Wednesday, July 13, 2011

உணவு உண்ணல்

உண்பது பிராண அக்னி ஹோத்திரம்ன்னு சொல்கிறாங்க.

கை கால்கள் வாய் இவற்றை சுத்தம் செய்துகிட்டுதான் சாப்பிட உக்காரணும்.சாதாரணமாக இரண்டு வேளை சாப்பாடு சாஸ்திர சம்மதம்.
சந்தோஷமா சாப்பிடணும். கோபத்தோடயோ சண்டை போட்டுக்கிட்டோ சாப்பிட உக்காரக்கூடாது.

மற்றவர்களுக்கு உணவிட்ட பின்னே ஆசமனம் செய்து / நீர் அருந்தி விட்டு ஏகாந்தமாக அமரணும்; குறிப்பா அதிகமா சாப்பிடுகிறவர்கள். கால்கள் பூமியில் படுகிற மாதிரி உக்கரணும். மேல் துணி இருக்கணும்.
உட்காருகிற ஆசனம் மண்ணாலோ, பலாசத்தாலோ, இரும்பாலோ செய்ததா இருக்ககூடாது. பிளவு பட்டு இருக்கக்கூடாது.
தட்டு போடுகிற இடத்தை சுத்தம் செய்யணும்.

தட்டு தங்கம் (ஆஹா! அப்படி கொடுத்து வெச்சவங்க யாரும் உண்டா?!) வெள்ளி, வெண்கலம் (கிருஹஸ்தர்கள் மட்டும்) ஆகியவற்றில் இருக்கலாம். வாழை இலை மிக உசிதமானது. புரச இலை தாமரை இலை இவற்றை கிருஹஸ்தர் தவிர மத்தவங்க உபயோகிக்கலாம். (இந்த தையல் இலை என்கிறது புரச இலைகளால தைத்ததுதான்.)
இரும்பு (stainless steel), மண் பாத்திரம் (ceramic plate), உடைந்த பாத்திரம் இதெல்லாம் தவிர்க்கணும்.

அன்னம் பரிமாரிய பின் நீரால அதை பிரதக்ஷிணம் செய்து சற்று தெளிக்கணும். பரிசேஷணம் குல ஆசாரம். அதற்கு தனித்தனியாகவே நீரை எடுக்கணும். ஒரு உள்ளங்கை நீர் எடுத்து 3 சுத்து சுத்தி ப்ரோக்ஷணம் செய்வது கூடாது.
மற்றவர் நீர் ஊற்ற உள்ளங்கையில் கொஞ்சம் நீர் வாங்கிக்கொண்டு பருக வேண்டும்.
கொஞ்சம் கொஞ்சமாக நெய் கலந்த அன்னத்தை பல் படாம 5 பிராணன்களுக்கு ஆஹுதியாக விழுங்க வேண்டும்.
திரும்பியும் கொஞ்சம் நீர் வாங்கிக்கொண்டு பருக வேண்டும்.

கொஞ்சம் இருங்க, கொஞ்சம் அன்னத்தை எடுத்து தர்மராஜனுக்கு, சித்ரகுப்தனுக்கு, பிரேதங்களுக்கு என்று பலி வைக்க வேண்டும்.
அன்னத்தை வணங்கிய பின்னே சாப்பிட ஆரம்பிக்கலாம். சாப்பிடுகிறபோது அன்னத்தை இறைக்ககூடாது; திட்டக்கூடாது. “அன்னம் ந நிந்த்யாத்" என்பது உபநிஷத் வாக்கியம்.

மௌனமாகவே சாப்பிடணும். பேசிக்கொண்டே சாப்பிடுகிறவன் வாழ் நாளை ம்ருத்யு கொண்டு போகிறானாம். ஆனால் கிருஹஸ்தன் அவன் கூட சாப்பிடறவங்க இருந்தா, அவங்களை உபசரிப்பதற்காக பேசலாமாம். "அடியே, பக்கத்து இலைக்கு இன்னும் கொஞ்சம் பாயஸம்" என்பது போல சொல்லாம்! போடுகிற பதார்த்தங்களை வேண்டாம் என்றோ, போதும் என்றோ சொல்ல பேசலாம்

வாய் கொள்கிற அளவு எடுத்துக்கணும். அதை அப்படியே வாயில் இடணும். வாய்ல போட்டது திருப்பி இலைக்கு வரக்கூடாது. அதிகமாக எடுத்து வாயில போட்டு மீந்ததும், கடித்து மீந்ததும் இலைக்கு வரக்கூடாது.
சத்தம் போட்டு உறிஞ்சி கடித்து சாப்பிடக்கூடாது. இது போல சிலதை எடிகெட்ஸ் னு இப்ப கடைபிடிக்கிறாங்க.
தண்ணீரை தூக்கியே குடிக்கணும். குடித்து மீந்ததும், எச்சில் பட்டதும் திருப்பி குடிக்க உகந்தது இல்லை.


