சுற்றுகிறது. அது மட்டுமல்ல சூரியனும் கூட தனது தாய் வீடான பால்வழி மண்டலத்தை (Milky Way galaxy) தனது குடும்ப உறுப்பினர்களான கோள்கள், துணைக் கோள்கள், குள்ளக் கோள்கள், குயிப்பர் வளையம், ஊர்ட் மேகம், மற்றும் வால் மீன்கள் என தனது அனைத்தும் படை சூழ நொடிக்கு சுமார் 250 - 270 கி. மீ. வேகத்தில் சுற்றி வருகிறது. இந்த நிகழ்வு முடிய சுமார் 22.5 கோடி ஆண்டுகள் ஆகும். இதுவே ஒரு பிரபஞ்ச ஆண்டு என்றும் சொல்லப்படுகிறது.


அத்துடன் நாம் வாழும் சூரிய குடும்பம், பால்வழி மண்டலத்தில் ஒரு மணல் துகள் போன்று அமைந்துள்ளமையால் பால்வழி மண்டலத்தை 22 1/2 கோடி ஆண்டுகளில் ஒரு சுற்று சுற்றி முடிக்கிறது.


சந்திரன் தன் அச்சில் 5 பாகை சாய்வாக சுற்றுவதால், இவை மூன்றும் ஒரே நேர்கோடில் வரும் சாத்தியக் கூறு எல்லா அமாவாசை/முழுநிலா நாளிலும் ஏற்படுவது கிடையாது. எனவே எல்லா முழு நிலா நாளிலும் கிரகணம் ஏற்படுவதில்லை. அது போல் எல்லா அமாவாசை தினத்திலும் சூரிய கிரகணமும் உருவாவதில்லை.


சூரியனுடன் ஒப்பிடும்போது சந்திரன் மிகச் சிறியது. அதன் விட்டம் 384,400 கி. மீ. மட்டுமே. இதில் சூரியன் சந்திரனைவிட 400 மடங்கு பெரியது. அதைப் போல பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரம் பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தை விட 400 மடங்கு அதிகம். சூரியன் அளவில் பெரியதானாலும் தூரத்தில் இருப்பதனாலும்; சந்திரன் அளவில் சிறிதானாலும் கிட்டிய தூரத்தில் இருருப்பதனாலுமே பூமியிலிருந்து நாம் பார்க்கும்போது சூரியனிம், சந்திரனும் கிட்டத்தட்ட ஒரே அளவினதாக தென்படுகின்றன. மிகப் பெரிய சூரியனை மறைத்து முழுசூரிய கிரகணம் ஏற்படச் செய்வதும் இதனாலேதான்.


பொதுவாக ஒரு வருடத்தில் 2 - 5 சூரிய கிரகணமும், அதிகபட்சமாக 3 சந்திர கிரகணமும் ஏற்படலாம். சில சமயம். ஒரு சந்திர கிரகணம் கூட ஏற்படாமலும் போகலாம். ஆனால், ஒரு வருடத்தில் அதிகபட்சம் 7 கிரகணங்கள் தான் வரும். இதில் 4 சூரிய கிரகணமாகவும் 3 சந்திர கிரகணமாகவும் இருக்கலாம். முழு சூரிய கிரகணத்தின் மிக நீண்ட நேரம் என்பது 7.5 நிடங்கள் மட்டுமே.


எப்போதும் வட தென் துருவங்களில் பகுதி சூரிய கிரகணமே தெரியும் நில நடுக்கோட்டு (மத்திய தரைக்கோட்டிற்கு) அருகே கிரகணம் நிகழும் போதுதான் முழு சூரிய/ சந்திர கிரகணம் உண்டாகிறது. ஒரே மாதிரியான சூரிய கிரகண நிகழ்வுகள் (நேரம், வகை போன்றவை) 18 வருடம், 11 நாட்கள் (6,585.32 நாட்கள்) நிகழும் இதற்கு சாரோஸ் சுழற்சி என்று பெயர்.


பொதுவாக, கிரகணம் சூரிய உதயத்தில் தொடங்கி பூமியின் ஏதாவது ஒரு பாதியில் சூரியன் மறையும் போது முடிவடைகிறது. ஒரு வருடத்தில் பூமியில், எங்காவது இரு இடங்களில் கட்டாயம் சூரிய கிரகணம் நிகழும் இந்த கிரகணத்தில், கிரகண நிழலின் வேகம் 1,770 கி.மீ/ மணி நில நடுக்கோட்டுக்கு அருகில் ஆனால் துருவங்களில் கிரகண வேகம் பொதுவாக 8,046 கி. மீ/ மணி. முழு சூரிய கிரகணம் 1.5 வருடங்களுக்கு ஒருமுறை வருகிறது. சூரிய கிரகண பாதையின் அகலம் 269 கி. மீ. பகுதி சூரிய கிரகணம் பூமியின் மற்ற இடங்களுக்கு முழு கிரகண பாதை தாண்டி 4,828 கி. மீ. தூரம் வரை தெரியும்.


