Tuesday, March 6, 2012

தினம் ஒரு திருமந்திரம்- 06/03/2012


        சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே
        சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா
        சூரியன் சந்நிதியிற் சுடுமாறுபோல்
       ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே (பாடல்117)

சூரியகாந்திக் கண்ணாடியாகிய குண்டலினியோக நெறி மூலம் குருவானவர் மனிதனின் (சிஷ்யனின்) மும்மலத்தினால் தோன்றும் கர்ம வினைகளைப் பொசுக்கி அவனை விடுதலை பெறச் செய்கிறார். இங்கு “ஆரியன்” என்றால் குரு என்று பொருள். ஆரியன் என்ற சொல் என்றுமே இனத்தைக் குறிக்கும் சொல் அல்ல.
சித்தர் மரபில் குருவிற்கு தனிச் சிறப்பிடம் வழங்கப்படுகிறது. சித்தர் மரபுப்படி குண்டலினி யோகமோ அல்லது அதுபோன்ற ஆன்மிகப் பயிற்சிகளோ குருமுகமாக மட்டுமே கற்றுணரத்தக்கவை. பெரும்பாலும் எல்லாச் சித்தர்களும் தங்களுடைய குரு பரம்பரையைப் பற்றிப் பேசுகிறார்கள். தமிழ்ச்சித்தர்கள் மூலவர்க்கம் என்ற ஒரு பரம்பரையைக் குறிப்பிடுகிறார்கள். இப்பரம்பரையில் கணபதியோ திருமூலரோ மூலகுருவாகக் கருதப்படுகிறார். பாலவர்க்கத்தில் முருகனே மூலகுருவாக விளங்குகிறான். கயிலாய வர்க்கத்தில் சிவபெருமானே குருநாதனாகத் திகழ்கிறான்.
திருமந்திரத்தில் 67ஆம் பாடல் குருபரம்பரை பற்றியும் 91ஆம் பாடல் திருமூலர் கயிலாய பரம்பரையில் தோன்றியவர் என்றும் கூறுகிறது. குருவே மோட்சத்தை அடைவதற்குரிய படிக்கட்டின் முதற்படியாக விளங்குகிறார். தாந்திரிக யோகமுறையில் குருவானவர் மனித வடிவில் தோன்றி சாதகனுக்குத் தந்திரப் பயிற்சிகளில் உதவுகிறார். அந்த வகையில் அவர் மிகவும் இன்றியமையாதவராக விளங்குகிறார். “குரு” என்னும் சம்ஸ்கிருதச் சொல் “கு” “ரு” என்ற இரண்டு சொற்களின் அடிப்படையில் தோன்றியதாகும். “கு” என்றால் இருள். “ரு” என்றால் ஒளி. குரு தன் சீடனின் அறியாமை இருளை அகற்றி உண்மை ஒளியைத் தோற்றுவிப்பவர். ஆன்மிகக் கண்களைத் திறந்து வைப்பவர்.

No comments:

Post a Comment