பலரும் பந்தியில சாப்பிடும் போது நடுல யாரும் எழுந்து போகக்கூடாது. அப்படி எழுந்தால் பந்தி முழுதும் எச்சிலாகும். ஒரு வேளை அவசியம் எழுந்துக்க வேண்டினால் பந்தியை பிரித்துவிட்டு எழுந்துக்கணும்.
சாப்பிடும் போது ஒத்தரை ஒத்தர் தொடக்கூடாது. இடது கையால் தானே பறிமாறிக்கொள்ளக்கூடாது. அப்படி செய்தா அந்த பாத்திரமும் எச்சிலாகும்.


சாதாரணமா இடது கையால எதுவும் குடிக்கக்கூடாது. சாப்பிடும் போது விதி விலக்கு. வலது கையால இலையை தொட்டுக்கொண்டு இடது கையால தண்ணீர் குடிக்கலாம்.


உப்பு, ஊறுகாய், காய்கறி, நெய், எண்ணை, பாயஸம் (நெறய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய மு.ப போட்டது, போடாதது எல்லாமே-) அன்னம் இதெல்லாம் கரண்டி இல்லாம பறிமாறக்கூடாது.


எண்ணையில் பக்குவம் செய்தவற்றை கையால போடலாம். பழம், பட்சணங்களை சிறுவர்களுக்கும் விருந்தினர்களுக்கும் போட்டு விட்டே, தான் போட்டுக்கொள்ளலாம்.


பாயஸம், நெய், தேன், தயிர், பழம் எல்லாம் மிச்சமில்லாமல் சாப்பிடலாம். மற்றதில் கொஞ்சம் கொஞ்சம் மிச்சம் வைக்கணும்

நின்று கொண்டு, நடந்து கொண்டு, தலையில் துணி கட்டிக்கொண்டு, தெற்கு முகமாக உட்கார்ந்து சாப்பிட்டால் அவன் உணவை ராக்ஷசர்கள் சாப்பிடுகிறர்கள்.

சாப்பிடும்போது கால்களை தொடக்கூடாது. கட்டிலிலோ கையில் வைத்துக்கொண்டோ சாப்பிடக்கூடாது. பாதுகை போட்டுக்கொண்டு சா.கூ. வண்டிகளில் இருந்து கொண்டு சா.கூ.காய்கள், வேர்கள், பழங்கள், கரும்பு - இதெல்லாம் பற்களால கடிச்சு சா.கூ. (துண்டாக்கி பரிமாறினால் பிரச்சினையே இல்லை.)

தவறி வெளியே விழுந்ததும் சாப்பிட தக்கதல்ல.

அசுத்தனாக எதையுமே சா.கூ. படுத்துக்கொண்டு; கால்களை நீட்டுக்கொண்டு; மனசை (ஏதேனும் படிக்கிறது போல) வேறு எங்கேயோ வைத்துக்கொண்டு; இப்படியெல்லாம் சாப்பிடக்கூடாது.

சந்தியா காலம், பிரதோஷ காலம், இருட்டில் விளக்கு இல்லாமல், இரவு பத்து மணிக்கு மேல்; இப்படியெல்லாம் சாப்பிடக்கூடாது.

அன்னத்தில் கேசம், எறும்பு, அசுத்தத்தில் வாழும் புழு இப்படி ஏதேனும் இருந்தால் அதனுடன் சம்பந்தப்பட்ட அன்னத்தை எடுத்துவிட வேண்டும். மீதியை பிறகு நீரால் தெளித்து எடுத்துக்கொள்ளலாம். கையில் எடுத்ததில் அசுத்தம் இருந்தால் அதை விட்டு விட வேண்டும். ஒரு வேளை அவை வாய்க்குள் போய் விட்டால் துப்பி விட்டு, தண்ணீரால் கொப்பளித்துவிட்டு, நெய் சாப்பிட வேண்டும்.

எவ்வளவு சாப்பிடலாம்?

பொதுவாக பசிக்கு தகுந்தபடி உணவு.

சன்னியாசி 8 கவளங்கள். வான பிரஸ்தன் (இப்ப ரிடயர்ட் ஆசாமி ) 16. க்ருஹஸ்தன் 32.
ப்ரஹ்மசாரி, அக்னிஹோத்திரம் செய்பவர், காளை மாடு இவர்களுக்கு இப்படி சட்ட திட்டமில்லை. ரெண்டு வேளை மட்டும் என்கிற சட்டம் கூட இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஏன்னா அப்படி தேவையான அளவு சாப்பிட்டாதான் அவங்க அவங்க வேலையை திறமையோட செய்ய முடியுமாம்.

ஏன் இப்படி சாப்பாட்டை பத்தி இவ்வளவு எழுதுகிறேன் என்று தோணலாம்.பல கர்மாக்களை செய்யாமல் இருக்கிறோம். சாப்பிடுவதை மட்டும் எப்படியும் செய்தே தீர வேண்டும் இல்லையா? அதனால செய்கிற இந்த கர்மாவை சரியாக செய்யலாமே என்னுதான்.

No comments:

Post a Comment