பூமிக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம்தான் கிரகண நேரத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணி. ஏனெனில், சந்திரன் பூமியை நீள் வட்டத்தில் சுற்றுவதால், சில சமயம் அண்மையிலும், சில சமயம் சேய்மையிலும் காணப்படும். சந்திரன் பூமியிலிருந்து வெகு தொலைவில் (சேய்மையில்) இருந்தால் அதன் சுற்று வேகம் மெதுவாக இருக்கும். எனவே, முழு மறைப்பு நேரத்தின் கால அளவும் இதனால் அதிகரிக்கும்.


கிரகணத்தின்போது அதன் நிழல் விழும் பகுதியின் கறுப்பு மற்றும் கருமை குறைவான பகுதிகளை முறையே, அம்பரா (Umbra), பெனும்பரா (Penumbera) என்று சொல்கின்றனர். சூரிய ஒளியே படாத பகுதி அம்பரா. சூரிய கதிர்சிதறல் படும் பகுதி பெனும்பரா. சூரிய உதயம்/ மறையும் சமயத்தில், சந்திர கிரகணத்தைப் பார்க்க நேரிட்டால், சூரியன், சந்திரன் இரண்டும் எதிரெதிர் திசையில் அற்புதமாய் தெரியும்.


அரிதான மிக இருண்ட சந்திர கிரகணம்..!
இந்த ஆண்டு ஜூன் 15 ஆம் நாள் ஏற்பட்ட முழு சந்திர கிரகணம் ஓர் அரிதான நிகழ்வு! ஏனெனில் இந்த கிரகணத்தின் போது, சந்திரன் பூமியின் மைய நிழலை ஒட்டி பயணித்தது. இது போலவே ஒரு முழு சந்திர கிரகணம் கி. பி. 2000 ஆண்டு, ஜுலை 16ல் உண்டானது. இனி இதனை ஒத்த முழு சந்திர கிரகணம் கி. பி. 2018, ஜுலை 27 ஆம் நாள்தான் வரும். இந்த கிரகணத்தை முழுமையாக உலகின் பாதி மக்கள் பார்த்து மகிழலாம். இது ஆபிரிக்கா, மத்திய ஆசியா முழுமைக்கும் தெரியும். தென் அமெரிக்கா, மேற்கு ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து இக்கிரகணம் தொடங்குகிறது.


முழு சூரிய கிரகணத்தின் போது, சூரியன் சந்திரனின் நிழலால் மறைக்கப்பட்டு கறுப்பாகத் தெரிவது போல, முழு சந்திர கிரகணத்தின் போது, சந்திரன் கறுப்பாக/ இருட்டாகத் தெரிவது இல்லை. சந்திரன் முழு கிரகணத்தின் போது காணாமல் ஓடிப் போவதும் இல்லை. சந்திரன் பூமியின் நிழல் வழியே நகரும்போது, பூமியின் வளிமண்டலம் மூலமாக, சந்திர மறைவுப் பிரதேசங்களில், சூரியனின் ஒளிக் கதிர்கள் பிரதிபலிக்கின்றன. இப்போது பூமியில் மட்டும் வளிமண்டலம் இல்லாது போயிருப்பின், சந்திரன் கறுப்பு நிலாவாக காட்சி அளித்திருக்கும்.


பூமியின் வளிமண்டலம்தான் அதில் பட்டு சந்திரனில் சிதறும் அகச் சிவப்பு ஒளித் துகள்கள்தான் முழு சந்திர கிரகணத்தின்போது அதனை சிவப்பான செம்பு நிலாவாகக் (Copper moon) காட்டுகிறது. இதுவேதான். சூரியன் உதிக்கும்/ மறையும்போதும், அதன் சிவப்பு வண்ணத் தூரிகை கொண்டு வான் மேகத்தில் சிவப்பு ஆரஞ்சு வண்ண ஓவியம் வரைவதன் காரணியும்.


பால்வழி மண்டலம்
நமது சூரிய குடும்ப தாய்வீடான பால்வழி மண்டலம், முழு சந்திர கிரகணத்தின் போது, முழு மறைப்பின் பின்னணியில் அதி அற்புதமாய் தெரியும். சரித்திரம் படைத்த முழு சந்திர கிரகண நிகழ்வுகளும் உண்டு. சந்திர கிரகணம் அரிதானதுதான் என்றாலும், முழு சூரிய கிரகணம் போல அவ்வளவு அரிதானது கிடையாது.


ஏனெனில் முழு சூரிய கிரகணம் உலகின் சில பகுதிகளுக்கு மட்டுமே தெரியும். ஆனால், முழு சந்திர கிரகணம் உலகில் இரவில் இருள் சூழ்ந்த பாதி புவிப் பகுதிக்கு தெரியும்.


சரித்திரத்தில் பதிவுடன் எழுத்துக்களில் பதித்த முதல் முழு சந்திர கிரகணம், சீனாவில் சோயூ வம்சத்தின் (Zhou Dynasty) சோயு-சூ புத்தகத்தில், கி. மு. 1136 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் நிகழ்ந்தாய் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆன்மீக கூறூவது?

சூரிய மண்டலத்தில் சூரியன்,சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்று வான் பொருட்கள் ஒரே நேர்கோட்டில் நிற்பதை கிரகணம் என்கிறோம். சூரிய சந்திரர்கள் எது ஒளியை பூமியிலிருந்து பார்க்க முடியாதோ அது கிரஹணம் அடைந்ததாக கூறப்படுகிறது. சூரியன் மறைக்கப்பட்டு சூரிய ஒளி தெரியவில்லை என்றால் சூரிய கிரகணம் என்றும், சந்திரன் ஒளி பெறாமல் இருளாக இருந்தால் சந்திர கிரகணம் என்றும் கூறுகிறோம்.


இந்த கிரகணம் மனிதனை எப்படி பாதிக்கும்? இதற்கு முதலில் மனித பிறப்பை பற்றிய விழிப்புணர்வு அவசியம். அண்ட வெளியில் எத்தகைய நிகழ்வுகள் இருந்தாலும் அதே நிகழ்வுகள் நமக்குள்ளும் நடக்கும் என்பதை உணர வேண்டியது அவசியம். பூமி மனித உடலையும், சந்திரன் மனதையும், சூரியன் ஆன்மாவையும் குறிக்கும். கிரஹங்கள் நேர்க்கோட்டில் வரும் நாளில் மனிதனின் மனம்,உடல் மற்றும் ஆன்மாவும் இயற்கையாகவே ஒன்றிணைந்துவிடும்


செயற்கையாக ஆன்மீக பயிற்சிகள் செய்து மனம்,உடல் ஆன்மாவை ஒன்றிணைப்பதை யோகம் என்கிறோம். ஆனால் இயற்கையே இதற்கு ஒரு உந்துதலாக இருந்து நம்மை இணைக்கிறது. அன்று அனைத்து ஜீவராசிகளும் தங்களை உயர்நிலைக்கு அழைத்து செல்ல தகுந்த நாளாக மாறிவிடுகிறது.


இதனால் தான் கிரகஹன காலத்தில் கோவில்களில் செல்லாமல் (கிரஹண நேரத்தில் கோவில் திறக்கப்படுவதில்லை..!.) நமது இருப்பை மட்டும் உணர சில தருணங்களை ஏற்படுத்தி தந்தார்கள்.


தற்காலத்தில் நவநாகரீகம் என்ற பெயரில் கிரஹணத்தை மக்கள் மதிப்பதில்லை. பறவை மற்றும் விலங்கின்ங்கள் கூட கிரஹணத்தான்று தன் இருப்பிட்த்தை விட்டு வெளிவருவதில்லை. அப்படி இருக்க மனிதன் தனது விழிப்புணர்வால் அதை உணர வேண்டமா? மனிதன் இயற்கையிலிருந்து பிரிந்து செயற்கையாக வாழ்கிறான் என்பதற்கு இதைவிட எடுத்துக்காட்டு வேண்டுமா?.


கிரஹண காலத்தில் சூரியனில் இருந்து வரும் கதிவீச்சு தற்காலிகமாக தடைசெய்யப்படுவதால், வான்வெளியிலிருந்து வரும் தீய கதிர்வீச்சுக்கள் நம்மை தாக்கும். அதனால் தான் கிரஹணம் அன்று நம்மை பாதுகாக்க சொன்னார்கள் நம் முன்னோர்கள். அறிவியல் அறிஞர்கள் முதலில் கதிர்வீச்சு வரும் எனும் விஷயத்தை மறுத்துவந்தார்கள் தற்சமயம் ஏற்றுக்கொண்டு அவர்களும் பாதுக்காப்பாக இருக்க பிரசாரம் செய்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.


தர்ப்பை, கம்பளி போன்ற பொருட்களுக்கு மின்கடத்தா சக்தி உண்டு. மேலும் கதிர்வீச்சை அதிகமாக கடத்தாது. அதனால் அப்பொருட்களை வைத்து நம்மை தற்காத்துக்கொள்ள சாஸ்திரங்கள் கூறுகிறது.


வருடத்திற்கு ஒரு முறை சூரிய கிரஹணம் ஏற்பட்டாலும் முழு சூரியகிரஹணம் சில வருடங்களுக்கு ஒருமுறைதான் நடைபெறும். அப்படி ஏற்படும் முழுசூரியகிரஹணமும் நாம் இருக்கும் தேசத்தில் தெரிவது போல அமைவது அதைவிட அரிது.


கிரஹண காலத்தை ஒருவித பயத்துடன் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. இறைவன் எத்தகைய சூழலையும் நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வழிகாட்டுகிறார். அதன் அடிப்படையில் கிரஹண காலத்தில் நமது உடல்-மனம்-ஆன்மா ஓன்றுபடுவதால் அன்று இறைவனை நாமத்தை ஜபம் செய்ய மிகசிறப்பான நாளாகும்.


மந்திர சாஸ்திரத்தில் ஜபம் செய்யும் காலத்தின் தன்மை எப்படி பலன் கொடுக்கிறது என்பதை கூறுகிறது. எல்லா நேரத்திலும் ஜபம் செய்தால் ஒருமடங்கு பலன், அதை சந்தியாகாலத்தில் செய்தால் பத்துமடங்கும். பிரம்ம முஹூர்த்தத்தில் செய்தால் நூறுமடங்கும், பெளர்ணமி அமாவாசை நாளில் செய்தால் ஆயிரம் மடங்கும், கிரஹண நாட்களில் செய்தால் லட்சம் மடங்கும் பலன் ஏற்படும் என கூறுகிறது.


ஒரு முறை மந்திரத்தை உட்சரித்தால் கிரஹணத்தன்று லட்சம் முறை சொல்லுவதற்கு சமம். அன்றே லட்சம் முறை உச்சரித்தால் ? யோசிக்க வேண்டும். மந்திர சித்தி பெறுபவர்கள் இந்த நாளை பயன்படுத்தி தங்களின் மந்திரத்தில் சித்தியடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் கிரஹணத்தன்று வெளியுலக விஷயங்களை செய்யக்கூடாது. உங்கள் ஆன்மீக விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்தலாம்.
முக்கியமாக கிரஹண நேரத்தில் செய்ய கூடாதது என சொன்னால் உணவருந்துவது, உணவை சமைப்பது, உடலுறவு மற்றும் உடலைவருத்தும் அனேக செயல்கள்.

செய்ய வேண்டியது பூஜை, தியானம், ஜபம் மற்றும் பித்ரு தர்ப்பணம்.


கிரஹண சமயத்தில் கடைபிடிக்க வேண்டியவை.
• கிரஹண நேரம் ஆரம்பிக்கும் பொழுதும் முடிந்த பிறகும் குளிக்கவும்.
• கிரஹண நேரத்திற்கு குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் முன்பு அல்லது பின்பு மட்டுமே உணவருந்த வேண்டும்.
• ஜீரண சக்திக்கு வேலை கொடுப்பதை தவிர்க்கவும்.
• தர்ப்பை வீட்டில் இருக்கும் நீர், தயிர் பொருட்கள், ஊறுகாய் போன்று கெட்டுப்போகும் பொருட்களில் இடவேண்டும்
• சூரிய கிரஹணம் என்பதால் கிரஹணம் ஆரம்பிக்கும் சமயம் பித்ரு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
• சூரிய கிரஹணத்தை கண்களால் பார்க்க கூடாது. நீரில் பிம்மம் விழுகவைத்து பார்க்கலாம். கண் கண்ணாடி அணிந்து பார்ப்பதையும் தவிர்க்கவும்.
• கிரஹண காலத்தில் தொடர்ந்து ஜபம் மற்றும் பாராயணம் செய்ய வேண்டும். வீண் பேச்சுக்கள் மற்றும் பொழுது போக்கு விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

பிரபஞ்சத்தில் நிகழும் எந்த ஒரு நிகழ்வுக்கும் ஒரு காரணம் இருக்கும். எந்த ஒரு விஷயமும் காரண காரியம் இல்லாமல் நடைபெறாது. அது போல சூரிய கிரஹணம் என்பது எதிர்காலத்தில் உலகில் நடக்க இருக்கும் சில சம்பவங்களை முன் கூறும் ஒரு நிகழ்வாக இருக்கிறது.


உலகின் எந்த பகுதியில் கிரஹணம் ஏற்படுகிறதோ அதற்கு நேர் எதிர்பகுதியில் இயற்கை சிற்றங்கள் நிகழும் என்கிறது சாஸ்த்திரம். இந்த வருடம் சூரிய கிரஹணம் நம் நாட்டில் நடக்கிறது.

இதற்கு எதிர் பூமி பகுதியில் இயற்கையின் சீற்றங்கள் நடைபெறலாம். அங்கே வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு நடக்காத வண்ணம் காக்க இறைவனை கிரஹணத்தின் தினத்தில் வேண்டுவோம். அன்று வேண்டுவது லட்சம் மடங்கு பலன் அல்லவா?


நன்றி

No comments:

Post a Comment